பார்டரில் ஒரு ஃபேன்டஸி உலகம்!






பார்டரில் ஒரு ஃபேன்டஸி உலகம்! - .அன்பரசு

ஃபாரீன் டூர்தான் ஆல்வேஸ் பரவசமா? உள்ளூரில் டிஸ்னி லேண்டை விட பரவசம் தரும் பல்வேறு ஃபேன்டஸி உலகங்கள் இந்தியாவில் உண்டு. அதில் ஒன்றுதான் கிழக்கு ஸ்காட்லாந்து என்ற செல்லப்பெயர் கொண்ட மேகாலயாவின் ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள டாகி நகரின் உமன்காட் நதி. இதுவரை நீங்கள் பார்த்திராத கிறிஸ்டல் கிளியரான தூய நதியும் கூடத்தான்.



உமன்காட் நதி படகு சவாரிக்கு ஃபேவரிட் ஸ்பாட் என்பதோடு இந்தியா மற்றும் வங்காளதேசம் என இரு நாட்டு மீனவர்களுக்கான மீன்பிடிக்கும் முக்கிய இடம். மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து 85 கி.மீ. பயணித்தால் கிழக்கு ஜெய்ன்டியா மலைத்தொடரிலுள்ள டாகி நகரை ஜம்மென மனம் நிறைக்கும் ஜில் காற்றோடு அடையலாம். வங்காளதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்திற்கு நெருக்கமான ஏரியா இது. இந்தியா, வங்காள தேசம் என இரு நாட்டிற்குமான முக்கிய வணிக நகரம் டாகி.
மேகாலயா - வங்காளதேசம் என இரு நாடுகளையும் இயற்கையாக உமன்காட் நதி பிரிக்கிற இடமிது. பாரம்பரிய பழங்குடிகளின் தேசமான மேகாலயாவில் அருவிகள், ஏரிகள் என உங்களின் மனதை நவரத்னா தைலம் போல சிலிர்ப்பாக்கி இதமாக்கும் ஸ்பாட்கள் ஏராளம் உண்டு

வங்கதேசம் - இந்தியா பார்டர் என்றால் குற்றங்கள் இல்லாமலா? மணல், கற்கள், பசுக்கள் இங்கு சட்டவிரோதமாக இங்கு கடத்தப்படுவதோடு, வங்கதேச மக்களின் இடம்பெயர்வும் இந்திய அரசுக்கு பெரும் தலைவலி தருகின்றவை. இந்திய அரசின் எல்லை பாதுகாப்புப்படையில் கிடுக்கிப்பிடி சோதனைகளால் சட்டவிரோத கடத்தல்கள் தற்போது தடைபட்டுவிட்டன. இங்கு பாதுகாப்பு படையினரின் செக்போஸ்ட் தமபில் என்ற நகரில் அமைந்துள்ளது என்றாலும் புகைப்படத்துடன் ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் இருந்தால் அதிக கேள்விகள் இருக்காது.  




நீலமும் பச்சையுமாக எமரால்டு நிற உமன்காட் நதியில் படகுகள் செல்வது பார்க்க நீருக்கு மேலாக காற்றில் பயணிப்பது போன்ற அற்புதக்காட்சி. பலர் படகுகளில் ஆங்காங்கே ஜென் நிலையில் நின்று ஆற அமர தூண்டில் போட்டு காத்திருந்து மீன் பிடிக்கின்றனர். காசி பகுதி படகுக்காரர்களிடம் வாடகை பேசி படகில் ஏறி அமர்ந்தால் துடுப்பசைவிலும் நம்முள் எழும் ஆச்சர்ய திகைப்பு கலைவதில்லை. படகுகளில் குழுவாக நின்று மீன்பிடிப்பவர்கள் சடக்கென தூண்டிலை இழுக்க, நிஜமாகவே பிடிப்பட்ட மீன் 4 கிலோ தேறும் சைசில் மிரட்டுகிறது. வங்கதேசத்தையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஆங்கிலேயரால் 1932 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இருபது நிமிடம் - ஒரு மணிநேரம் படகு சவாரியில் ஒரு படகில் நான்கு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. நதி வாட்டர் டயமண்டாய் மின்னுவதால் 20 அடி வரை நீரை துல்லியமாக பார்க்கலாம். மார்ச் - ஏப்ரல் சீசனில் இங்கு படகு போட்டிகள் நடைபெறும் என்பதால் சம்மரில் கூட்டம் அள்ளும். பொதுவாகவே டாகி நகர் ஆல் சீசன் டிலைட் ஏரியாதான். நவம்பர் - ஏப்ரல் மாதங்கள் டாகி நகரில் டூர் போக சரியான காலம். பருவகாலங்களில் உமன்காட் நதியில் வெள்ளம் எகிறும் என்பதால் போட்டிங் இருக்காது. மேலும் கடந்தாண்டே பிரதமர் மோடி - வங்காளதேச பிரதமர் ஹஸீனா ஆகியோர் குவகாத்தி- ஷில்லாங்- டாகி இடையிலான மலிவு விலை பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்து உள்ளதால் செலவுகள் மேக்சிமம் உங்கள் பர்ஸை கரைக்காது.


எப்படி செல்லலாம்?
ரயில் என்றால் குவகாத்தியில் இறங்கி பஸ், கார் பிடித்து டாகி, ஷில்லாங்க் செல்லலாம். பஸ் என்றால் குவகாத்தியின் ரயில்வே ஸ்டேஷனில் ஏறிக்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பஸ்களில் குவகாத்தியிலிருந்து ஷில்லாங் வரை செல்ல வசதி உண்டு. ஷில்லாங்கில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான பட்ஜெட் ஹோட்டல்கள் உண்டு. குவகாத்தியிலிருந்து ஷில்லாங் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது.

ஜமாய் டிஷ்கள்!
ஜாடோ, டொனெய்ஹாங், மாஹம் பிசி, ஜூர் சிதே ஆகிய சூப்பர் டிஷ்களோடு, டாகி நகரின் ஸ்பெஷல் ஆரஞ்சு பழங்கள் நீங்கள் மிஸ் செய்யக்கூடாதவை.

சுற்றுலா ஸ்பாட்கள்
ரூட் பிரிட்ஜ்(ட்ரைனா கிராமம்), கிரைம் பைல்யுட் குகை, மாலிநாங்(காசி மாவட்டம்), கிரெம் மாஸ்மாய் குகை, நோகலிகாய் அருவி, இகோ பார்க், மாஸ்மாய் அருவி, வகாபா அருவி, நோக்ரெக் பார்க், தாங்க்காரங் பார்க், டெய்ன்த்லென் அருவி

தொகுப்பு: தாரா, சிவரான்