வயிற்றில் சுடப்பட்டால் வாயில் எப்படி ரத்தம் வரும்? - லாஜிக் மேஜிக் - பதில் சொல்லுங்க ப்ரோ? @ ரோனி

 

 








https://farm5.static.flickr.com/4092/5076540001_09e33feee5.jpg







பதில் சொல்லுங்க ப்ரோ? @ ரோனி




ஹாலிவுட் படத்தில் நாயகனை எங்கு சுட்டாலும் வாயில் வாந்தி எடுக்கிறாரே எப்படி நடக்கிறது அந்த மேஜிக்?


ஒருவரை வயிற்றில் சுட்டால் நிச்சயம் வாயில் ரத்த வாந்தி எடுக்கமாட்டார். வயிற்றின் உள்ளே ரத்தக்கசிவு இருக்கும். அப்படியும் வாயில் குடம் குடமாக ரத்தம் கொட்டுகிறது என்றால் அவரது நுரையீரல் காயம்பட்டிருக்கிறது என்று பொருள். அங்கு ரத்தம் கசிவதால் மூச்சு, வாய் என அனைத்திலும் பொங்கல் பானையில் நுரை பொங்கி வருவது போல ரத்தம் பொங்குகிறது. அதிலும் மனவலிமை குறையாத நாயகன், நாலைந்து பக்கங்களுக்கு வசனம் வேறு பேசிவிட்டு சாவார்.


வயிற்றில் துப்பாக்கி குண்டு பட்டு வாயில் ரத்தம் வந்தால் அதனை ஹீமாடெமெசிஸ் என்கிறார்கள். அதுவே நுரையீரல் காயம்பட்டு இருமலோடு ரத்தம் வந்தால் அதற்கு ஹீமோடைசிஸ் என்று பெயர். நாயகன் மீது இரக்கம் வருவதற்காக, அல்லது வில்லன் மீது உனக்கு இது சரியான தண்டனைடா என நாம் சொல்லும்படி ரத்தத்தை பம்பு செட்டு தண்ணீர் போல மோட்டார் வைத்து இறைக்கிறார்கள். அதைப்பார்த்து ரசிகர்களுக்கும் புயல்கால மழையாய் கண்ணீர் வருகிறது.



சைக்கோவா இருப்பதை ஒருவர் அறியாமலேயே வாழ முடியுமா?


அமெரிக்க திரைப்படங்கள், திரில்லர் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு பயத்தில் இப்படி நீங்கள் கேள்விகள் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவன் பெரிய சைக்கோ என பெரும்பாலான ஆட்கள் யாரை சொல்வார்கள் தெரியுமா? நிர்வாகத்தில் பிறரை மேலாண்மை செய்பவர்களைத்தான். அவர்கள் தான் பிறரது சுதந்திரத்தை பிடுங்குவது, வேலை செய்யும் இடத்தில் கேமரா வைத்து கண்காணிப்பது, விடுமுறை கொடுக்கமாட்டேன் என அடம் பிடிப்பது, இன்க்ரிமெண்டுக்கு ஆப்பு வைத்து சிரிப்பது. வேலை இரவு வரை நீட்டிப்பது, வார விடுமுறையில் கூட வேலையைக் கொடுப்பது மாதிரி வில்லத்தனம் செய்வார்கள். இதில் அவர்கள் அதிகம் ஸ்கோர் செய்வார்கள் கூடத்தான்.


அடிப்படையில் இவர்களை அடையாளம் காணுவதற்கு அசுரகுலம் நூலை வாங்கிப் படியுங்கள். இல்லையென்றாலும் அடிப்படையாக குணங்கள் மூன்றுதான். அதீத சுயநலமாக யோசிப்பார்கள். பிறரது கஷ்டங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பார்கள். பயமே கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம் என்பதே இருக்காது. மிகவும் சரியாக வெளியில் நடந்துகொள்வார்கள். ஆனால் சரியான இரை அமையும்போது, அதுவும் பெண்களாக அமைந்தால் வேட்டைதான். ஆவேசமான பிறரை துன்புறுத்தும் குணத்தை முகமூடிக்கு பின்னால் வைத்திருப்பார்கள். பொதுவாக போர்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோல சிக்கலான நிலை ஏற்படலாம். இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர்ந்து ஆலோசனை பெறாதபோது வெற்றிகரமான சைக்கோ என பட்டம் கொடுக்கும் அளவுக்கு மனநிலை மாறியிருக்கும்.


பூமி வேகமாக சுற்றுகிறதா?


கடந்த ஆண்டில் வேகமாக சுற்றுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதனால் என்ன பாதிப்புகள் பூமிக்கு ஏற்படும் என்பதை அறிவியல் பூர்வமாக கூற ஆதாரங்கள் ஏதுமில்லை. தன்னைத்தானே சுற்றிவருவதில்தான் இருபத்தி நான்கு மணி நேரம் என்ற கணக்கு டாலியாகிறது. இப்படி சுற்றுவதில் ஒத்திசைவை எதிர்பார்க்க முடியாது. வேகமாக சுற்றுவதால்தான் வட, தென் துருவங்களில் பனிக்கட்டிகள் உருகுகின்றன என பீதியை சிலர் கிளப்புகின்றனர். செயற்கைக்கோள்கள், கண்காணிப்பு மையங்கள் என நாம் தொழில்நுட்ப சிறப்புத்தன்மை கொண்டுள்ளதால் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை.


தடுப்பூசி போட்டால் சிலருக்கு மட்டும் பக்கவிளைவுகள் பயங்கரமாக இருக்கிறதே ப்ரோ?


அதற்கு காரணம் கர்மா என்று நினைத்துவிடாதீர்கள். இதனை அறிவியலில் மரபணு, நோய்எதிர்ப்பு சக்தி, அவரைத் தாக்கிய நோய்கள் என வரலாற்றையே தோண்டிப்பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடியும். உணவு, மருந்து ஆகியவற்றைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஒன்றுபோல செயல்படுவதில்லை. தடுப்பூசியும் அப்படித்தான். நோய் எதிர்ப்பு சக்தி கூர்மையாக உள்ளவர்களுக்கு பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும். எனவேதான் வெளிநாடுகளில் 50 பிளஸ் ஆட்களுக்கு தடுப்பூசிகளை உடனே வழங்கினர். ஆண்களை விட பெண்களுக்கு டபுள் எக்ஸ் மரபணுக்கள் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பளீரென இருக்கும். இதனால் தடுப்பூசி போடப்படும்போது அதற்கு எதிரான விளைவுகள் தீவிரமாக இருக்கு்ம் வயதானவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும். தடுப்பூசியே போடமாட்டேன் என்பவர்களுக்கு பக்கவிளைவு கிடையாது. நேரடி விளைவாக மரணம் ஏற்படலாம்.

bbc









கருத்துகள்