சிறந்த திரைக்கலைஞர்கள் -நடிகை சான்யா மல்கோத்ரா, திரைக்கதை எழுத்தாளர் ஷியாம், இயக்குநர் கார்த்திக் நரேன்

 



நடிகை சான்யா மல்கோத்ரா







ஷியாம் புஷ்கரன்

எழுத்தாளர், திரைக்கதை வல்லுநர்


எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன்



மலையாள படங்களில் இன்று சிறப்பாக திரைக்கதை அமைத்து தரும் எழுத்தாளர்களில் ஒருவராக ஷியாம் புஷ்கரன் இருக்கிறார். இவரது பங்களிப்பில் மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டுமுத்தலும் டிரிக்சாக்சியும், மாயநதி, கும்பளாங்கி நைட்ஸ், ராணி பத்மினி, ஜோஜி ஆகிய படங்கள் சிறப்பான வெற்றி பெற்றதோடு இவரது பெயரையும் உலகம் முழுக்க சொல்லிச்சென்றன.

பகத்பாசில் இன்று முக்கியமான நடிகராக இருக்க அவரது நடிப்புத்திறன் காரணம். அதை யாருமே மறுக்க முடியாது. அதேசமயம் அவரது படத்தின் கதைகளை எழுதும் ஷியாம் புஷ்கரனின் எழுத்தாற்றலே அந்த கலைஞனை மேலும் பிரகாசிக்க செய்கிறது. மலையாள உலகை தாண்டி பகத்தை பிறரும் கவனிக்கிறார்கள் என்றால் ஷியாமின் பங்களிப்பு முக்கியமானது. திலீஸ் போத்தன், ஆசிக் அபு, மது ஸ்ரீ நாராயணன் ஆகிய இயக்குநர்களோடு இணைந்து பணிபுரிந்திருக்கிறார். 

ஷியாமின் கதை, திரைக்கதைகளை அவரது ரசிகர்கள் ஆழமாக ஆராய்ந்து பல்வேறு நுணுக்கங்களை திரைப்பட இயக்குநர்களுக்கு கூறி வருகிறார்கள். மகேஷிண்ட பிரதிகாரம் படத்திற்கு தேசிய விருது பெற்றவர் ஷியாம் என்பது முக்கியமானது. அடுத்து தங்கம் எனும் படத்தை இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்து வருகிறார். இதனை இயக்குபவர், ஷாகித் அராஃபத். 

படப்பிடிப்பு நடக்கும்போது அங்கு நடக்கும் நிகழ்வுகளை போனில் படம்பிடிப்பது ஷியாமின் வழக்கம். அப்படி எடுக்கும் வீடியோக்களை யூடியூபில் பாவனா ஸ்டூடியோஸ் என்ற பெயரில் உள்ள சேனலில் பதிவிடுகிறார். 

ஷியாம் புஷ்கரன்




கார்த்திக் நரேன்

இயக்குநர்


கார்த்திக் நரேன்





இந்த இயக்குநருக்கு தலை நரைக்கவில்லை. வயது கூட 28தான். இவர் எடுத்த திரில்லர் படமான துருவங்கள் பதினாறு திரைத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்தளவு கதை, பாத்திரங்கள், தொழில்நுட்பம் என அனைத்திலும் தன் முத்திரையைப் பதித்திருந்தார். இப்போது பொல்லாத உலகம் என தனுஷ் உற்சாகமாக ஆடிவரும் மாறன் படத்தின் இயக்குநர் கார்த்திக்தான்.  இதற்கடுத்து உருவாக்கிய நரகாசூரன் இன்னும் வெளியாகவில்லை. 

அருண் விஜய்யை வைத்து மிக மெதுவாக செல்லும் மாஃபியா சேப்டர் 1 என்ற படத்தை எடுத்தார். இவரது ரசிகர்கள் இந்த படத்திற்கு அடுத்த பாகம் வேண்டும் என கேட்கிறார்களாம். துருவங்கள் பதினாறு படத்தை எடுத்து முடித்தபோது கார்த்திக்கின் வயது 22 தான். அடுத்தடுத்த படங்களில் தனது முத்திரையை பதிப்பார் என நம்பலாம். 


சான்யா மல்கோத்ரா

இந்தி நடிகை


இப்போதும் இவரை தங்கல் படத்தில் நடித்த நடிகை என்று சொன்னால் சான்யாவே நம்மை ஹவுலா காடு என கெட்டவார்த்தையில் பேசுவார். அதுதான் இவரின் நடிப்பில் வெளியான முதல் படம். அதற்குப் பிறகு நிறைய படங்களை நடித்து விட்டார். போட்டோகிராப் எனும் படத்தில் தன்னைவிட வயது முதிர்ந்தவரை காதலிக்கும் பெண் வேடத்தில் நடித்தார். இந்த படத்தை ரிதேஷ் பத்ரா என்ற இயக்குநர் எடுத்தார். இப்படத்தில் சான்யாவின் நடிப்பை முழுமையாக நாம் பார்க்கலாம். லன்ச்பாக்ஸ் என்ற படத்தை இயக்கியவர்தான் ரிதேஷ். 

இந்தி சினிமாவுக்குள் சான்யா வந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. நடிப்பு, கதைத்தேர்வு என அனைத்துமே சிறப்பாகவே இருக்கிறது என சொல்ல வேண்டும். பொழுதுபோக்கு, சோதனை முயற்சி என இரண்டிலுமே தன்னை ஒப்புக்கொடுத்து நடிக்கிறார். லூடோ, பக்லைத், மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆகியவை நெட்பிளிக்சில் வெளியாகின. இதன் மூலம் இவரது ரசிகர்கள் இணையத்திலும் பெருகினர். 

அடுத்து இவரது நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகப் போகின்றன. அதில் ஷாருக்கானும் இவரோடு சேர்ந்து நடிக்கும் படம் உள்ளது. 

டெல்லிக்காரரான சான்யா, மும்பைக்கு நடிக்கவே வந்தார். முதல்முறை டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அதில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அப்படியே நடிக்கும் வாய்ப்பு தேடி இங்கேயே தங்கிவிட்டார். அதுதான் இப்போது சாதித்தும் விட்டாரே?

இந்தியா டுடே



 


கருத்துகள்