வாழ்க்கையைக் காப்பாற்றும் பழக்க வழக்கங்கள்! - உடல், மனதின் இயல்பான பழக்கங்கள்

 

 

 

 

 


 

 

ஆபத்து கால நடவடிக்கைகள்!


உடலைப் பொறுத்தவரை ஆயுளுக்கும் நமக்கு பாதுகாவலராகவே செயல்படுகிறது. மிகவும் இக்கட்டான நேரம் என்றால் உடல் தானியங்கியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் இறங்கிவிடும். இதனை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நீரில் இறங்கினால், நீச்சலடிப்பது, நெருப்பைப் பார்த்தால் அது ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து எச்சரிக்கையாவது, நாய் துரத்தினால் இயல்பாகவே ஓடத் தயாராவது என சில விஷயங்களைக் குறிப்பிடலாம்.


நவீன நகர வாழ்க்கையில் இந்த செயல்பாடுகள் ஒருவரின் சிந்தனை வாழ்க்கை முறையைப் பொறுத்து மாற்றங்களை காண்கிறது. அடிப்படையில் தன்னைக் காத்துக்கொள்வதுதான் இதில் முக்கியமானது. அப்படி சில அம்சங்களை கீழே காண்போ்ம்


தாக்குதல் அல்லது தப்பித்தல்


ஆபத்து என்று வரும்போது ஒன்று அதனை எதிர்ப்பது அல்லது அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடுவது என இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க முடியும். அதுதான் விலங்காக இருந்து நாம் பெற்ற அடிப்படை இயல்பு. இன்று இதே அம்சம் வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. உடல் செல்களில் அதிகளவு ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது. இதனால் சில குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த வித சவால்களையும் சந்திப்பதற்கு தயாராகிறது. வலியும் கூட பொறுத்துக்கொள்ள முடியும்.


மலர்ச்சி தரும் சூரியன்


புதிய விடியல் என்பது மக்களுக்கு மட்டுமல்ல, நமது உடல்நலன், மனநலனிற்கும் முக்கியமானது. சூரிய வெளிச்சம் என்பது தினசரி நமது உடலில் படுவது முக்கியம். அப்போதுதான் மூளையில் செரடோனின் எனும் வேதிப்பொருள் சுரக்கும். இதுதான் மனதில் உள்ள அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருந்தால் இயல்பாகவே மன நலனில் பாதிப்பு ஏற்படும். அதனை தவிர்க்க முடிந்தளவு சிறிதுநேரம் சூரிய வெளிச்சம் உடல் முழுக்க ஊடுருவ அனுமதிப்பது அவசியம். இதற்கு அதிகாலை சூரிய வெளிச்சம் போதுமானது. அதிகளவு சூரிய வெளிச்சம் உடலில் பட்டால் அது தோல் புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.


கவனம்


வேலையாகட்டும், பேருந்தில், ரயில் ஏறும்போது, சாலையைக் கடப்பது என எந்த இடத்திலும் முக்கியமானது கவனம். இப்படி கவனமாக இருப்பது, எப்போதும் ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்ட விழிப்புணர்ச்சியால் ஏற்படுகிறது. இதனை ஒருவர் தவிர்க்கிறார் என்றால் அவர் மனதில் வேறு விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் கவனம் முழுக்க நிலத்தில் இல்லை என்று புரிந்துகொள்ளலாம்.


உன் வாசமே எனது சுவாசம்


ஒருவர் இன்னொருவர் மீது ஈர்க்கப்பட மரபணுக்கள் முக்கியமான காரணம் என அறிவியல் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. குறிப்பாக ஒருவர் பிறர் உடல் மீது உருவாகும் வாசனை காரணமாக ஈர்க்கப்படுகிறார் என்கிறார்கள். இதனால்தான் ஒருவரின் நினைவை கொள்ள அவர் அணிந்த டீ ஷர்ட் வாசம் போதுமானதாக இருக்கிறது. மனதில் கொள்ளவேண்டியது இருக்கிறது, இது அடிப்படையானது என்றாலும் இதைத்தாண்டியும் பிற பாலினத்தவரை ஈர்க்க மற்ற சமாச்சாரங்கள் வலிமையாக இருக்கவேண்டும்.


