தற்கொலையைத் தூண்டுகிறதா ஸ்மார்ட்போன்?





தற்கொலையைத் தூண்டுகிறதா ஸ்மார்ட்போன்? -.அன்பரசு

இப்போதுதான் ஆக்ரோஷ தாண்டவம் ஆடிய ப்ளூவேல் பூதம் விழிப்புணர்வு மூலமாக கன்ட்ரோலாகி இருக்கிறது. அதற்குள் ஸ்மார்ட்போன்களின் மூலமாக டீன் ஏஜினருக்கு ஏற்படும் மன அழுத்த தற்கொலைகள் உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் கனெக்டிகட்டைச் சேர்ந்த ஹைஸ்கூல் மாணவியான நினா லாங்டன், எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஜாலி கோழி. ஆனால் அப்படிப்பட்ட பெண்ணான நினாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதை அவரது பெற்றோரும், நண்பர்களாலும் கூட முதலில் நம்ப முடியவில்லை. "எனக்குள் மெல்ல சோகம் உருவாகி மன அழுத்தமாக மாறியது எப்படி என இன்னுமே ஆச்சரியமாக இருக்கிறது" என தெளிவாக பேசுகிறார் நினா

தொடர்ச்சியான கவுன்சலிங் தெரபிகள் நினாவின் முகத்தில் சோகம் துடைத்து மலர்ச்சியைக் கொண்டுவந்திருக்கின்றன. தற்கொலை அட்டெம்ப்ட்டுக்கு காரணம் நினா, தான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் மாடலிங் பெண்களின் உடல் போல தன் உடல் டோன்ட்டு ஷேப்பாக இல்லையே என தாழ்வுணர்ச்சி கொண்டதுதான். இது நினாவின் கதை மட்டுமல்ல; உலகிலுள்ள ஜென் Z தலைமுறையினர் பலரும் ஏறத்தாழ இதே சிச்சுவேஷனில் தவிக்கிறார்கள். நினாவின் கதை முதலில் நமக்கு தெரிந்துவிட்டது அவ்வளவுதான் வித்தியாசம். டிவி, வீடியோகேம்ஸ் கடந்து ஃபேஸ்புக், ஸ்னாப்சாட்,இன்ஸ்டாகிராம் ஆகியவை டீன்ஏஜ் இளைஞர்களின் மனதிலும் அறிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள் சுகாதார சேவைத்துறை(HHS) செய்த ஆய்வில், 13%(17,000) டீன் ஏஜினர் மன அழுத்த பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் இதன் அளவு 8%. அதிலும் 10-19 வயதுக்கு இடைப்பட்டவர்களின் தற்கொலை அளவும் ஷார்ப்பாக அதிகரித்து வருவது ப்யூச்சர் பயங்கரம்.

"2010 ஆம் ஆண்டுக்கு பிறகு டிஜிட்டல் பொருட்களுடன் இளைஞர்கள் செலவழிக்கும் நேரம் அதிகரித்துள்ளதை என்பதை மன அழுத்தம்,தற்கொலை ஆகியவற்றோடு இணைத்தால் மட்டுமே விளைவின் தீவிரம் உங்களுக்கு புரியும்" என தீர்க்கமாக பேசுகிறார் சாண்டியாகோ பல்கலைக்கழக பேராசிரியரான ஜீன் ட்வெங்கே. இவர் 2010-2015 வரையில் 5 லட்சம் இளைஞர்களிடம் செய்த சர்வேயில், மூன்று மற்றும் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக போன்களை பயன்படுத்துபவர்களுக்கு 34%-48% அளவில் தற்கொலை எண்ணங்கள் ஊற்றெடுப்பதாக கண்டுபிடித்திருக்கிறார் பேராசிரியர் ஜீன் ட்வெங்கே


போனில் "மெசேஜ், சாட்டிங், பேச்சு, வீடியோ என ஒரே நேரத்தில் ஹைப்பர் ஆக்டிவிட்டியில் மூழ்குபவர்களுக்கு மூளையிலுள்ள உணர்வுகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்ட Anterior Cingulate Cortex(ACC) மெல்ல மழுங்கிப்போவதோடு, சோஷியல் தளங்கள் மூளையில் டோபமைன் சுரப்பை அபரிமிதமாக்குவதால் ஸ்மார்ட்போன் கைவிடமுடியாத போதையாகிறது" என எச்சரிக்கிறார் ஜீன் ட்வெங்கே.

