கிழிந்து தொங்கும் சுயசார்பு இந்தியா திட்டம்!- ஆக்சிஜன் கொடுப்பது எப்படி?

 

 

 

 https://nationalviews.com/wp-content/uploads/2016/10/narendra-modi-chest-thumping-cartoon-satish-acharya-600x381.jpg

 

 

 

 

ஆத்மா நிர்பாரத மிஷன்


கடந்த ஆண்டு மே 12இல் பிரதமர் மோடி, ஐந்து அம்சங்களைச் சொல்லி ஆத்மாநிர்பாரத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகம் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடங்களில் சுயசார்பும் ஒன்று. இதனை ஈஷாபந்தா என்ற நூலில் கூட கூறியிருக்கிறார்கள். தன்னிறைவு பெற்ற இந்தியா என்பது அதுதான் என பேசினார். அதற்குப்பிறகு மத்திய அரசு அறிவிக்கும் நிதிசார்ந்த திட்டங்களுக்கு சுயசார்பு, தன்னிறைவு ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அக்டோபர், நவம்பரில் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பிறகு கொரோனா பாதிப்பு ஒருநாளுக்கு மூன்றரை லட்சம் பேரை பாதித்தவுடனே ஆத்மாநிர்பார் கோஷங்கள் தடுமாறத் தொடங்கின.


உடனே இந்திய அரசு தனது சொந்த நாட்டு பெருமைகளை ஒரம்கட்டிவிட்டு அமெரிக்க வழங்கிய நூறு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளைப் பெற்றது. இதில் ஆயிரம் சிலிண்டர்கள், 15 மில்லியன் என்15 மாஸ்குகள், ஒரு மில்லியன் சோதனைக் கருவிகள் உள்ளடக்கம். இருபது முதல் முப்பது மில்லியன் தடுப்பூசிகள் ஆஸ்ட்ராஜெனகாவும் அடங்கும். இதோடு சீனாவும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்தது. எல்லைப் பிரச்னை காரணமாக அந்நாட்டிலிருந்து எந்த பொருட்களையும் ஏற்க கூடாது என எதிர்ப்பு கிளம்ப, அந்த உதவியும் கைவிடப்பட்டிருக்கிறது.


இந்தியாவில் பேரிடர்கள் ஏற்படுவதும் அதற்கு வெளிநாடுகள் உதவுவதும் புதிதான ஒன்றல்ல. ஆனால் திடீரென இந்தியப் பெருமை இதற்கு குறுக்கே வருவது மக்களின் உயிருக்கு ஆபத்தானது.1993இல் லத்தூர் நிலநடுக்கம், 2003இல் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட புயல் ஆகியவற்றின் காரணமாக உலக நாடுகளில் இந்தியா உதவி பெற்று சமாளித்தது. 2004ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங், பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு பிறநாட்டின் உதவிகளைப் பெறாமல் இருக்குமாறு திட்டங்களை உருவாக்கினர்.


இந்த வகையில்தான் இருபது ஆண்டுகளாக இந்தியா செயல்பட்டு வந்தது. 2018இல் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு அரபு அமீரகம் 700 கோடி ரூபாயை வழங்க முன்வந்தது. அதில்தான் மாற்றங்கள் ஏற்பட்டன. பிஎம்கேர் எனும் திட்டத்தை மோடி உருவாக்கினார். இதில் வெளிநாட்டினரும் கூட பணத்தை அனுப்பி வைக்கலாம். மத்திய அரசு கேரளத்திற்கு பெரியளவு உதவிகளை செய்யவில்லை என்று விமர்சனங்கள் கிளம்பின.


சுயசார்பு என்பது எளிமையான ஒன்றல்ல. எதிர்காலத்தின் தேவைகளை இன்றே கண்டுபிடித்து அதற்கேற்ப அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். ஆதார வளங்களை உருவாக்கவேண்டும். செப்டம்பர் மாதத்தின் நடுவில் கோவிட் அதிகரிக்கத் தொடங்கியது. இது நாட்டில் நிலவும் நோய்த்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நோய்த்தொற்று பாதிப்பை இந்தியா கண்டுகொள்ளவில்லை. முதலில் ஏற்பட்ட நோய்த்தொற்றை கட்டுப்படுத்திய இந்திய அரசு அதன் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்தது. ஆனால் இரண்டாவது அலை பாதிப்பை பிரதமர் மோடி தலைமையிலான அரசு அடையாளம் காணத் தவறிவிட்டது. இதன் பாதிப்பு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது.


இந்தியாவின் அடிப்படை மருத்துவக்கட்டமைப்பே இருக்கிறதா, இல்லையா என்று அச்சமுறும்படி நோய்த்தொற்று எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. முறையான சிகிச்சை, சிலிண்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் என எதை தேடினாலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஏராளமானோருக்கு சுடுகாட்டில் டோக்கன் போட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்தியாஸ்பென்ட் வலைத்தளம் டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை கோவிட் மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஆறு சதவீதமாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 9 தேதி நிலவரப்படி ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்ட படுக்கைகள் இரண்டு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்து நூற்று அறுபத்து எட்டு ஆக இருந்தது. கடந்த ஆண்டில் மே மாதத்தில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாகவே இருந்தது.


ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள், நோய்த்தொற்று முடிந்துவிட்டதாக கருதி புதிதாக எதுவும் தொடங்கப்படவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம் என்று கருதி தயாராக இருப்பதுதான் பேரிடர் மேலாண்மை. இந்தியாவில் தினசரி ஆக்சிஜன் தயாரிப்பு 7,127 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஏப்ரல் 12ஆம் தேதி வாக்கில் ஆக்சிஜன் தேவை 3,842 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால் இந்திய அரசு நோய்த்தொற்று நிலையை கவனிக்காததால் ஆக்சிஜன் தேவை 8 ஆயிரம் மெட்ரிக் டன்களாக உயர்ந்தது. இது தினசரி தேவையாக மாறியதை அரசு எதிர்பார்க்கவில்லை.


இதுபோல உள்நாட்டு தடுப்பூசி நிறுவனங்களான சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களில் தடுப்பூசிகளின் தயாரிப்பும் வேகப்படுத்தப்படவில்லை. ஒருநாளுக்கு 80 மில்லியன் டோஸ்களுக்கு அதிகமாக தயாரிக்கும் திறன் கொண்ட நிறுவனங்கள் இவை. இவற்றிலிருந்து அரசு பெற்ற தடுப்பூசிகள் மூலம் பத்து சதவீத மக்களுக்கு கூட தடுப்பூசிகளை செலுத்த முடியவில்லை. இந்த வேகத்தில் அரசு சென்றால், 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த பதினைந்து மாதங்கள் தேவைப்படும். இப்போதே பத்து மாநிலங்கள் தங்களது தடுப்பூசி திட்டங்களை தட்டுப்பாடு ஏற்பட நிறுத்தி வைத்துள்ளன. இனி அரசு என்ன செய்யும், இறக்குமதி அல்லது மானிய உதவிகளைப் பெறுமா?


ஐந்து லட்சம் ஐசியூ படுக்கைகள், ஒன்றரை லட்சம் மருத்துவர்கள், இரண்டு லட்சம் நர்ஸ்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவற்றை அரசு இறக்குமதி செய்யமுடியாது.



இந்தியன் எக்ஸ்பிரஸ்


குர்பிர் சிங்


 

 

கருத்துகள்