எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

 

 

 

 

 

Fantasy, Science Fiction, Girl, Woman, Female, Portrait

 

 

எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன்


நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம், நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான். இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது. இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான், ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது.


இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன. ஒன்று பாசல் கங்குலியா, அடுத்து செரிபெல்லம். அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும். அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன. போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான்.


சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும். விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம். அப்படியில்லாதபோது விளையாட்டு நம் கையைவிட்டு போய்விடும். டென்னிஸ், பேஸ்பால், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளை விளையாடும் வீரர்களின் மூளை, பிறரை விட சில பகுதிகள் சற்று பெரிதாக இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துதது. இப்போதைய தேவை இப்படிஎன நாம் கூறினாலும் அடிப்படையில் கணிக்கும் திறன் என்பது பூமியில் நம்மை நாம் பிழைத்திருக்க செய்யும் திறமை எனலாம்.


முடிவெடுப்பது எப்படி?


தினசரி இட்லி சாப்பிடுவதா, பொங்கலை சாப்பிடலாமா, குறுக்குவழியில் சென்று போக்குவரத்து நெரிசலை சமாளிக்கலாமா என பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறோம். உடனே எடுக்கவேண்டிய முடிவுகள் தொடங்கி எதிர்காலத்தை மாற்றும் முடிவுகள் வரை அனைத்தும் முக்கியமானவைதான். ஆன்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ், ஆர்பிட்டோபிரான்டல் கார்டெக்ஸ் ஆகிய பகுதிகள்தான் மனிதர்கள் முடிவு எடுப்பதற்கு காரணமாக உள்ளன. இதில் உணர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பதற்கான அம்சங்களும் உள்ளன.


விபத்துகளில் ஆன்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ் பகுதி அடிபட்டால், ஒருவரின் முடிவெடுக்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படும். 1848ஆம் ஆண்டு பினியஸ் கேஜ் என்பவரின் தலையில் ஒரு மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பி தாக்கி துளைத்தது. இறக்காமல் அவரை காப்பாற்றினாலும் கூட அவரின் ஆளுமை, குணங்கள் ஆகியவை விபத்துக்கு முன்னர், பின்னர் என நிறைய மாற்றங்களைச் சந்தித்துவிட்டது.


1980ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் பெஞ்சமின் லிபெத் என்பவர், ஒருவர் முடிவு எடுப்பதற்கு முன் மூளையில் மின்தூண்டல் ஏற்படுகிறதா என்பதை ஆராய்ந்தார். இதில் வெளியிடப்பட்ட முடிவுகள் சர்ச்சைக்குரியதாக விமர்சிக்கப்பட்டன. இந்த முறையை ஜான் ஹைலன் ஹெய்னஸ் என்ற ஆராய்ச்சியாளர் மேம்படுத்தினார். இதில் 14 பேர் பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர். இதன் விளைவாக, மனிதர்கள் முடிவு எடுப்பதில் நம்பிக்கை முக்கியமான பங்காற்றுகிறதா, மூளையில் எந்த பகுதி முக்கியப் பங்காற்றுகிறது என்பது பற்றிய பல்வேறு கேள்விகள் எழுப்ப ப்பட்டன.


பிபிசி





கருத்துகள்