முத்தாரம் நேர்காணல்:பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத்தலைவர்




முத்தாரம் நேர்காணல்

"இந்திராகாந்தியின் முடிவு புத்திசாலித்தனமானதுதான்"
பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத்தலைவர்
தமிழில்:.அன்பரசு



இந்திராகாந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்து பின்னர், குடியரசுத்தலைவராகி ஓய்வு பெற்றுவிட்டாலும் நாளிதழ்களில் பேசப்படும் தலைவர்களின் ஒருவர் பிரணாப் முகர்ஜி. 'Coalition Years'  என்று அண்மையில் எழுதியுள்ள நூலில் காங்கிரஸ் ஆட்சியின் அனுபவங்களை எழுதியுள்ளார் பிரனாப். பதவிக்கால அனுபவங்களைப் பற்றி அவரிடம் உரையாடினோம்.

நீண்டகால அரசியல் அனுபவங்களை கொண்டவர் நீங்கள். அதில் முக்கிய நிகழ்வாக எதனைக் குறிப்பிடுவீர்கள்?

1971 ஆம் ஆண்டு நான் பொதுவாழ்வுக்கு வந்த சமயத்தில், வங்காளதேசம் 13 கோடி மக்களுடன் புதிதாக உருவானது. அன்றைய பிரதமரான இந்திராகாந்தி, "புதிய தேசமான வங்காளதேசத்தின் தலைநகரமாக டாக்கா செயல்படும். பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவிடம் சரண்டைந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்று இந்திராகாந்தி பேசிய தருணத்தை மறக்கவே முடியாது.

1971 ஆம் ஆண்டு இந்தியா வெற்றிபெற்றபிறகு, காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவின் எடுத்த முடிவு திருப்தியான ஒன்றுதானா?

இந்திராகாந்தி தன்னிச்சையாக போர்நிறுத்த முடிவை எடுத்தது புத்திசாலித்தனமானது. அப்படி எடுக்காவிட்டால் நிலைமை விபரீதமாகி இருக்கும். மேலும் பாகிஸ்தான், இந்தியா இருநாட்டின் போர் நீள்வதை ரஷ்யாவும், அமெரிக்காவும் விரும்பவில்லை.

நீங்கள் பிரதமராவதை தடுத்த அரசியல் காரணங்கள் என்ன?

நான் பிறந்து வளர்ந்த மாநிலத்தை 34 ஆண்டுகளாக இடதுசாரி அரசு ஆண்டது. இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுப்பவரின் கட்சி, அவரது மாநிலத்தை கூட ஆளவில்லை என்றால் எப்படி? மன்மோகன்சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, காங்கிரஸ் அரசு பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்தது.

2012 ஆம் ஆண்டு நிதி மசோதாவை ஒன்றை அறிமுகப்படுத்தியபோது, வோடஃபோன் நிறுவன அதிகாரிகள் உங்களை சந்தித்து, சட்டத்தை மாற்றக்கோரியதாக நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதுபற்றிக் கூறுங்கள்

நிதி மசோதா தயாரிப்பின்போது பல்துறையைச் சார்ந்தவர்களை சந்திப்பது இயல்பானதுதான். அவர்களின் கோரிக்கையை  சட்டத்திற்குட்பட்டு நிதியமைச்சர் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம். நான் செயல்பட்டது இம்முறையில்தான்.

நீங்கள் நிதியமைச்சராக செயல்பட்ட காலத்தில்தான் பணவீக்கத்தைக் குறைக்க நிதி ஊக்க செயல்பாடுகளை தொடங்கினீர்கள். பொருளாதாரத்தை அது தேக்கமாக்கும் என்று நீங்கள் யோசிக்கவில்லையா?

2008 ஆம் ஆண்டு உலகமெங்கும் பொருளாதார சிக்கல் பரவத்தொடங்கியது. அது தற்காலிகம் என்று முடிவு செய்து இடைக்கால பட்ஜெட்டை தயாரித்தோம். அப்போது எங்களை சந்தித்த தொழிலதிபர்கள் பலரும் விதிகளில் மாற்றம் தேவை என்றனர். அப்போது என்னிடம் மன்மோகன், சிதம்பரம்  ஆகியோர் தயாரித்த நிதி ஊக்க மசோதா தயாராகி இருந்தது. நிதி ஊக்க மசோதாவை பல்வேறு ஆய்வு,தயார்ப்படுத்தலுக்கு பின்னேதான் அறிவித்தோம். தற்போதைய சூழலை முழுக்க நான் அறியாததால் இதுபற்றி கருத்து கூற முடியாது.

கருணைமனுக்கள் மீது முடிவெடுக்க என்ன விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள்?

நான் தனிப்பட்டரீதியில் மரணதண்டனைக்கு எதிரானவன். ஆனால் இந்திய அரசின் சட்டப்படி சாட்சிகள், ஆதாரங்களை முன்வைத்து குற்றவாளி ஒருவருக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்துள்ள தீர்ப்பை நான் ஏன் மாற்றவேண்டும்? அப்படி எதிர்பார்ப்பது சரியான தன்மையல்ல

நன்றி: TOI Team(Diwakar,Rajeev,subodh,sidhartha,surojit)


நன்றி: முத்தாரம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ஜமீலா