நம்பிக்கை அளிக்கும் கலை நாயகர்கள் - கீர்த்தி சுரேஷ், சைதன்ய தம்கனே, பிரியங்கா சர்மா

 







கீர்த்தி சுரேஷ்



என்ன ஒரு சிரிப்பு!
கீர்த்தி சுரேஷ்
நடிகை

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார், நடிகை மேனகா ஆகியோருக்கு பிறந்த பெண். அப்பாவின் தயாரிப்பில் சில படங்களில் குழந்தையாக நடித்தார். சென்னையில் உள்ள பியர்ல் அகாடமியில் ஃபேஷன் டிசைனிங் படித்தார். 

பிறகு  நாம் நடிக்கலாமே என்று தோன்ற அதை அப்படியே மனதில் தோன்றியபடியே செய்தார். முதலில் மலையாளத்தில் நடித்தார். அப்படியே தமிழ், தெலுங்கிற்கு வந்தார். 

முதலில் தமிழில்  முகம் தென்பட்ட படங்களில் பெரிதாக நடிக்கும் வேலையே இல்லை. அந்தளவு தான் கீர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது. பாடலுக்கு வருவார். சிரிப்பார். இப்படித்தான் ரஜினி முருகன், ரெமோ, சர்க்கார். பைரவா படங்களில் இவரது பங்களிப்பும் இருந்தது.  2018இல் இவர் நடித்த மகாநடி என்ற படம் யாருமே எதிர்பார்க்காத வெற்றியாக அமைந்தது. நடிகை சாவித்ரியை உடல் அளவிலும் பிரதிபலித்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார். பலரும் நடிப்பை பாராட்டினர். இதில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் உண்டு.  பிறகுதான் பெங்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்தே படங்களில் நடித்தார். இந்த படங்களின் முடிவு என்ன என்று கேட்க கூடாது. நடித்தார். அவ்வளவுதான். 


பிரியங்கா சர்மா





அர்ப்பணிப்பான நாடகப் பெண்மணி! 
பிரியங்கா சர்மா
நாடக இயக்குநர்

வணிக குடும்பத்தில் பிறந்தவர். இன்று இந்திய நாடக உலகில் முக்கியமான நடிகர், இயக்குநராக இருக்கிறார். அனைத்துக்குமே காரணம் அர்ப்பணிப்பான உழைப்புதான். 

நடிப்பு, இயக்குநர் என சாதித்தாலும் தேசிய நாடக பள்ளியில் பட்டம் பெற்றவரல்ல என்பதுதான் முக்கியமானது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சத்யாவ்ரத் ராவத் என்ற நாடக இயக்குநர் தனது நாடகத்திற்கு நடிகை ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவரது நாடகத்தில் நடிப்பதாக இருந்தவர், மும்பைக்கு சென்றுவிட்டார். எனவே அப்படி தேடியபோது கிடைத்தவர்தான் பிரியங்கா சர்மா. பதினைந்தே நாட்களில் தன்னை தயார் படுத்திக்கொண்டவர் நடிப்பில் அடித்து பிரித்தார். பார்வையாளர்களை வியக்க வைத்தார். இதனால் நாடக உலகில் மெல்ல தனது ஆளுமையை விரிக்க தொடங்கினார். 

இன்று இவரது நாடக குழுவான சில்லி சோல்ஸ் , 600க்கும் மேற்பட்ட நாடகங்களை உருவாக்கி நடத்தியிருக்கிறது. பல்வேறு சமூக அமைப்புகளுக்காக நாடகங்களை உருவாக்கி நடத்தியிருக்கிறார் பிரியங்கா சர்மா. இவரது நடிப்பில் த்ரூவ் ஸ்வாமினி என்ற நாடகம் முக்கியமானது. அதனை பிரியங்காவின் அற்புதமான நடிப்பிற்காகவே பார்க்கவேண்டும் என பார்வையாளர்கள் கூறுகிறார்கள். 

ஆர்வெல் எழுதிய 1984 என்ற நாவலை தி லாஸ்ட் மேன் என்ற பெயரில் நாடகமாக எழுதி விரைவில் இயக்கவிருக்கிறார். 

2007இல் தேசிய நாடகப்பள்ளியில் சேர பிரியங்கா முயன்றார். ஆனால் அங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான்கு நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கும் வாய்ப்பே கிடைத்தது. அதுவே தனக்கு தன்னிறைவு அளித்ததாக கூறுகிறார் பிரியங்கா. 






சைதன்ய தம்கனே


இயல்பான வாழ்க்கையை திரையில் காட்டியவர்!
சைதன்ய தம்கனே
சினிமா இயக்குநர்


2014இல் இவர் உருவாக்கிய கோர்ட் படம் தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. இது மராத்திப் படம்.  இருபத்தியேழு வயதில் இந்திய நீதிமுறையை விமர்சித்த துணிச்சல்கார கலைஞன் இவர். நாம் சொல்லும் விஷயம் தொடர்ச்சியான வகையில் பார்வையாளரின் மனதில் பதியும்படி இருக்கவேண்டும். கலைக்கான அடிப்படை வடிவம் உண்டு. அதனைக் கடைபிடிக்கவேண்டும் என்பதைத்தான் நான் எளிய விதியாக நினைக்கிறேன் என்றார்.

2020இல் தி டிசிப்பிள் என்ற படத்தை உருவாக்கினார். மராத்தி மொழியில் உருவான இந்த படம், இசைக்கலைஞரின் வாழ்க்கையை பேசுகிறது. நிறைய கனவும் குறைந்த திறமையும் உள்ளவரின் கதை இது. சைதன்யாவின் இரண்டு படங்களையும் நடிகர் தயாரிப்பாளர் விவேக் கோம்ப்ளர்தான் தயாரித்துள்ளார்.  திரைப்படங்களை எடுக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. நிறைய மனிதர்களை நிர்வாகம் செய்யவேண்டியிருக்கிறது. இதனை இன்னும் எத்தனை நாட்கள் செய்யமுடியுமோ என்று கூறுகிறார் சைதன்யா.  என்ன மனநிலையில் இப்படி கூறுகிறாரோ தெரியவில்லை. ஆனால் இவரது படங்கள் மராத்தி மொழி வட்டாரத்தையும் தாண்டி மக்களால் கவனிக்கப்பட்டவை. 


இந்தியா டுடே 





கருத்துகள்