சின்ன வயசுலயே என் பையன் () பேரன் போனில் கேம் விளையாடுறான், போன் பண்ணுறான் என பெருமைப்படும் பெருசுகளும், பெற்றோர்களும் சமூகத்தில் தங்கள் பிள்ளைகள் பின்னாளில் ஒன்றுசேர முடியாமல் தனிமைப்பட்டு போவதை உணர்வதேயில்லை. "இளைஞர்களின் உணர்வு சார்ந்த விஷயங்கள் 20 வயதில் முழுமை பெற்றிருக்காது.அப்போது திடீரென அறிமுகமாகும் டிஜிட்டல் பொருட்களின் ஈர்ப்பு, அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் சான்ஸ் உண்டு" என்கிறார் கான்சாஸ் பல்கலையின் உளவியல் பேராசிரியர் பால் ஆட்செலி. மாணவர்களின் மீதான ஸ்மார்ட்போன்களின் பாதிப்பைக் கண்டு உஷாரான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், கேம்பஸ்களில் போன்களை பயன்படுத்தக்கூடாது என ரூல்ஸ்களை இறுக்கத் தொடங்கியுள்ளனர். "மனிதர்களின் பரிணாம வளர்ச்சி என்பது பேசுவது,தொடுவது உள்ளிட்டவற்றின் மூலமே சாத்தியமானது என்பதை மறந்துவிடக்கூடாது" என அலர்ட்டாய் எச்சரிக்கிறார் பிட்ஸ்பர்க் பல்கலையின் இயக்குநரான பிரையன் பிரைமேக்.
நினா மன அழுத்த பிரச்னையில் சிக்கி, தற்கொலைக்கு முயற்சி செய்தது அவரது பள்ளியில் இன்று கவர்ஸ்டோரி ஆகிவிட்டது. பிரச்னை குறித்து அவரது தோழிகள் நினாவிடம் தீவிரமாக விவாதிப்பது, மன அழுத்தம் அனைவருக்குமானதாக மாறிவிட்டதன் அறிகுறியே. "நான் பிரச்னையிலிருந்து சரியான டைமில் கவுன்சிலிங் மூலம் மீண்டுவிட்டேன் என்றாலும், அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இது குறித்து நாம் விரிவாக விவாதிக்கவேண்டிய நேரம் இதுவே" என தீர்க்கமாக சொல்லுகிறார் நினா.


வாழ்வா? சாவா?
அமெரிக்காவில் மனஅழுத்த விகிதம்(2010-2016) - 60%
ஸ்மார்ட்போன் கிடைக்கும் வயது - 10
 செல்போனால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள் - 48%(தினசரி 5 மணிநேரம்)

மகிழ்ச்சி நிச்சயம்!

பெட்ரூமில் கணினிகள்,ஸ்மார்ட்போன்களுக்கு தடா சொல்வது இன்ஸோம்னியா போன்ற பிரச்னைகளுக்கு குட்பை சொல்லும்.
ஸ்மார்ட் போன்களை சிறுவர்களுக்கு கொடுக்கும்போது, ஆபாச,சோஷியல்தளங்களை பார்க்கமுடியாமல் செட் செய்து கொடுக்கலாம். போனில் செலவு செய்யும் நேரத்தை குறைப்பதோடு அவர்களை கண்காணிப்பதும் அவசியம்.
வீட்டில் டைனிங் டேபிளில் ஸ்மார்ட் போன்களை குட்டீஸ்கள் பயன்படுத்தக்கூடாது என்று ரூல்ஸ் கொண்டு வந்தால், வயிறும் மனமும் உற்சாகத்தாலும் மகிழ்ச்சியாலும் நிறையும். அட்வைஸோடு பெற்றோரும் இதே விதிகளை ஃபாலோ செய்தால் அபார பயன்கள் தரும்.
பேசும் வசதி மட்டும் கொண்ட சிம்பிள் போனை மனமுவந்து சிறுவர்களுக்கு தரலாம். இதனால் போன்களிலேயே கண்களை மேயவிடாமல் மற்ற விஷயங்களை நம் செல்லங்கள் கவனிப்பார்கள்.

குறிப்பு: கட்டுரை அமெரிக்கப் பெண்ணின் பிரச்னையை மையமாக கொண்டாலும் உலகெங்கும் ஸ்மார்ட்போனால் ஏற்படும் பிரச்னைகளை பேசுகிறது.

 தொகுப்பு: ராஜேஷ் கிரிஷன், மனோதாரா