காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

 








அன்டே சுந்தரானிக்கி

நானி, நஸ்ரியா

இயக்கம்

விவேக் ஆத்ரேயா

இசை 

விவேக் சாகர்





சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை. 

விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை. 

சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது. 




இதையும் படத்தில் கிண்டல் செய்திருக்கிறார்கள். 

சுந்தருக்கு பள்ளியில் கிடைக்கும் ஒரே ஆறுதல், லீலா தான். அவள்தான் அவனை கிண்டல் செய்யாமல் இருக்கிறாள். அவளும் பிறரால் ஒதுக்கி வைக்கப்படுபவள் தான். மதம், சாதி சார்ந்த பிரச்னைகள் மனிதர்களை எப்படி வெறுப்பிற்குள், பிடிவாதத்திற்குள் தள்ளுகிறது. இதனால் அவர்களைச் சார்ந்தவர்களின் முன்னேற்றமே கெடுகிறது எனவும் விவேக் ஆத்ரேயா பிரமாதமாக காட்டியிருக்கிறார். 

தெலுங்குபடம்தான். ஆனால் சொன்ன விஷயம் பிரமாதமாக இருக்கிறது. பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய  விஷயம் பிரமாதம். நானி இறுதிக்காட்சியில் லீலாவின் தந்தை தாமஸிடம் பேசுவது சிறப்பான வசனத்திற்கு சாட்சி. 

மனைவியோ காதலியோ யாராக இருந்தாலும் ஈகோவிட்டு அவர்களை பாராட்டும் குணம் கொண்ட சுந்தரைப் பார்த்து அவனது அம்மாவே நெக்குருகி நிற்கிறாள். அவனது அப்பாவைப் பொறுத்தவரை, சுந்தர் உண்மையை சொல்லியிருக்க கூடாது என நினைக்கிறார். ஆனால் அவனது பாட்டி இந்த வகையில் கருத்துகளை கேட்டு யோசித்து எடுக்கும் முடிவாக வரும் வீணை இசை அற்புதம். 




அன்பும் அங்கீகாரமும் மனித மனத்திற்கு போதுமானது என்பதை லீலாவின் பாத்திரம் காட்டுகிறது. சுந்தர் தான் தனக்கு சிறுவயதில் கிடைத்த ஒரே சந்தோஷத்திற்கு காரணம் என அவள் உணர்வது, மனம் திறந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்பது வரையில் துணிச்சலாக பாத்திர படைப்பு. அதற்கு நஸ்ரியா பிரமாதமான தேர்வு. நன்றாக நடித்திருக்கிறார்.

ரோகிணி பேசும் இறுதிப்பகுதி வசனம் அத்தனை நெகிழ்ச்சி, அத்தனை உண்மை. 

மதம், சாதி என்பதை விட ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் அக்கறைதான் காதல்தான் அன்புதான் முக்கியம் என சொல்லுகிற படம் தான் அன்டே சுந்தரானிக்கி...

ததாசுதேவரிடம் கவனமாக வேண்டுதல்களை வையுங்கள்!

கோமாளிமேடை டீம் 










கருத்துகள்