முத்தாரம் ஒரு பக்கம்!




ஆர்கானிக் பேட்டரி!

இதயத்தில் பொருத்தப்படும் பேஸ்மேக்கரில் தற்போது பயன்படும் மெட்டல் பேட்டரியில் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். இதற்கு மாற்றாக அயர்லாந்தின் பெல்பாஸ்டிலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் டீம்,  ஆர்கானிக் பேட்டரியை தயாரித்துள்ளது.

மெட்டல் பேட்டரியை சிறிது காலத்திற்கு பிறகு அகற்றுவது அவசியம். புதிய ஆர்கானிக் பேட்டரி எளிதில் மறுசுழற்சி செய்ய முடிவதோடு, முந்தைய பேட்டரியை விட அதிக சக்தியை தேக்கிவைக்க கூடியது, நெருப்பில் எரியும் பிரச்னை, லீக்கேஜ் ஆகியவை இதில் கிடையாது.

"மெட்டல் பேட்டரிகளால் உடலில் அரிப்பு ஏற்படும் சிக்கல்கள், செல்லுலோஸால் உருவாகும் ஆர்கானிக் பேட்டரியில் கிடையாது. 270 டிகிரி செல்சியஸ் வரை இது வெப்பம் தாங்கும்" என்கிறார் ஆராய்ச்சிக்குழு தலைவர் கீதா னிவாசன். இந்த பேட்டரியை மேம்படுத்தி பிற எலக்ட்ரிக் பொருட்களில் பயன்படுத்தும் எண்ணமும் ஆராய்ச்சிக்குழுவுக்கு உள்ளது.


உலகின் மிகப்பெரிய விமானம்!

பல்லாண்டுகளாக தயாரிப்பில் இருந்த ஸ்ட்ராட்டோலாஞ்ச் விமானத்தின் எஞ்சின் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் இறக்கை கால்பந்து மைதானத்தை விட பெரியது. ராக்கெட்டுகளை பூமிக்கு வெளியே ஸ்ட்ராட்டோஸ்பியர் அடுக்கில் நிறுத்தும் பணியைச் செய்யும் விண்கல விமானம் இது.

மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனரான பால் ஜி ஆலனின் நிறுவனமான ஸ்ட்ராடோலாஞ்ச் வட்டப்பாதைக்கு செல்லும் விண்கல விமானத்தை கடந்த 7 ஆண்டுகளாக தயாரித்து வந்தது. 2019 இல் விண்ணில் செலுத்தும்படி விமானத்தை உருவாக்கி வந்த நிறுவனத்தைப் போலவே வர்ஜின் நிறுவனமும் விமானத்தை உருவாக்கி வருகிறது.
போயிங் 747-400 விமான எஞ்சினில் பிராட் அண்ட் வொய்ட்னி டர்பைன்ஃபேன் பயன்படுத்தப்பட்டு முதல்கட்ட எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. "வரும் மாதங்களில் எஞ்சின்களின் உச்சபட்ச ஆற்றலை வெளிப்படுத்தும்படி டெஸ்ட்கள் தொடரும்" என்கிறார் ஸ்ட்ராட்டோலாஞ்ச் நிறுவன இயக்குநரான ஜீன் ஃப்ளாய்டு.

எமர்ஜென்சி டிப்ஸ்கள்!

வீடு, ஆபீஸ் செல்வதற்கான மாற்று வழிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

வானிலை ஆராய்ச்சி மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(ndma.gov.in) மத்திய சுகாதாரத்துறை ஆகியோர் வெளியிடும் செய்திகளை கவனிப்பது பிரச்னைகளை தீர்க்கும்.

உணவு, டார்ச்லைட், பேட்டரிகள், பாய், போர்வை, நீர் ஆகியவை அத்தியாவசியமான பொருட்கள். "ஒருவருக்கு ஒருநாள் குடிநீர் தேவை 1.8 லிட்டர்கள். நீர் கலப்படத்தை தீர்க்க ஐயோடின் மாத்திரைகள் உதவும்"  என்கிறார் செஞ்சிலுவை சங்கத்தின் கய் லெபேஜ்.

