மிலிட்டரி வேலையை இந்தியர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்?



Image result for indian military



பதினோராயிரம்  கோடி வேண்டுமா?

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிப்படி பதினைந்து லட்சம் பணம் மக்களின் வங்கிக்கணக்குக்கு வரும் என வெயிட் செய்தால் பலருக்கும் கண்கள் பூத்துவிட்டன. ஐந்தாம் ஆண்டு ஆட்சியின் ஏப்ரல் ஒன்றாம் தேதியும் வரப்போகிறது. இந்திலையில்  யாரும் என்னுடைய பணம் என்று கோராத 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் 64 வங்கிகளில் உள்ளது என்றால் நம்புவீர்களா?

பாரதவங்கியில் 1,262 கோடி, பஞ்சாப் வங்கியில் 1,250 கோடி மற்றும் பிற தேசிய வங்கிகளில் 7,040 கோடி ரூபாய் யாரும் உரிமை கோராமல் தேங்கியுள்ளது. "பல்வேறு கணக்குகளை வைத்துள்ளவர்களின் கணக்குகள் அல்லது இறந்துபோனவர்களின் கணக்கு, பினாமி வழியில் என சேர்ந்த தொகை" என்கிறார் ரிசர்வ்வங்கியில் பணிபுரிந்தவரான சரண்சிங். வங்கிச்சட்டம் பிரிவு 26, 1949 படி, பத்தாண்டுகள் இயக்கப்படாத கணக்கு மூடப்படுவது ஆர்பிஐ வங்கிகளுக்கு பரிந்துரைக்கும் விதி. விதி 26ஏ படி உரிமைகோராத பணம் பத்தாண்டுகளுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வு நிதிக்காக இத்தொகை பயன்படுத்தப்படும் என ஆர்பிஐ தகவல் தெரிவிக்கிறது. தனியார் வங்கிகளில் மட்டும் 1,416 கோடி ரூபாய் பணம் யாருக்கும் பயனின்றி கிடக்கிறது.


2



தேர்வு தற்கொலைகள் உச்சம்!

இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை அளவு 2014-2016 ஆண்டு வரையில் 26 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது என தேசியக்குற்ற ஆணையத்தின் அறிக்கை(NCRB) தெரிவிக்கிறது.

"2016 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 1,350, மேற்கு வங்காளம் 1,147, தமிழ்நாடு 981, மத்தியப்பிரதேசம் 838 என்ற எண்ணிக்கையில் மாணவர்களின் தற்கொலை நிகழ்ந்துள்ளது" உள்துறை அமைச்சர் ஹன்ஸ்‌ராஜ் கங்காராம் அஹீர் உறுதி செய்துள்ளார். பறிபோன மாணவர்களின் உயிர்கள் 9,474(2016). உலகளவில் 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் விகிதம் இந்தியாவில் அதிகம். காரணம், தேர்வுகள்தான். குறிப்பாக மேல்படிப்புகளுக்கான தேர்வுகள், ஐஐடி போன்ற படிப்புகளுக்கான பெற்றோர்களின் ஆசை ஆகியவை மாணவர்களை தினசரி பதினெட்டு மணிநேரம் பிழிந்தெடுக்கின்றன. தாறுமாறு ரிசல்ட்டுகளின் விளைவு, உடல்நலம், மனநலம் தடம்புரள தற்கொலை நிகழ்கிறது. இந்தியாவில் தற்கொலை நகரங்களில் ராஜஸ்தானின் கோடா நகரம் அங்குள்ள IIT-JEE பயிற்சி வகுப்புகளால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே மாணவர்களுக்கு கவுன்சிலிங் அவசரத்தேவை.

3



ராணுவ வேலை வேண்டாம்!

மிலிட்டரியின் ஒஸ்தி பெருமை காலாவதியாகிவிட்ட காலம் இது. நிம்மதியான வாழ்க்கைக்கான மிலிட்டரி வேலையே வேண்டாம் என்று எஸ்கேப்பாகும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

கடந்தாண்டில் மட்டும் CRPF, BSF, ITBP, SSB, CISF  உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 587 வீரர்கள் தம் வேலையை ரிசைன் அல்லது விஆர்எஸ் கொடுத்து விலகியிருக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு வேலைவிலகல் அளவு 3,422. இதில் பாராமிலிட்டரி(நக்சலைட், ஜம்மு-காஷ்மீர்) மற்றும் எல்லை பாதுகாப்புபடை(பாகிஸ்தான், வங்கதேச எல்லை) வீரர்களின் எண்ணிக்கை அதிகம் காரணம், இதை விட வளமான வேலைவாய்ப்புகளும் உயிர்பயமற்ற வாழ்க்கையும் வெளியில் இருப்பதுதான். 2015 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஜனவரி 31 வரை பதவி விலகிய அதிகாரிகள்/வீரர்களின் எண்ணிக்கை 27,862. "பாராமிலிட்டரியில் வீரராக வேலை செய்வது மிக கடினம்என்கிறார் முன்னாள் பாராமிலிட்டரிப்படை தலைவரான கே.துர்காபிரசாத்.




4

டாக்டர்களுக்கு அபராதம்!

ராணுவத்தில் பணிபுரியும் டாக்டர்களுக்கு அபராதம் விதித்துள்ளது இந்திய அரசு. எதற்காக?  தங்களின் ஒப்பந்தகாலம் முடியும் முன் ஆர்மியை விட்டு விலகினால் இரண்டுகோடி ரூபாயை அரசுக்கு தரவேண்டும் என்பதுதான் அந்த பகீர் குண்டு.

புனேவிலுள்ள ஆயுதப்படை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இளங்கலையை விட்டு விலகினால் 25 லட்சமும், முதுகலைபடிப்பை விட்டு விலகினால் 28 லட்சமும் அரசுக்கு அபராதம் கட்டவேண்டும் என்ற நிபந்தனையை அரசின் நாடாளுமன்றக்குழு மாற்றியமைத்துள்ளது. மாணவர்கள் இனி 1-2 கோடிவரை அரசுக்கு அபராதம் கொடுக்கும்படி விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ராணுவ மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெறும் மருத்துவர்கள் 20 ஆண்டுகள் வரை அங்கு பணியாற்றவேண்டும் என்பது விதி. படிப்பு முடிந்தவுடன் 20 சதவிகிதப்பேர் டிமிக்கி கொடுத்து வெளியேறி தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுவிடுவதால் இந்த நடவடிக்கை. ஆண்டுக்கு 130 மருத்துவர்கள் ராணுவ மருத்துவக்கல்லூரிக்கு தேர்வாகி படித்து வருகிறார்கள்

நன்றி: குங்குமம்