"காலனியாதிக்கம் தாய்மொழியை அழிப்பது ஏன்?"- கூகிவா தியாங்கோ


Related image



முத்தாரம் நேர்காணல்

"தாய்மொழியில் எழுதுவது அவமானமல்ல''

கூகிவா தியாங்கோ, கென்யநாட்டு எழுத்தாளர்

தமிழில்: .அன்பரசு

நாவல்களை உங்களது தாய்மொழியில் எழுத தொடங்கியது ஏன்? அந்த எண்ணம் தோன்றியது எப்படி?

நான் முதலில் எனது நான்கு நாவல்களையும்(The River Between, Weep not Child, A Grain of Wheat, Pedals of Blood) ஆங்கிலத்தில்தான் எழுதினேன். 1977-78 ஆம் ஆண்டுகளில் மிகவும் கெடுபிடிகள் நிறைந்த சிறையில் அடைக்கப்பட்ட போது Ngaahika Ndeenda எனும் நாடகத்தை தாய்மொழியான G1 kuyu வில் எழுதினேன். காலனியாட்சி மற்றும் தாய்மொழி பற்றி சிந்தனை உருவானபின்தான் ஆங்கிலத்திலிருந்து எனது தாய்மொழிக்கு மாறினேன். முதல் நாவலை கழிவறைத் தாளில்தான் எழுதினேன். Caitaani mu tharabaini என்ற பெயரில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது அவமானமோ, வெட்கமோ தரும் ஒன்றல்ல.

உங்களைக் கவர்ந்த இந்திய எழுத்தாளர்களைப் பற்றி..?

ஆர்.கே. நாராயணன், முல்க்ராஜ் ஆனந்த், சல்மான் ருஷ்டி ஆகியோரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன்.

உங்களது படைப்புகளில் காலனியாதிக்கத்திற்கு பிறகான நிலைமைகளைப் பற்றி பேசுவதை விளக்க முடியுமா?

அரசியல் விஷயங்கள் நம் கையிலிருந்தாலும் பொருளாதார தூண்டில் மேற்கு நாடுகளிடம் இருக்கும். நாட்டின் மாற்றங்கள், திட்டங்களுக்கு மேற்கு நாடுகளின் கருணையை எதிர்பார்க்கும் நிலையை நவகாலனியம் எனலாம். உண்மையில் நம் மக்கள், அவர்களது கலாசாரம், மொழி ஆகியவையே நமது நாட்டின் தேவையை தீர்மானிக்கவேண்டும்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேற்கு நாடுகள் உதவியுள்ளதாக நினைக்கிறீர்களா?
மேற்குலகு ஆப்பிரிக்காவின் இயற்கை வளத்தை தொண்ணூறு சதவிகிதம் பயன்படுத்திவிட்டது. ஆனால் கயமைத்தனமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு மானியம் அளித்து உதவுவதாக கூறிக்கொள்வது அவர்களின் வழக்கம். இப்படி பேசுவதன் மூலம் தாம் ஏற்படுத்திய சீரழிவை இயல்பானதாக உலகின் பார்வைக்கு மேற்கு நாடுகள் மாற்றுகின்றன.

அண்மையில் இந்தியாவிற்கு நீங்கள் வந்தபோது என்ன உணர்ந்தீர்கள்?

தீர்க்கமாக இந்தியப்பரப்பை உள்வாங்குமளவு நான் இங்கு தங்கவில்லை. காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட தேசம், அதிலிருந்து விடுபட தவிப்பதை இந்தியாவில் பார்த்தேன். இன்றும் இங்கு தாய்மொழியைவிட ஆங்கிலம் முதன்மையாக உள்ளது. மொழிகளும் சமூகமும் ஒன்றிணைய முடியாமல் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாக இந்தியா உள்ளது. மக்களின் மனசாட்சியை, அறிவை ஒடுக்கிவிட்டால் அம்மக்களை கட்டுப்படுத்த காவல்துறையே தேவையில்லை. மொழி, கலாசாரம் ஆகியவற்றின் மீது பூஞ்சையாக படரும் நிலப்பிரபுத்துவ எண்ணத்தை வேரறுப்பதே மிக முக்கியம்.

விரைவில் வெளிவரவிருக்கும் Wrestling with the Devil என்ற நூலில் உங்கள் வாழ்க்கையைப் பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ள என்ன விஷயம் இருக்கிறது?

1977-78 வரையிலான ஓராண்டு சிறை அனுபவம்தான் இந்த நூல். கழிவறைத் தாளில் எழுதிய சிறைக்குறிப்புகளை சீர்திருத்தி தேவையற்றவற்றை நீக்கி பதிப்பித்துள்ள படைப்பு இது. சமூகத்தின் அநீதிக்கு எதிராக நாம் காட்டும் எதிர்ப்பு மட்டுமே நம்மை பூமியில் வாழவைக்கும் என்பதை கூறியிருக்கிறேன்.

நன்றி:Pradhuman sodha,Kyla Marshell TOI, theguardian.com