புகைப்பட அடையாள ஆவணங்களை கவனமாக சேகரித்து வைத்துக்கொண்டு, அதனை ஸ்மார்ட் போனிலும் போட்டோ எடுத்தும், பீடிஎஃப் வடிவில் க்ளவுட் தளங்களில்(Dropbox,கூகுள் ட்ரைவ்) வைத்திருப்பது எமர்ஜென்சி பதட்டம் தணிக்கும்.

முதலுதவி, தீக்காயங்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களை கற்றிருப்பது குழந்தைகள் மற்றும் உடல்நிலை நலிந்த முதியோர்களை காக்க உதவும்.


 கொடியில் ஆயுதம்!

குவாத்திமாலா நாட்டின் போர் மற்றும் தேசியக்கொடியில் ரெமிங்டன் துப்பாக்கிகள் மற்றும் பாரம்பரிய வாள்கள் இடம்பெற்றுள்ளன. குடிமையியல் கொடியில் ஆயுதங்கள் கிடையாது.

அங்கோலா நாட்டின் கொடியில் வெட்டுக்கத்தி இடம்பெற்றிருப்பது எதற்கு? விவசாயத் தொழிலாளர்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை பிரதிபலிக்கத்தான். ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்து நாடுகளின் கொடியில் ஆயுதங்கள் உண்டு.

சவுதி அரேபியாவின் கொடியில் நீண்ட வாள் ஒன்று கீழே பொறிக்கப்பட்டிருக்கும். இது சவுதி அரேபியாவை முதன்முதலில் உருவாக்கிய மன்னரைக் கௌரவப்படுத்தவே.

ஸ்விட்சர்லாந்தின் கொடியில், Nguni எனும் கேடயமும், ஈட்டியும் அம்சமாக இடம்பிடித்திருப்பது, எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றத்தான்.

லங்காவின் கொடியில் தங்கநிற சிங்கம் கையில் சிங்களர்களின் ஆயுதமான Kastane வாளை கம்பீரமாக ஏந்தியிருக்கும்.  

 மெக்சிகோ நிலநடுக்க பின்னணி!

கடந்த மாதத்தில் மெக்சிகோவை உலுக்கியெடுத்த நிலநடுக்கத்திற்கு வட அமெரிக்கா, பசிபிக்,கரீபியன், கோகோஸ், லிவேரா ஆகிய நிலத்தட்டுகளுக்கும் தொடர்புள்ளது. ஆறு ரிக்டர்களையும் தாண்டிய நிலநடுக்க ஆபத்து, மெக்சிகோவுக்கு புதிதல்ல. மூன்று நிலநடுக்கங்களிலும் பாதிப்பு 500 மைல்கள் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் பைஜிஜியாபான்(8.1 ரிக்டர்), அடுத்து  பதினொரு நாட்கள் கழித்து அயூட்லா(7.1 ரிக்டர்), இதற்கடுத்து நான்கு நாட்கள் கழித்து மதியாஸ் ரோமெரோ(6.1 ரிக்டர்) என நிலநடுக்கம் சீரியலாக நடந்து கட்டிடங்களை நொறுக்கி, உயிர்ப்பலி வாங்கியது. காரணம் என்ன? வட அமெரிக்க நிலத்தட்டின் கீழ் கோகோஸ் நிலத்தட்டு அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட விசையால் உருவானதே மேற்சொன்ன முதல் இரண்டு நிலநடுக்கங்கள்.

5 முக்கிய நிலத்தட்டுகள் மெக்சிகோ மற்றும் மெக்சிகோ நகர் இருக்கும் பகுதியில் இருக்கும் பொசிஷன்கள்தான் பிரச்னைக்கு காரணம். அடுத்து, மெக்சிகோ நகரம் அமைந்திருப்பது பழைய ஏரியின் மேல் என்பது நிலநடுக்க ஆபத்தை மேலும் எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது.

தொகுப்பு: விக்டர் காமெஸி, நடேசன் சுப்பு