சுத்தமாக இருங்கள்


இதனை யாருமே விதியாக கூறமுடியாது. ஆனால் முடிந்தவரை குளிப்பதால் நேர விரயம் என பெரியார் போல கூறிக்கொண்டு அதனை தவிர்ப்பவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அடிக்கும் வெயில் காரணமாக குளிப்பது, துவைப்பது என அனைத்துமே முக்கியம். அப்போதுதான் உடலிலுள்ள தேவையில்லாத இறந்துபோன செல்கள், பாக்டீரீயாக்கள் வெளியேறும். இதனை தொடர்ச்சியான பழக்கமாக கடைபிடித்தால் உங்கள் வேலை செய்யும் முறையே கூட மாறும்.


அலறும் குழந்தை


உரத்த குரலில் அலறும் குழந்தைகளை முதலில் சமாளிக்க கற்பதே பெரிய விஷயம். ஆனால் வேறு வழியில்லை. முதிர்ச்சி பெறும் வரையில் குழந்தைகளை பெற்றோர் பார்த்து பராமரித்தே ஆகவேண்டும். பசிக்கிறதா, அம்மாவின் பாதுகாப்பு வேண்டுமா என அனைத்துக்கும் ஒரே ஒலிதான். அதுவே, அழுகையாக ஒலிக்கிறது. தங்கள் குழந்தைகளை வளர்க்கும் அனுபவத்தில் பெற்றோருக்கு தூங்கமிழந்த இரவுகள் எப்போதும் நினைவிருக்கும். பிற விலங்குகளைப் போல பிறந்தவுடனே தன்னைக் காத்துக்கொள்ளும் திறன் பாலூட்டி இனத்தில் குழந்தைகளுக்கு கிடையாது.


இனிப்பே போதும்!


எப்போதும் நம்மில் பலருக்கும் இனிப்பு என்றால் பிடிக்கிறது என யோசித்திருக்கிறோமா? இனிப்பு என்றால் நல்லது கசப்பு என்றால் விஷம் என்பது ஆதிகாலத்திலிருந்தே நமது உடலில் பதிய வைக்க்ப்பட்டுள்ளது. எனவேதான், கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு சுவை கொண்ட உணவு பண்டங்கள் உணவுத்தட்டிலிருந்து தூரமாகவே வைக்கப்பட்டுள்ளன. பல்லாண்டுகளாக உணவு தேடி அலைந்து கசப்பான உணவு உண்டவர்கள் நச்சு காரணமாக இறந்துபோனதால் ஏற்பட்ட நினைவுகளாக இருக்கலாம். அந்த நினைவுகள் மரபணுக்களில் புதைக்கப்பட்டுள்ளன என்பதால் பாகற்காயே ஆனாலும் கூட கசப்பை எப்போதும் ஏற்க முடியவில்லை.


தூக்கமே வா!


எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் கூட இரவில் ஏழு மணிநேரம் தூங்குவது அவசியம். அப்படி தூங்காதபோது பகலில் முக்கியமான வேலைகள் செய்யும்போது தூக்கம் வரும். குறிப்பாக வாகனங்களை ஓட்டும்போது வரும் மைக்ரோநாப் எனும் தூக்கம், அவரை மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பிறரையும் நிரந்தரமாக கல்லறைக்குள் தூங்கவைத்துவிடும் வாய்ப்புள்ளது. எனவே, சரியான தூக்கம் என்பது தொடர்புடையவருக்கு மட்டுமல்ல அவரை சுற்றியுள்ளவருக்கும் நல்லது.


பிபிசி






கருத்துகள்