உண்மையைப் பேசத் தயங்கும் ஊடகங்கள்! - இந்தியாவில் சிறப்பாக நடக்கும் சம்பவங்கள் - ஆகார் படேல்













அண்மையில் என்டிடிவி தொகுப்பாளர் ரவிஷ்குமார் ஒரு செய்தியை சொன்னார். இன்றைய ஊடகங்கள் எதில் கவனம் செலுத்தவேண்டுமோ அதனை செய்வதில்லை என்றார். அது உண்மைதான். இன்னும் சில மாதங்கள் நாம் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியை பார்க்கப்போகிறோம். இது ஒரு ஆட்சிக்கு நீண்ட காலம். அவர்கள் செய்ய நினைத்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றியிருக்கமுடியும். இப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். 

பொருளாதார ரீதியாக நிறைய சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். பல்வேறு விலைபோன ஊடகங்களும் அதனை அப்படியே ஊதுகுழலாக ஒப்பித்தன. ஆனால் பொருளாதாரம் முன்னெப்போதையும் விட பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் சீனா, தைவான், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகள் சிறப்பாக உள்ளன. அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். 2014இல் இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 50 சதவீதம் பின்தங்கிய வங்கதேசம் இன்று நம்மை விட முன்னேறியுள்ளது. இதேபோல வியட்நாம் நாட்டையும் சொல்லலாம். 

உற்பத்தித்துறை சார்ந்த வேலைகள் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது மிச்சமிருப்பது விவசாயம் மட்டுமே. தற்போது அதில்தான் மக்கள் ஏதாவது செய்து வயிற்றுப்பாட்டுக்கு அன்னம் சம்பாதிக்கிறார்கள். 2013இல் 5 கோடிப்பேருக்கு வேலைக்கான தேவை இருந்தது. இன்று அதே இடத்தில் 12 கோடிப்பேர் நிற்கிறார்கள். வேலை கிடைக்கிறதா என்றால் அதற்கான அறிகுறிகள் கூட தெரியவில்லை. 

கிராம புற வேலைவாய்ப்பு திட்டம் - இப்படியே குறிப்பிடலாம். காந்தியை கஷ்டப்படுத்த வேண்டாம். 2014இல் இருந்ததை விட நான்கு மடங்கு அதிகம் செலவு செய்துள்ளனர். அந்தளவு இந்த வேலைகளுக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. இது அரசின் வளர்ச்சி என்று மார்தட்ட ஒன்றுமில்லை. எதுவுமே இல்லாத சிக்கலுக்கு இதாவது இருக்கிறதே என வேலைக்கு போகிறார்கள். 

மக்கள் உணவுக்கென செலவிடுவதும் மிகவும் குறைந்துவிட்டது. இதனை 2012இலும், 2018இலும் கணக்குப் போட்டால் வித்தியாசம் பளிச்சென தெரிந்துவிடும்.  பொதுவாக மக்களின் நுகர்வு அதிகரித்தால்தான் நாட்டில் பணப்புழக்கம் இருக்கிறதென அர்த்தம். குறைந்துவிட்டால், அங்கே பொருளாதார பிரச்னை சுணக்கம் இருக்கிறதென அர்த்தம். 

ரிசர்வ் வங்கி இருமாதங்களுக்கு ஒருமுறை பொருளாதார நிலையை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிடுகிறது. இதில் மக்களின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு பற்றிய விஷயங்கள் அரசுக்கு தெரியவரும். இந்தவகையில் பொதுமுடக்கத்திற்கு முன்னரே மக்களின் பொருளாதார நிலை சிக்கலுக்குள்ளானது தெரிய வந்துள்ளது. அதாவது, மார்ச் ஏப்ரல் 2019 காலகட்டத்தில்.... இந்த நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியும் படுத்துவிட்டது. 

