நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் மின்னூல் வெளியீடு!

 

 

 

 

 


 

 

 
நடனமாடிக்கொண்டே விழும் இலைகள்

மின்னூல் வெளியீடு


இந்த நூலை எழுதுவதற்கான சிந்தனை, தென்கொரியக் கவிஞரான கோயுன் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது உருவானது. இணையத்தில் சற்று எளிமையான பௌத்த நூல்கள் ஏதேனும் கிடைக்குமா என தேடத் தொடங்கினேன். அப்படித்தான் தம்மிகா என்ற பௌத்த துறவியின் நூல் கிடைத்தது. அவரது நூல் ஏற்கெனவே இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் பற்றிய குறிப்பில், அவர் எழுதிய சிறிய நூல், செவ்வியல் தன்மை கொண்டது என புகழப்பட்டிருந்தது. மதம் சார்ந்த இலக்கியங்களில் செவ்வியல்தன்மை என புரிந்துகொண்டால் சரி.

என்னுடைய புரிதலுக்கு ஏற்றபடி நூலை எழுதியிருக்கிறேன். பிறரோடு ஒப்பீடு செய்துகொள்ள விரும்பவில்லை. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு நூலுக்கு மொழிபெயர்ப்பு வரவேண்டும். இச்செயல்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான், அந்த நூல் காலத்திற்கேற்ப மாறுதல்களை சமாளித்து உயிர்வாழும்.

இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் ஆகியவற்றில் இருந்து பௌத்தம் வேறுபட்டிருப்பதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர், ஓஷோ ஆகியோர் தங்களது பல நூல்களில் விளக்கி எழுதியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் அளவுக்கு ஆய்வு செய்யாமல், சற்று எளிமையாக புரியும் வண்ணம் பௌத்த நெறிகளை விளக்கினால் என்ன என்று தோன்றியது. சில பௌத்த நூல்களை இலவசமாக வாசிக்க, தரவிறக்கிக்கொள்ள அனுமதிக்கும் தளங்களுக்கு சென்று தேடி தம்மிகா எழுதிய நூலைப் பெற்றேன். இந்த நூல் காப்புரிமை சிக்கலும் இல்லாத ஒன்று. சிங்கப்பூர் மடாலயம் வெளியிட்டுள்ள ஆங்கில மூலநூலில் ஒரே ஒரு விதி கூறப்பட்டிருந்தது. நூலை மொழிபெயர்த்தால் அதில் ஐந்து பிரதிகளை அனுப்பி வையுங்கள் என தம்மிகா கூறியிருந்தார். மின்னூலை எப்படி ஐந்து பிரதிகள் அனுப்புவது என தெரியவில்லை.

இந்து மதம் எந்தளவு நிறுவன மதமாக, அடக்குமுறைகளைக் கொண்டதாக மாறுகிறதோ அந்தளவு பௌத்த மதத்திற்கு மக்கள் மடைமாறி தங்களது சுயமரியாதையை, சொத்துக்களை காத்துக்கொள்ள முயல்வார்கள். பாதை பலவாயினும் நோக்கம் ஒன்றுதான். அரசியலுக்குள் மதத்தைக் கொண்டு வந்தது, மகாத்மா காந்தி. இப்படி செய்வது நிறைய பிரச்னைகளைக் கொண்டுவரும் என எச்சரித்த ஒரே நபர் முகமது அலி ஜின்னா. பின்னாளில், அவரும் காந்தியின் மத அரசியல் பாதையில் தன்னை நடத்திப்போக நேரிட்டது துயரம் என்றுதான் கூறவேண்டும். காந்தி செய்த மக்கள் ஒருங்கிணைப்பு செயல்களின் விளைவாக, நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் அதற்கு பிறகு நடைபெற்ற விஷயங்கள் நாட்டின் ஒற்றுமையை பெரிதும் குலைத்துவிட்டன. இன்றைக்கு மதவாத நெருப்பு, பற்றிக்கொண்ட நாட்டில் காட்டில் விலங்குகளுக்கு பயந்து பதற்றத்துடன் வாழும் ஆதிகால சூழ்நிலை உருவாகியுள்ளது.

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் நூல், பௌத்த மத நெறிகள், அதைப்பற்றிய அறியாமையை அகற்றும் இயல்பில் பதில்களைக் கொண்டது. நூல் கேள்வி, பதில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பௌத்த மத புனித நூல்களை ஆர்வம் உள்ளவர்கள் வாசிப்பார்கள். அந்த வாசிப்பு, பொது வாசகர்களுக்கானது இல்லை. எளிதில் சோர்ந்து கண் அயர்ந்துவிட வாய்ப்புள்ளது. இந்த நூல், அந்த பிரச்னைகளை நீக்குகிறது.

சிறிய கேள்விகளின் வழியாகவே பௌத்த மதத்தின் வரலாறு, அடிப்படை நெறிகள், செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என அனைத்தும் விளக்கப்படுகிறது. இது தொடக்கம் மட்டும்தான். பௌத்த மதம் சார்ந்து வாசிக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு, இணையத்தில் இலவச நூல்களே கடலளவு கிடைக்கும். விசாரணை செய்தபிறகு அந்த வழியில் பயணிக்கலாம். அமேசானில் உள்ள நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!

மங்க் எக்யோ


நூலை வாசிக்க

https://www.amazon.in/dp/B0D8Y441BS
 

நன்றி
இரா.முருகானந்தம்
தாராபுரம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்