பெண்களுக்கு சக்திதரும் லேண்டெஸா அமைப்பு!



Image result for landesa


பெண்களுக்கு நிலவுரிமை தரும் லேண்டெஸா அமைப்பு- .அன்பரசு



Image result for landesa




"தினக்கூலியாக உணவுக்காகவே போராடும் எங்களுக்கு அரசு செய்த பெரிய உதவி நிலத்தை எங்கள் பெயருக்கு உரிமை மாற்றிக் கொடுத்ததுதான்" என்று புன்னகை மினுங்க பேசுகிறார் ஜெர்மியா. மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த கேசர்டோபா கிராமத்தில் வாழும் ஜெர்மியா மட்டுமல்ல அங்குள்ள 41 ஏழை குடும்பங்களுக்கு நிலங்களைப் பெற்றுத் தந்துள்ளது லேண்டெஸா இன்ஸ்டிடியூட் என்ற உலகளாவிய தன்னார்வ அமைப்பு.

அதோடு இக்கிராம மக்களுக்கு விவசாய பயிற்சி, நிலத்தில் விதைக்க விதைதானியங்களையும் வழங்கி உதவுகிறது. தினசரி 130 ரூபாய் வருமானத்தில் இரண்டு குழந்தைகளை வளர்க்க போராடிவரும் ஜெர்மியா போன்ற பெண்மணிகளைக் கொண்ட ஏழைக்குடும்பத்திற்கான எதிர்கால நம்பிக்கையை அரசும் லேண்டெஸா அமைப்பும் பெற்றுத்தரும் நிலம் மீதான உரிமை தந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

பெண்களின் சக்தி!

உலகம் முழுவதும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவுரிமைகளை சீர்திருத்தி கிராமப்பொருளாதாரத்தை வலுவூட்டி மேம்படுத்தி வருகிறது லேண்டெஸா இன்ஸ்டிடியூட் அமைப்பு. இந்தியாவில் மட்டும் 6 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலங்களின் மீதான உரிமைகளை அரசிடம் இணைந்து பெற்றுக்கொடுத்துள்ளது இவ்வமைப்பின் சாதனை. குறிப்பாக பெண்களுக்கு நிலவுரிமைகளை பெற்றுக்கொடுப்பதை தன் லட்சியமாக கருதி செயல்படுவது லேண்டெஸாவின் தனித்துவம். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிஷா, டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அரசு மற்றும் சக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நிலவுரிமைக்கான பிரசாரம் மற்றும் சட்டங்களைத் திருத்தி ஏழைமக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது லேண்டெஸா.

நிலச்சீர்திருத்த புரட்சி!

1967 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் சட்டப்பள்ளி பேராசிரியரான ராய் பிராஸ்டர்மென், லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற நிலச்சீர்திருத்தத்தின் அம்சங்களை விளக்கி பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதினார். இவரின் ஜனநாயகமுறையிலான நிலச்சீர்த்திருத்தத்தை வியந்த அமெரிக்க அரசு, 1971 ஆம் ஆண்டு பிராஸ்டர்மென்னை வியட்நாமில் இதனை சோதித்து பார்க்க அனுப்பியது.

 1971-73 வரையிலான காலகட்டத்தில் பிராஸ்டர்மென் செய்த நிலச்சீர்திருத்தங்களின் விளைவாக அரிசி உற்பத்தி 30 சதவிகிதம் அதிகரித்ததோடு 10 லட்சம் குத்தகை விவசாயிகளும் நிலவுரிமை பெற்று பயனடைந்தனர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நிலச்சீர்த்திருத்த நடவடிக்கை என இதனை உச்சிமுகர்ந்து பாராட்டி கட்டுரை எழுத, பல்வேறு நாடுகளும் இதனை செயல்படுத்த ராய் பிராஸ்டர்மென்னை அழைத்தன. 1981 ஆம் ஆண்டு நிலவுரிமைச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான அமைப்பாக லேண்டெஸா இன்ஸ்டிடியூட் உருவானது. தனது லாபநோக்கற்ற சமுதாயப் பணிக்காக 2015 ஆம் ஆண்டு ஹில்டன் பரிசு பெற்றுள்ளது லேண்டெஸா இன்ஸ்டிடியூட்.

