இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட முகங்கள்! - 2021 முகங்கள் புதிது

 











கங்கனா  ரணாவத்

மணிகர்ணிகா படத்தில் பொம்மைக் குதிரையில் அபிநயம் பிடித்து தேசப்பற்றில் பொங்கினார். ஆனால் ஷூட்டிங் முடிந்தும் கூட அம்மணியிடம் வைப்ரேஷன் குறையவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கிடைத்தது, அமைதி வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொன்னது, விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாப் பாடகியை முட்டாள் என்று சொன்னது என ஏதாவது உளறி வைத்துக்கொண்டே இருந்தார். இதனால் அவர் பத்ம விருது வாங்கிய செய்தி கூட காணாமல் போனது. தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக அரிதாரம் பூசி நடித்தார். ஆனால் படத்தில் அவருக்கு எதுவுமே சிங்க் ஆகவில்லை என்பதால்,  படம் அப்பளமாய் நொறுங்கியது. நடிப்பை விட வாய்ப்பேச்சால் சமூக வலைத்தளங்களில் வலிமையாக இருந்தார் கங்கனா. 

நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். அப்புறம் அவர் வேறு ஏதும் செய்யவேண்டியிருக்கவில்லை. ஏராளமான பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. நூறு ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வாங்க காத்திருந்தோம் என ஊடகங்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் பொங்கின. இந்த நேரத்தில் பாஜக ஐடி ஆட்கள், அவருடன் விளையாடி பாகிஸ்தானிய வீரரை வறுத்தெடுத்தன. ஆனால் நீரஜ் சோப்ரா அதெல்லாம் வேண்டாம் ப்ரோ என்று சொன்னது பலரையும் அவரை நோக்கி ஐ லவ் யூ சொல்ல வைத்தது. 

மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சி, இன்னும் விழிப்பு வராமல் தூங்கிக்கொண்டிருக்க திரிணாமூல் காங்கிரஸின் தலைவர் மம்தா ஆல்ரெடி களத்தில் இருந்தார். மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் தாமரையை வெட்டியெறிந்து முதல்வர் வேட்பாளராக வென்றார். தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு பாஜக ஒன்றிய அரசு அசிங்கமான விளையாட்டை விளையாடிப் பார்த்தது. ஆனால் மக்கள் மம்தாவை நம்பினார்கள். அவருக்கே ஒட்டுமொத்த ஓட்டுகளையும் போட்டு வெல்ல வைத்தனர். திரிணாமூலைச் சேர்ந்த முக்கியமான தலைவர்களை பாஜக கட்சி காசு கொடுத்து வாங்கியது. அப்போதும் கூட கவலையே படாமல் காயம்பட்ட காலில் பேண்டேஜ் போட்டு பிரசாரத்திற்கு சென்று வென்றார். பாஜகவிற்கு எதிரான கட்சியாக வளர்ந்து நிற்கும் மம்தா, இப்போதைக்கு நம்பிக்கை தருகிற அடையாளம். 

சீன அதிபர் ஜிங் பிங்

மாவோ, டெங் ஜியாபொங் ஆகிய ஆட்சியாளர்களுக்கு அடுத்து அதிகாரத்தில் அதிக நாட்கள் நீடித்த, தன்னை நீட்டிக்க வைத்துக்கொண்ட அதிபர் ஜிங் பிங். வரும் ஆண்டில் நடக்கவிருந்த கட்சிக்கூட்டத்தை முன்னதாகவே நடத்தி தன்னை மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்க வைத்தார். இரண்டுமுறைதான் ஒருவர் அதிபராக முடியும் என்ற விதியை தளர்த்தினார். 

கிழக்கு லடாக் பகுதியில் குடியிருப்புகளை சீனா கட்டி வருகிறது. ஏற்கெனவே அருணாசலப் பிரதேசத்தையும் தனது நாட்டைச் சேர்ந்தது என சீனா கூறிவருகிறது. இதையெல்லாம் கவனிக்க பாஜக அரசுக்கு நேரமில்லை. அவர்கள் அடுத்துவரும் தேர்தலில் எந்த பகுதிகளில் கலவரத்தை ஏற்படுத்தலாம், எரிபொருட்கள் விலையை ஏற்றலாமா வேண்டாமா என்ற முக்கியமான பிரச்னைகளில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு சீனக்கடலிலும் சீனா, தனது மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது. பெல்ட் திட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் உள்ளது. லத்தீன் அமெரிக்காவில் தனது வணிக திட்டங்களை சிறப்பாக செயலாக்கம் செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சீன அதிபர், தனது நாட்டை முதல் இடத்திற்கு நகர்த்த தேவையான அனைத்து விஷயங்களுக்கான அடிக்கல்களை நட்டுவிட்டார். இனி அதனை வரும் ஆண்டில் தொடர்ந்தாலே இந்தியாவிற்கு தலைவலி குறையாது நீடிக்கும். 

விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதி வழியில் நடந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்காக பாஜக அரசு பின்வாங்கியது என்று சொன்னாலும் கூட இது முக்கியமான வெற்றி. இப்போராட்டத்தில் விவசாயிகள் மீது பிரிட்டிஷார், சுதந்திரப் போராட்ட காலத்தில் செய்த பிரித்தாளும் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டன. காலிஸ்தானிகள், தீவிரவாதிகள், போராட்டம் நடத்தி ஜீவிப்பர்கள் என பாஜக ஐடி செல்கள் இருபத்து நான்கு நேரமும் அவதூறைப் பரப்பின. காசு வாங்கிக்கொண்ட இந்தி, ஆங்கில ஊடகங்களும் தங்களது விசுவாசத்தை காட்டி ஆட்சியாளர்களின் கால்களை நக்கின. இத்தனையும் உள்நாட்டில் உணவை விளைவிப்பவர்களுக்காக நடந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை இப்படித்தான். இத்தனை துரோகங்களையும் கடந்து விவசாயிகள் போராடினர். கூடவே அவர்கள் வீட்டு பெண்களும் பங்கேற்றது போராட்டத்தை உலகளவு கவனம் பெறவைத்தது. பெண்களையும் அவமானப்படுத்த காவல்துறை முயன்றது. ஆனாலும் விவசாயிகள் அதனை பொறுமையோடு எதிர்கொண்டு வென்றனர். 

times of india



கருத்துகள்