உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

 






தன் மீட்சி

ஜெயமோகன்

தன்னறம் நூல்வெளி


pinterest



இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது. 

இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார். 

இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. 

நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம். 

ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரேமாதிரியான விஷயங்கள். அலுவலக அரசியல், இலக்கிய ஈடுபாட்டினால் முடிவுகளை தொழில் வாழ்க்கையில் எடுக்க முடியாமல் தடுமாறுவது, தொழிலாக எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம், சோம்பலாக இருக்கிறது, மனம் குழப்பமாகி கவனம் சிதறிக்கொண்டே இருக்கிறது என பல்வேறான கேள்விகளுக்கு ஜெயமோகன் சலிக்காமல் பதில் சொல்கிறார். 

சில இடங்களில் மட்டும் முன்னமே இதற்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன் என்று கூறிவிட்டு பதில்களை சொல்லுகிறார். 

அனைத்து பதில்களும் வாசிப்பதற்கு சிறப்பாக உள்ளன. மனிதன் எப்படி பல்வேறு இடங்களிலும் பொறுப்புகளை ஏற்று அதனை நிறைவேற்றுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். தர்மம் காம ம், அர்த்தம், மோட்சம், சந்யாசம் ஆகியவற்றைப் பற்றி பேசியுள்ள கட்டுரை முக்கியமானது. இதில் ஒன்றுக்காக ஒன்றைக் கைவிட வேண்டியதில்லை என்பதை உறுதியாக சொல்லியுள்ளார். 

இதற்கான எடுத்துக்காட்டுகளை சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார். 

நூல்வாசிப்பதும் அதனால் சிந்திப்பதும் செயல்படுவதும் அதற்கான விலைமதிப்பாக பல்வேறு ஏளனங்களை சந்திப்பது பற்றியும் எழுதியுள்ள பகுதி முக்கியமானது. நூல் வாசிப்பது ஏன் சாதாரண மக்களிடையே ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது, உடனே கிண்டல் செய்யவும், வேலைக்கு செல் என்றும் பேசுகிறார்கள் என்பதைப் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ளது அனைத்தும் நிஜமானவை. அதேசமயம் நூல்களை வாசிப்பதும், தொழில்வாழ்க்கையில் சில விதிகளைக் கடைபிடிப்பதும் வேறானது. 

உலகியலுக்காக பொருள் தேடுவது அவசியம் என்னும் ஜெ. அதற்காக இதை , இதற்காக அதை என கைவிடக்கூடாது என்கிறார். அப்படி செய்யும்போது பின்னாளில் பொருளாதார அழுத்தங்களுக்காக இலக்கிய வாசிப்பை நூல் எழுதும் வேட்கையை கைவிடவேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார். எனவே, இந்த வகையில் இப்படி எழுத்தாளர் தனது வாழ்க்கை உதாரணங்களைக் காட்டி அந்த சூழலுக்கு எப்படி இருக்கவேண்டுமென கூறுவது முக்கியமானது. 

இவற்றை ஒருவர் எளிதாக வாசித்துக் கடக்க முடியாது. நூலின் மொத்த பக்கங்கள் 135தான். எனவே, தீர்க்கமாக படித்துவிடலாம் என உட்கார்ந்தால் எழும்போது வாசிப்பு மனநிறைவை அளிப்பதை உணர்வீர்கள். 

கோமாளிமேடை டீம் 

நூலை வாங்க...

http://thannaram.in/than_meetchi/






கருத்துகள்