தீரா நோய்களைக் கொண்டவர்களுக்கு உதவும் மனிதர் - பிலிப் ஜெயக்குமார்

 








சிறிதே வெளிச்சம் !

நோய்மை ஒருவரது வாழ்க்கையை பெருமளவு மாற்றிவிடும். நோய்மையில் இருக்கும்போது மனிதன் தான் செய்த விஷயங்களை மீண்டும் அசை போட்டு தவறுகள் என்ன என்பதை அறியலாம். இந்த வகையில் நோய் ஏற்படும்போது மெல்ல மனமும் துவண்டுவிடும். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருப்பவர்களை அவர் என்றும் மறக்க முடியாது.

பிலிப் ஜெயக்குமார் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்து மீண்டவர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஒருமுறை அவரது கால்களை நகர்த்த முடியவில்லை. அதேநேரம் அவரது சிறுநீர் வெளியேற வைக்கப்பட்டிருந்த பை நிரம்பியிருந்தது. அப்போது அதை அகற்றினால்தான் மீண்டும் சிறுநீர் கழிக்கும் நிலை. பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளியின் உறவினர் பிலிப்பின் உதவிக்கு வந்தார். அவரது சிறுநீர் பையை கழிவறையில் கொட்டிவிட்டு காலிசெய்து உதவினார். 1993 -2003 வரையில்  மருத்துவமனையில் எலும்பு புற்றுநோயோடு போராடி மீண்டார். அந்த போராட்டம்தான் பிலிப்பின் வாழ்க்கையில் பிறரைப் பற்றிய அக்கறையை உருவாக்கியது. பின்னாளில் 2012ஆம் ஆண்டு, ஒண்டர்புல் சர்விங் ட்ரஸ்ட் என பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, குணமாகாத நோய் உள்ள நோயாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கத் தொடங்கினார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிலிப் நிறைய நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள், உணவுகளை வழங்குவது ஆகியவற்றை செய்து வருகிறார். அவர்களின் மல, ஜலத்தை சுத்தம் செய்வதையும் செய்கிறார். செய்யும் செயல்களை புன்னகை மாறாத முகத்துடன் செய்துவருகிறார். இருப்பதில் இதுதான் ஆச்சரியமானது.  நோயாளிகளின் நிலையைப் பொறுத்து சிலரை காப்பாற்ற முடிந்தாலும் பலரை காப்பாற்ற முடியாமல் போவது வேதனைதான்.. அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு நிதியுதவி செய்து நல்லடக்கம் செய்யும் பணிகளையும் பிலிப் ஜெயக்குமார் செய்து வருகிறார். இந்த நாள் ஒரு நோயாளியைப் பார்த்தேன். அவருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். அடுத்தநாள் பிறக்கும்போது இன்னொரு நோயாளியைப் பார்த்து அவருக்குத் தேவையான உதவியைச் செய்வேன் என புன்னகை மாறாத முகத்தோடு பேசுகிறார் பிலிப் ஜெயக்குமார்.

ஆங்கிலத்தில் காயத்ரி வெங்கடேசன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Image pixabay 


கருத்துகள்