ஐஏஎஸ் சா, அப்பாவா முடிவெடுக்க தடுமாறும் மகன்! - போருகாடு -2008

 







போருடு

2008




அப்பா ரௌடி, மகன் குடிமைத்தேர்வில் வென்று நேர்காணலுக்கு செல்லவிருக்கிறார். இதுவே பொங்கலுக்கு வடகறி போல இருக்க, அவர்கள் வாழும் நகரில் உள்ள இரு மாஃபியா குழுக்களுக்கு இடையில் தகராறு. இதில் ஒரு குழுவில் நாயகனின் அப்பா இருக்க, வேறு என்ன நடக்கும்? அப்பாவுக்காக மகன், மகனுக்காக அப்பா என பாசம் ஆவேசம், ஆக்ரோஷத்தை வளர்க்க படம் 2.30 நிமிடம் ஓடுகிறது. 

படத்தில் முக்கியமானது அப்பாவுக்கும், மகனுக்குமான பாசம் நேசம் முரண்பாடுகள்தான். அப்பாவைப் பொறுத்தவரை தான் ஆதரவின்றி நிற்க, தன்னை பாதுகாத்து வளர்த்த நாயக் தெய்வம். எனவே, சுயமாக அறியாமலேயே நாயக்கின் சட்டவிரோத விஷயங்களுக்கு துணையாக நிற்கிறார். அப்பா பாண்டுவுக்கு விசுவாசம் முக்கியம். அவருக்கு மகன் படித்து வேலைக்கு எதற்கு போகவேண்டும்? தன் அருகில் இருந்தாலே போதும் என நினைக்கிறார். ஆனால் மகன் அஜய்யைப் பொறுத்தவரை அப்பா மீது பாசம் உண்டு, அக்கறை உண்டு. ஆனால் அவரின் முதலாளி மீது கிடையாது. அவரின் செயல்பாடுகளை அஜய் இறுதிவரை ஏற்பதும் இல்லை. 



ஐஏஎஸ் நேர்காணலுக்கான பயிற்சியில்...


தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு அதை பகுதிநேரமாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதே அஜய்க்கு பாக்கெட் மணி கிடைக்கும் வேலை. மீதி நேரம் குடிமைத்தேர்வுகளுக்கு படிக்கிறார். அதில் எழுத்து தேர்வுகளை கடந்து, டெல்லிக்கு நேர்காணல் செல்லும் நேரத்தில் அவரது அப்பா பாண்டு மீது தாக்குதல் நடக்கிறது. அதில் அஜய்யும் ஈடுபட்டு அப்பாவின் உயிர் காக்கிறார். விளைவாக பாண்டுவுக்கு எதிரியான இன்ஸ்பெக்டர் உசேன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார். 

இந்த நிலையில் பாண்டுவின் முதலாளிக்கு எதிரான காசி, பாண்டுவதை போட்டுத்தள்ள நினைக்கிறார். இதற்கும் நேரம் அமைகிறது. இதனால் கோபமாகும் அஜய், எதிரிகளை பழிவாங்கினாரா அல்லது டெல்லிக்கு விமானம் பிடித்தாரா என்பதே கதை. 

இதற்கிடையில் படத்தில் காஜல் அகர்வால் வேறு இருக்கிறார். அவர்தான் மணிசர்மாவை பாடல் போட வைக்கிறார். சற்றே ஆறுதலாக இருப்பது பாடல்கள் மட்டுமே. 

படத்தில் இன்ஸ்பெக்டர் உசேனாக சுப்புராஜ் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் முன்னணி பாத்திரங்கள் அனைவருமே சு தான். கெட்ட வார்த்தை அல்ல. சுமன், சுமந்த், சுப்புராஜ் என செல்கிறது. 

கொன்னே புடுவேன் பாத்துக்க...

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்