அவசர உதவியில் நெருப்பு பெண்கள்




அவசர உதவியில் நெருப்பு பெண்கள் - .அன்பரசு




இந்தியாவில் இயற்கை பேரிடர்களான சுனாமி, புயல், வெள்ளம், போர்வெல்லில் குழந்தைகள் மாட்டிக்கொள்வது, கிணற்றில் சிறுத்தை, பசு விழுவது என அத்தனைக்கும் தீர்வளிக்கும் சர்வரோக நிவாரணி நம்பர் 101. தகவல் கிடைத்தவுடன் மணி ஒலிக்க சாலைகளின் பாய்ந்து வந்து மக்களின் துயர் துடைக்கும் ஃபயர் சர்வீஸின் எண் இது. இப்பணி ஆண்களுக்கே மெகா டாஸ்க் பணி. இதில் பெண்களை நினைத்து பார்த்திருக்கிறீர்களா? மகாராஷ்டிரா அரசு, இந்தியாவில் முதல்முறையாக பெண்களை தீயணைப்புத்துறையில் சேர்த்து 130 ஆண்டுகால ஹிஸ்டரியை மாற்றியுள்ளது.



வயது 25. 172 செ.மீ உயரம் அவசியத்தேவை(162 செ.மீ மினிமம்) ஐம்பது கிலோ எடைக்கு நூறுகிராம் கூட குறையக்கூடாது. உடல்தகுதி தேர்வில் 200 மீ. தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து 19 அடி உயர கயிற்றில் நெவர் கிவ் அப் சொல்லி கிரிப்பாக மேலேறினால் இந்த நெருப்புடா வேலை கேரண்டி. இத்தனை டெஸ்ட்டுகளையும் கடந்துதான் 2011 ஆம் ஆண்டு சுனிதா பாபன் பாட்டீல் மும்பை தெற்குப்பகுதியிலுள்ள பைகுல்லா நகர தீயணைப்பு நிலையத்தில் வரலாற்றில் முதல் பெண் துணை அலுவலராக(ASO) செலக்ட் ஆனார்.

அரசின் நிலையான சம்பளம், எட்டுமணிநேர வேலை ஆகியவை இவ்வேலையின் ஆபத்துகளையும் தாண்டி இளைஞர்களை ஈர்த்து வருகிறது. தோலைப் பொசுக்கும் நெருப்பு, நுரையீரலை நெரிக்கும் புகை என எதுவாயினும்  ஆபத்திலுள்ள உயிர்களை காப்பாற்றுவதே லட்சியம் என தேர்வான எழுபது பெண்கள் தற்போது ஆறுமாத பயிற்சியிலுள்ளனர். மும்பையிலுள்ள 34 தீயணைப்பு நிலையங்களில் விரைவில் பணியாற்றவிருக்கிறார்கள் இந்த நெருப்பு பெண்கள்.



"சுனிதா வந்தபின் அவர் கூறியபடி பணியாற்றி விரைவில் ஒரே டீமாக ரெடியாகிவிட்டோம்" என சிரித்தபடி பேசும் சுபாங்கி போர், இவரது தோழியான சுனிதா பாட்டீல் இருவருமே வேதியியல் பட்டதாரிகள். புனேவில் வசித்த சுபாங்கி, டீமிலுள்ள ரோஹினி அவ்காட், சாயா பவார் ஆகியோர் நண்பர்களாலும் சொந்தங்களாலும் ஊக்கம் பெற்று தீயணைப்பு வீரர்களானவர்கள். பெண்களுக்கான சிரமங்கள் இருந்தாலும் பணியில் தம்மை நிரூபிப்பதற்கு ஒரே காரணம் இப்பெண்களின் வேலை மீது கொண்டுள்ள ஆர்வமும், அர்பணிப்பும்தான்.

"மும்பையில் இன்று முன்னெப்போதையும் விட வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது எங்கள் ஸ்டேஷனில் ஒரு படகு கூட இல்லை. ஆனால் இன்று எமர்ஜென்சியை சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொண்டுவிட்டோம்" என புன்னகையுடன் பேசுகிறார் 24 ஆண்டுகள் அனுபவசாலியான நிலைய தலைமை அதிகாரி பிரபாத் ரஹாங்கடேல்.

