ப்ரே பண்ணுங்க இந்தியாவுக்காக!



Image result for rowan atkinson



கருப்பு தாஜ்மஹால்!

உலகளவில் புகழ்பெற்ற பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காதல் சின்னமான வெண்ணிற பளிங்குகல் தாஜ்மஹால் பலருக்கும் ஷாக் தரும் விதமாக மெல்ல கருப்புநிறமாக மாறிவருகிறது.


2015 ஆம் ஆண்டிலிருந்து தாஜ்மஹால் மீது களிமண் பூசி அதன் மீதான தூசு, கறைகளை நீக்க இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முயற்சித்துவருகிறது. தற்போது பெருகிவரும் பூச்சிகளில் கழிவுகளால் தாஜ்மஹால் தன் வெண்ணிறத்தை இழந்து கருப்பு மற்றும் பச்சை நிறமாக மாறிவருகிறது. "யமுனா ஆற்றின் மாசுபட்ட நீரில் உருவாகும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு இது" என்கிறார் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் வல்லுநரான கே.பட்நாகர். Goeldichironomous எனும் பூச்சிதான் தாக்குதலின் தளபதி. ஆண்டின் ஐந்து மாதங்களுக்கு தொடர் தாக்குதல் நடத்துவது இவ்வகை பூச்சியினம்தான். "தாஜ்மஹாலுக்கு வெளியே செயல்பட எங்களுக்கு அனுமதி இல்லை. இப்பிரச்னை பற்றி அரசுக்கு அறிகைக அனுப்பியுள்ளோம்" என்கிறார் பட்நாகர்

2

காவிமயமாகும் தியாகிகள்!

இந்திய சுதந்திரத்திற்காக ஜாதி, மதம் பார்க்காமல் உழைத்தவர்களை இன்று மதச்சாயம் பூசி அவமானப்படுத்திவருகிறது இனவாதக்குழு. அப்படி ஒன்றுதான் அண்மையில் பத்திரிகையாளர் நரேந்திர சேகல் எழுதியுள்ள புத்தகமும்.

சுதந்திரத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு பாடுபட்டதாக ஆகாசமளவு பொய் கூறும் இந்நூலில் சுதந்திரபோராட்ட வீரர் ராஜகுரு, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என சேகல் எழுதியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற அத்தியாயத்தில் சாண்டர்ஸை கொலைசெய்துவிட்டு ஆர்எஸ்எஸ்ஸின் தலைமையகமான நாக்பூருக்கு ராஜகுரு வருகை தந்ததாகவும், அவர் தங்க இடமளித்து ஹெட்கேவர் உதவியதாகவும் வரலாற்றை காவிக்கு மாற்றியுள்ளார் சேகல். "இது வரலாற்றை திரிக்கும் பலவீனமான முயற்சி" என்கிறார் அறிவியல் மற்றும் அரசியல் வரலாற்று பேராசிரியர் இர்ஃபான் ஹபீப்.


3

சாக்குப்பையில் 150 கோடி

பணம் எடுக்க சிறிய பேக்கோடு போகலாம் அல்லது அண்ணாச்சிகடை கவர் கூட ஓகே. ஆனால் கோணிச்சாக்கோடு போனால் எப்படி?

உத்தரப்பிரதேசத்தில்தான் இந்த கூத்து. அங்குள்ள கர்ரோட்டிலுள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்கு சென்ற மங்கள்சிங்கை வங்கியே விநோதமாக பார்த்தது. தன் கையில் கோணிச்சாக்குகளை வைத்திருந்த மங்கள்சிங், தன் கணக்கிலுள்ள 150 கோடி ரூபாயை எடுக்கப்போகிறேன் என வீராப்பாக சொல்லி சலான்களையும் நிரப்பத்தொடங்கிவிட்டார். வங்கி கேஷியரும், மேனேஜரும் மங்கள்சிங்கின் கணக்கை தோண்டித்துருவியதில் அதில் நயாபைசா கூட இல்லை என்பதும் 2016 ஆம் ஆண்டிலிருந்து கணக்கு இயக்கப்படவில்லை என்றும் தெரிந்தது. ஆனால் மங்கள்சிங் பணத்தை கொடுத்தால்தான் போவேன் என அடம்பிடிக்க போலீஸ் வந்தபின்தான் மங்கள்சிங் மனநிலை பாதிப்புக்குள்ளானவர் என தெரிந்திருக்கிறது. நீரவ்மோடிக்கு அடுத்தபடியாக நேர்மையாக கடன்கேட்டது மங்கள்சிங்தான்!  

4

இந்தியாவுக்காக பிரேயர்!

பீகாரிலுள்ள பக்ஸரைச்சேர்ந்த இளைஞர், ஹவ்ரா பாலத்தில் இந்தியர்களுக்காக செய்த தேசபக்தியுடன் செய்த பிரார்த்தனை களேபரத்தில் மக்களே மிரண்டு போய்விட்டனர்

பீகாரின் பக்ஸர் நகரிலுள்ள அருண்குமார் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக மதசம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டியவர் திடீரென ஹவ்ரா பிரிட்ஜின் மூன்றாவது தூணின் மேல் ஏறினார். குதித்துவிடுவாரோ என்று பீதியுடன் மக்கள் பார்க்க, "இந்தியர்களுக்காக நான் கங்கை தாயிடம் பிரார்த்திக்க போகிறேன்" என்றார். உடனே தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்கு வந்த கோலாபரி போலீஸ், "பிரேயரை ஏன் அருகிலுள்ள ஹாஸ்பிடலில் நோயாளிகளுக்காக செய்யக்கூடாது?" நைச்சியமாக பேச,அருண்குமார் பாலத்திலிருந்து இறங்கினார். லபக்கென பிடித்த போலீஸ் அவரை மருத்துவமனைக்கு ட்ரீட்மெண்டுக்கு அனுப்பியுள்ளது. வெயில் அதிகமானாலே இப்படித்தான்!