பிட்ஸ்!





பூச்சி ஆராய்ச்சியாளர்!

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக  ஆய்வுகள், ஒளிப்படங்கள் வழியாக பூச்சிகளின் உலகை பதிவு செய்த 'பூச்சி' வெங்கட்(எஸ்.வெங்கட்ராமன்) அண்மையில் காலகிரியா பதிப்பகம் வழியாக 'Insects - Guardians of Nature' என்ற தான் எழுதிய நூலை வெளியிட்டுள்ளார். "புக் எழுத கேட்டதும் ஒரு வாரம் டைம் கேட்டு அப்புறம்தான் எழுதலாமே எனக்கே நம்பிக்கை வந்தப்புறமாத்தான் எழுதினேன்" என உற்சாகமாக பேசுகிறார் வெங்கட்.

பூச்சிகளைப்(வெட்டுக்கிளி,வண்டு,,தேனீ) பற்றிய டெக்னிக்கல் நூல் எழுத விரும்பாததால், பூச்சிகளின் அறிவியல் பெயர்கள் கூட இந்நூலில் கிடையாது. "பூச்சிகளின் அழகை சுவரில் மாட்டி மக்கள் ரசிக்கவேண்டும். அவ்வளவுதான் என் ஆசை. அறிவியல் தகவல்களை எழுதினால் எளிய மக்களுக்கு அதனைப் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் என்று சொல்லி பதிப்பாளரையும் சம்மதிக்க வைத்தேன்" என்னும் 'பூச்சி' வெங்கட் சென்னை கிண்டி தேசியப்பூங்கா, செம்பரம்பாக்கம் ஏரி,நன்மங்கலம்,ஈசிஆர் ஆகிய இடங்களில் தேடி நிறைய பூச்சிகளை கேமராவில் பதிவு செய்துள்ளார்.  


 ஸ்மார்ட் போன் கடல் சுரங்கம்!

ஜப்பானின் ஓகினாவா கடலில் துத்தநாகம் மற்றும் தங்கம் எடுப்பதற்கான சுரங்கத்தை அரசு அமைத்துள்ளது. கடலில் சுரங்கம் என்பதை சாத்தியப்படுத்திய முதல் முயற்சி இது. துத்தநாகம், நிக்கல், செம்பு மற்றும் பிற அரிய கனிமங்களை எடுத்து ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் பயன்படுத்தவிருக்கின்றனர்.

"கடலில் நிலத்தட்டுகளில் ஏற்படும் பிளவுகளால் ஏற்படும் வெந்நீர் ஊற்றுகளில் கனிமங்கள் வெளிப்படுகின்றன. பூமியில் இதுபோல 500 வெந்நீர் ஊற்று பிளவுகள் உள்ளன" என்கிறார் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஆன்ட்ரூ தாலர். 1970 ஆம் ஆண்டில் Hydrothermalvent எனும் வெந்நீர் ஊற்று பிளவுகள் கண்டறியப்பட்டன.

2014 ஆம் ஆண்டு ஜப்பான் 4,70,121 மெட்ரிக் டன்கள் துத்தநாகத்தை சுரங்கங்களிலிருந்து பெற்றுள்ளது. "கடல்சுரங்கத்தின் அமைப்பு குறித்து முழுமையாக தெரியவில்லை. எனவே இது சூழலுக்கு ஆபத்தானது என்று கூறமுடியாது" என்கிறார் ட்யூக் பல்கலையின் கடல் அறிவியல்துறை பேராசிரியர் சிண்டி லீ வான் டோவர். வெந்நீர் ஊற்றின் வழியே ஆர்சனிக், லெட் ஆகிய நச்சுப்பொருட்களும் வெளிவருவதால், சுரங்கத்தில் ஏற்படும் பாதிப்புகள் கடல் உயிரிகளை பாதிக்கும் என எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள்.

 ஒலியும் ஒளியும் கண்ணாடி!

செவித்திறனற்றவர்களுக்கு ஒலியை, ஒளியாக மாற்றும் கண்ணாடியை சிங்கப்பூரின் டெக்னாலஜி மற்றும் டிசைன் பல்கலைக்கழக(SUTD) ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெரி எனப்படும் கருவியை கண்ணாடியில் பொருத்தி ஒலியை ஒளியாக மாற்றும் இந்த புதுமை கண்டுபிடிப்புக்கு வீடியோ கேம்களே இன்ஸ்பிரேஷன். தற்போது பெரியின் மாடல்களில் மைக்ரோபோன்கள், எல்இடி லைட்டுகள் பொருத்தப்பட்டு டெஸ்ட்கள் நடைபெற்று வந்தாலும் ஜேம்ஸ் டைசன் என்ஜினியரிங் விருது வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. உலகில் 360 மில்லியனில் 5% பேர் செவித்திறன் பாதிப்பு கொண்டவர்கள் குறிப்பாக 32 மில்லியன் குழந்தைகள் உள்ளடங்குவர் என்கிறது WHO அறிக்கை. "விரைவில் சோதனை முடிந்து மார்க்கெட்டிற்கு கொண்டு வருவோம்" என நம்பிக்கை தருகிறார் பல்கலைக்குழுவின் டிசைனரான பவித்திரன் பாக்கியநாதன்.   


பலூன் சாட்டிலைட்!

அமெரிக்காவின அரிசோனாவைச் சேர்ந்த வேர்ல்ட்வியூ நிறுவனம், பூமியை கண்காணிக்கும்
stratollite எனும் பலூனை அண்மையில் நான்கு நாட்கள் வானில் சோதனை செய்துள்ளது. ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கிலிருந்து 20 கி.மீ தூரத்தில் சென்சார்கள், கேமராக்களோடு உலகை கவனிக்கும் பலூன் சேட்டிலைட் இது.

வானிலை, தொலைத்தொடர்பு, பேரிடர்பணி ஆகியவற்றில் பயன்படும் இந்த பலூன் சேட்டிலைட்டை டக்ஸனிலுள்ள வேர்ல்ட் வியூ தலைமையகத்திலிருந்து  75 ஆயிரம் அடி தூரத்தில் பறக்கவிட்டனர். "இத்திட்டம் மூலம் பூமி குறித்த பல்வேறு தகவல்களை நாம் அறியமுடியும்" என்கிறார் வேர்ல்ட்வியூ நிறுவனத்தின் தலைவரான ஜேய் பாய்ன்டர். 50.6 மெகாபிக்ஸல் கேமராவோடு சுற்றுப்புறத்தை படம்பிடித்த பலூன் சாட்டிலைட் உதவியுடன் போதைமருந்து கடத்தலை தடுக்கலாம் என்பது ராணுவத்தினரின் எண்ணம். வாயேஜர் எனும் டூர் நிகழ்ச்சியும் வேர்ல்ட்வியூ நிறுவனம் நடத்துகிறது. டிக்கெட் விலை 75 ஆயிரம் டாலர்கள். 

தொகுப்பு: மிடோரி, டோரு வாட்டனபி