உள்நாட்டு உற்பத்தியின் சரிவு 2018ஆம்ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. ஏறத்தாழ கோவிட் சமயம் மூன்று சதவீதமாக இருந்தது. ஆனால் நிறையப் பேர் அப்போதே இதெல்லாம் சமாளிக்கிறார்கள். வளர்ச்சி பூஜ்ஜியத்தில்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டனர். பொதுமுடக்கம் என்பது உலகம் முழுக்கவே இருந்தது. ஆனால் தொழில்துறை முடக்கம் உற்பத்தி சரிவுக்கு அது மட்டுமே காரணமல்ல. ஒன்றிய அரசு நிர்வாக திறனின்மைக்கு நோயை காரணம் காட்டிக்கொண்டிருக்கிறது. இதேகாலத்தில் வங்கதேசம் எப்படி முன்னேறியிருக்கிறது என்பதை பாருங்கள். 

ஆட்டோமொபைல் துறை விற்பனையே இல்லை என கூக்குரல்கள் எழுந்தன. பிறகு அதனை மதவாத கட்சி அடக்கி ஒடுக்கியது. குரல்களை ஒடுக்கலாம் உண்மையை எப்படி மறைப்பது? 2013இல் 27 லட்சம் கார்கள் விற்றன என்றால் அதற்கடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கூடவேண்டுமே  ஆனால் அப்படி ஒரு நிலை வரவில்லை. 2019இலும் கூட அதே எண்ணிக்கைதான். கடந்த பத்தாண்டுகளாக வளர்ச்சி நேர்கோடாகவே உள்ளது. உள்நாட்டு விற்பனை, வெளிநாட்டு ஏற்றுமதி என அனைத்துமே படுத்துவிட்டது. இதற்கு ஏதாவது விளக்கம் கொடுக்கவேண்டுமே, வாகன விற்பனை சங்கம், இது நெடுங்காலமாக நடந்து வந்த நிகழ்ச்சி என விளக்கம் கொடுத்துள்ளது. 

மக்கள்தொகையில் 80 கோடி இந்தியர்கள், அதாவது 60 சதவீத மக்கள் அரசு கொடுக்கும் விலையில்லாத 6 கிலோ அரிசியை நம்பித்தான் இருக்கிறார்கள். உலக அமைப்புகளின் பல்வேறு பட்டியலிலும் இந்தியா கீழே சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவை மேலே கொண்டு வர நாமே போலியாக ஆய்வு செய்து பட்டியல் வெளியிட வேண்டியதுதான். அப்படிப்பட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்திய வனத்துறை ஆய்வு அமைப்பு வெளியிட்ட பசுமைப்பரப்பு அப்படியான புரட்டு அறிக்கைதான். 

அடுத்து மதவாத ஒன்றிய அரசு செய்யும் விஷயங்கள், சிறுபான்மையினரை ஒடுக்கி நெருக்குவதுதான். மாட்டிறைச்சி, ஹிஜாப், உடை என தினந்தோறும் ஏதாவது பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதனை 2014ஆம் ஆண்டு முதலே தொடங்கிவிட்டனர். இறைச்சி விற்பனை, மாடுகளை வளர்ப்பது, முஸ்லீம்கள் விவகாரத்து, சிவில் உரிமை சட்டம், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு இடங்களை வாடகை, சொந்தமாக வாங்கத் தடை என வேறு லெவலில் மதவெறியை திணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அரசு, பொருளாதாரத்தில் வென்றதா தோற்றதா என்பதை விட நினைத்த வெறுப்பு மதவெறி அரசியலில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தனது திறனின்மையை பற்றி பேசாமல் சிறுபான்மையினரை வதைத்து அதில் மகிழ்ச்சி அனுபவித்து வருகிறார்கள் ஆட்சியாளர்கள். இத்தனை நடந்தாலும் இந்திய ஊடகங்கள் வாங்கி காசுக்கு விசுவாசமாக, பிறரது கண்ணுக்கு தெரியாத வாலை எஜமானனுக்கு ஆட்டி வருகிறார்கள். அப்படி ஆடும்போது, பிறருக்கு மறைத்து வைத்துள்ள அல்லது மறைந்துள்ள வால் தெரியாதுதான். ஆனால் இடுப்பு கண்ணுக்கு தெரியுமே அதை மறைந்துவிடுகிறார்கள். 




ஆகார் படேல் எழுதிய கட்டுரையைத் தழுவியது. 

டெக்கன் கிரானிக்கல்

Its important for media to focus on the reality of life in this country

கருத்துகள்