உன்னத நோக்கம்!

கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்து அல்லது காடுகளைச் சார்ந்து வாழ்வாதாரத்தை கொண்டுள்ள மக்களுக்கு நிலங்களை அவர்கள் பெயருக்கு பெற்றுக்கொடுத்து வறுமையின் பிடியிலிருந்து மீட்பதே நிறுவனத்தின் நோக்கம். உலகெங்கும் 40 கோடி பெண்களும், 25 கோடி ஆண்களும் தங்களுக்கான நிலவுரிமையைக் கோராமல் வறுமையில் வாழ்ந்துவருவதை குறிப்பிடும் லேண்டெஸா, இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கல்வி, குடிநீர், உணவு ஆகியவற்றை உறுதி செய்ய உழைத்து வருகிறது.

யாருக்கு நிலம் சொந்தம்?

பெண்களுக்கான நிலவுரிமையை இந்தியா உறுதி செய்துள்ளதே என பலரும் நினைக்கலாம். அவை சட்டப்புத்தகத்தில் சரியாக இருந்தாலும் எதார்த்தத்தில் பல்வேறு மாநிலங்களில் இன்னும் பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்காமல் லைபீரியா நாட்டைப்போலவே உள்ளோம். அங்கு பெண்களுக்கு தனி சொத்துரிமை கிடையாது. விவசாயநிலத்தில் வியர்வை சிந்த பெண்கள் உழைத்தாலும் நிலவுரிமை பெண்களின் கணவர்கள் அல்லது மகன்களின் பெயரில்தான் இருக்கிறது.

இந்தியாவில் நிலங்களில் வேர்வையைக் கொட்டி உழைப்பவர்கள் பெண்கள் என்றாலும் நேரடியாக அவர்கள் பெயரையும் சொத்து பத்திரத்தில் எழுதி நிலத்தை அனுபவிப்பதற்கான உரிமையைக் கொடுப்பது அரிதான ஒன்றே. நாடோடியாக வேட்டையாடி உண்ட காலம் வேறு. விவசாயம் செய்ய தொடங்கியபோது நிலையான இடம் மனிதர்களுக்கு தேவைப்பட்டது. இனக்குழுக்களின் நாகரிகம், வளர்ச்சி, மாண்புகளின் விளைவாக பண்பாடு ஆகியவை தோன்றியதே நிலத்தின் நாம் காலூன்றி வசிக்கத் தொடங்கியபோதுதான் எனும்போது நிலம் மனிதர்களின் வேர்கள் பரவ எவ்வளவு முக்கியம் என உங்களுக்கு புரிந்திருக்கும்!
லேண்டெஸா அமைப்பு, நிலங்களுக்கான உரிமையை ஏழைமக்களுக்கு பெற்று அளிக்க நிலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகிறது. பின் அப்பகுதி சார்ந்த கலாசாரம், அரசியல் விஷயங்களை கணக்கிலெடுத்து குடும்பங்கள் வறுமையில் வாடாமல் இருக்க தேவையான நிலத்தை ஆராய்ந்து கணக்கிடுகிறது. பின்னர், மத்திய, மாநில அரசுகளின் நிலச்சட்டத்தினை சீரமைத்து நிலங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை பெற்றுத்தருகிறது.


பெண்களுக்கு சமநீதி!

முதன்மை மாநிலங்கள் - லட்சத்தீவுகள்(41%),மேகாலயா(34.3%), தமிழ்நாடு(17.8%), ஆந்திரா(23.7%), கர்நாடகா(17.3%)
பின்தங்கிய மாநிலங்கள் - மத்தியப்பிரதேசம்(8.6%), ராஜஸ்தான்(7.1%), உத்திரப்பிரதேசம்(6.1%)
நிலவுரிமைச்சட்டத்தில் முதலிடம் - லட்சத்தீவுகள்(31.1%),மேகாலயா(26%)
பெண்களுக்கு நிலவுரிமை - இந்தியா(12.8%), சீனா(17%)
விவசாயத்தில் பெண்களின் உழைப்புவிகிதம் - 55-56%, விவசாயக்கூலிகள்(32%)
(National Family Health Survey of 2015-16, Socio Economic Caste Census of 2011, agriculture census of 2011 தகவல்படி)

நன்றி: குங்குமம்