 மும்பையின் தெற்குப் பகுதியிலுள்ள பெந்தி பஜாரில் 117 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து 33 பேர் பலியான நிகழ்வில்தான் ஃபயர் சர்வீஸிலுள்ள பெண்கள் பிரிவினர் பற்றி பெரும்பாலான மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. "அங்கு எங்களைப் பார்த்து சிலர் அதிர்ச்சியானாலும் பலரும் எங்களது துணிச்சலான பணிகளைப் பாராட்டினார்கள்" என உற்சாகமாகிறார் சுனிதா பாட்டீல். ஆண்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் பெண்கள் சென்று தம் அணுகுமுறையால் சாதித்து வந்துள்ளனர். "எனது பணி அனுபவத்தில் கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளோம்" என தீர்க்கமான குரலில் பேசுகிறார் ரஹாங்கடேல். இந்த ஆண்டு மட்டுமே 774 நபர்களை தீயணைப்புத்துறைக்கு தேர்வு செய்துள்ளது இதற்கு சாம்பிள். தீயணைப்புத்துறை ட்ரெய்னிங் ஆண், பெண் என இருவருக்கும் ஒரேமாதிரிதான். பணிகளை இருபிரிவினரும் பகிர்ந்து செய்கிறார்கள். நாக்பூரிலுள்ள தேசிய தீயணைப்புசேவை கல்லூரியில் படிக்கும் பெண்களின் அளவு 10%, இவ்வாண்டு டிசம்பர் வரை பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்தான்.

தீபாவளி பண்டிகை சமயம் ஏற்படும் விபத்துகளை தடுக்க முன்கூட்டியே தயாராக இருக்கிறது மும்பை தீயணைப்பு மையத்தின் பெண்கள் படை.


மும்பை ஃபயர்சர்வீஸ்!

அதிகாரப்பூர்வ தொடக்கம் 1887 ஏப்ரல் 1. ஆனால் 1777 ஆம் ஆண்டே குதிரைகள் மற்றும் வண்டிகள் மூலம் தீயணைக்க உள்ளூர்காரர்களிடம் ரூ.4 கட்டணம் பெற்று செயல்பட்டுள்ளனர். 1865 ஆம் ஆண்டு பார்ட் டைமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையை பின்னாளில் முனிசிபாலிட்டி ஏற்க, 1887 ஆம் ஆண்டிலிருந்து வேகமாக செயல்படத்தொடங்கியது. 1890 இல் லண்டனைச்சேர்ந்த டபிள்யூ நிக்கோல்ஸ் என்பவர் மும்பை ஃபயர் சர்வீஸின் முதல் தலைவர். 1948 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற எம்.ஜி.பிரதான் தொடங்கி இந்தியர்கள் இந்நிறுவனத்தின் தலைமை ஏற்று வருகின்றனர். 34 ஸ்டேஷன்களில் 115 லாரிகளும், 15 ஆம்புலன்ஸ்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-20 தீவிபத்து பாதுகாப்பு வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.



சிக்கி முக்கி நெருப்பே!

தீ விபத்து(2015) - 18,450 20,377(2014)
இறப்பு, காயங்கள்- 17,700, 1,193
கட்டிட தீ விபத்து இறப்பு விகிதம் -42.1%
தீ விபத்துகளில் முதலிடம் - மகாராஷ்டிரா(4,087 விபத்துகள்)
தீவிபத்து மாநிலங்கள் - உத்தர்காண்ட் (87.7%),மேகாலயா(86.7%), ஜார்கண்ட், சண்டிகர்(83.3%), தெலுங்கானா(83),பஞ்சாப்(76.7%)
(National Crime Report Bureau 2015 தகவல்படி)

 தொகுப்பு: சாரநாத் பானர்ஜி, கா.சி.வின்சென்ட்