நம்பிக்கை தரும் திரைப்பட கலைஞர்கள்! - டைகர் ஷெராஃப், டாப்சி பானு, ரன்வீர் சிங்

 



ரன்வீர் சிங்








குழந்தை போன்ற கலைஞன்!
ரன்வீர் சிங்
இந்தி நடிகர்


அமெரிக்க நடிகர் போல பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்வதோடு, இயல்பாகவும் அப்படித்தான் இருக்கிறார். அனைத்து விருது வழங்கும் விழாவிலும் கேமரா ரன்வீரைத்தான் சுற்றி சுழன்று கொண்டிருக்கும். உடையாகட்டும். கெட்டப் ஆகட்டும் தன்னைச்சுற்றி மட்டுமே பலரது கவனம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். பார்க்க மட்டுமல்ல பேச்சும் அப்படித்தான். 

வளரும்போது, பத்மாவதி படத்தில் இரக்கமே இல்லாத மன்னராக வில்லனாக நடித்தார். கல்லி பாய் படத்தில் வளர்ந்து வரும் ராப் பாடகராக மனங்களை கொள்ளையடித்தார். லூட்டெரா படத்தில் காதலித்து ஏமாற்றுபவராக நடித்திருப்பார். பேண்ட் பாஜா பாரத் படம்தான் அறிமுகப்படம். அதில் காட்டிய எனர்ஜியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். 

சினிமாவில் செய்யும் வேலையை நான் எனது முதல் நாள் அல்லது கடைசி நாள் என்று நினைத்துத்தான் வேலை செய்கிறேன். அதனால் எனக்கு இக்கலைத்துறையில சலிப்பே ஏற்படுவதில்லை. இக்கலையில் உள்ள எல்லையற்ற தன்மையே என்னை ஈர்க்கிறது. தினசரி நான் இங்கு நடக்கும் விஷயங்களை அனுபவித்து வருகிறேன். 

சிறு குழந்தை போன்ற ஆர்வத்துடன் உற்சாகத்துடன் நடிக்கும் ரன்வீருக்கு இதன் காரணமாவே நிறைய ரசிகர்கள் உண்டு. ரன்வீரின் படம் என்றாலே அது புதிதாக இருக்கும். தன்னுடைய உலகை உருவாக்கி பார்வையாளர்களை அதில் அனுமதிப்பார் என்று அவரது படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியும். 

திரைப்படத்தின் வசூல், நடிப்பு என்ற இரண்டையும் தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார். படத்தின் வசூல் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. நான் நடிப்பு என்ற விஷயத்தை மட்டும் அனுபவித்து செய்கிறேன் என்று சொல்லும் துணிச்சல் இந்தியில் யாருக்கு வரும்? அந்த தில் ரன்வீருக்கு உண்டு. 

டைகர் ஷெராஃப்







புது ஆக்சன் ஹீரோ!
டைகர் ஷெராஃப்

டைகர் ஷெராஃப் யார் தெரியுமா என்று கேட்டால் உதைக்க வருவீர்கள்? யாருக்கு அவரைத் தெரியாது. ஜாக்கி ஷெராஃபின் மகன். இதெல்லாம் தாண்டி அவர் தனக்கான உருவாக்கிக்கொண்ட விஷயம்தான், சண்டைப்படங்கள். வர்த்தகரீதியாக சினிமா ஓட உறுதியாக ஆக்சன் படங்கள் வேண்டும். அந்த பிரிவில் இப்போது முன்னணியில் இருப்பவர் டைகர்தான். இவரின் பாகி பாகம் இரண்டுமே சிங்கிள் தியேட்டர் வகையில் பெரும் வசூலை சாதித்தது. நகரங்களில் இவரது படங்களில் ஓடவில்லை என்றாலும் கிராமங்களில் சிறு நகரங்களில் பெரும் ரசிகர்களின் ஆதரவு டைகருக்கு உண்டு. இப்போது நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் என இரண்டையும் ஒன்றாக இணைக்கும்படியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அடுத்து வரும் ஹீரோபண்டி 2, கண்பத் ஆகிய படங்கள் இதைத்தான் நமக்கு சொல்லுகின்றன.

டைகரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் தினசரி வளர்ந்துகொண்டே இருக்கிறது என இந்தி தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக டைகரின் கால்ஷீட்டை படத்திற்காக வாங்கியிருப்பார் என்று தனியாக நாம் சொல்லவேண்டுமா என்ன? இவருக்கு இவரது பிரிவில் நெருக்கமான போட்டியாளர் வித்யுத் ஜாம்வால். இவரது கம்பிகள், கயிறு இல்லாத சண்டைக் காட்சிகளும் இணையத்தில் பிரபலம். யூடியூபில் பல்வேறு ஆசனங்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றையும் செய்து காட்டி அசத்துகிறார். டைகரைப் போல வித்யுத்தை புகழ்ந்து பேசி மார்க்கெட்டிங் செய்ய ஆட்கள் இல்லை என்பதுதான் குறை. 



டாப்சி பானு





மாத்தி நடிப்பேன் பாரு!
டாப்சி பானு

தமிழ், தெலுங்கு படங்களில்தான் முதலில் இந்த சுருட்டை முடி பெண் வலம் வந்தார். கிடைத்த பாத்திரங்கள் எல்லாமே பாடலுக்கு வந்தால் போதும்ங்க என்ற ரீதியில்தான். அதிலும் தெலுங்கில் டாப்சி, மனோஜ் மஞ்சு படத்தில் இவர் வயிற்றின் மீது தேங்காய் உருட்டி காதல் காட்சிகளை உருவாக்கி மிரட்சி ஏற்படுத்தினார்கள். 

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இவர் தேர்ந்தெடுத்த படங்கள் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டின. இந்தியில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அனைத்துமே எப்படி நடிக்கிறாங்க, இத்தனை நாள் இப்படி நடிக்கவே இல்லையே என ஆச்சரியத்தை ஏற்படுத்தின. பிங்க், பட்லா, மன்மர்சியான், ஹசன் தில் ரூபா, சாந்த் கி ஆன்க், கேம் ஓவர், தப்பட், ராஷ்மி ராக்கெட் என இவர் நடித்த படங்கள் அனைத்துமே டாப்சி பானுவை மட்டுமே நம்பிக்க திரைப்படங்கள். படத்தின் பாரத்தை இவர் ஒருவரே தாங்கி வெற்றி பெற வைத்தார் என்பதே இங்கு பேச வேண்டியது. 

ஓடிடியிலும் தனது காலடியை எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு மூன்று ரிலீஸ் செய்துள்ளார். எனக்கு நாயகியாக பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகள் நீங்கள் பார்க்கும் படங்கள்தான் என்று சொல்லுகிறார் டாப்சி. சீக்கிரமே கேப்டன் மார்வெல் போல ஒரு கேரக்டர் கிடைக்கும் மேடம் என்றுதான் நாம் இப்போதைக்கு சொல்ல முடியும். 

தனது வீட்டில் 200க்கும் மேற்பட்ட தாவரங்களை வளர்த்து வருகிறார் டாப்சி பானு. 


இந்தியா டுடே 








கருத்துகள்