சர்ச்சைகளின் நாயகி அருந்ததி ராய்!

 



எழுத்தாளர் அருந்ததி ராய்







சூசன்னா அருந்ததி ராய் நவம்பர் 24ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு பிறந்தவர். பெண்ணியவாதியான மேரி ராய், கொல்கத்தாவின் தேயிலை தோட்ட மேலாளர் ரஜிப் ராய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சகோதரர் ஒருவர் உண்டு. அவரது பெயர் லலித்குமார் கிறிஸ்டோபர் ராய். 

ஷில்லாங்கில் பிறந்தவர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ந்தார். இவரது இரண்டாவது வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கட்டுமானம் வடிவமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் அருந்ததி ராய். 1988ஆம் ஆண்டு அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி தேசிய விருதை வென்றார். 1992ஆம் ஆண்டு எலக்ட்ரிக் மூன் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதே ஆண்டில்தான் சிறிய விஷயங்களின் கடவுள் என்ற நூலை எழுத தொடங்கினார். 1996ஆம் ஆண்டில் நூல் பணியை முடித்தார். இந்த நாவலுக்கான பரிசாக மேன்புக்கரை 1997இல் வென்றார். இந்த நாவல்தான் உலகம் முழுக்க இவரை அறிய வைத்தது. 

சிறிய விஷயங்களின் கடவுள் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் ஆகும். ரகேல், எஸ்தா என இரட்டையர்களின் வாழ்க்கையை அரசியல், ஜாதி பின்புலத்தில் வைத்து பேசுகிற கதை இது. தி மினிஸ்டரி அட்மோஸ்ட் ஹேப்பினெஸ் என்ற மற்றொரு நாவலை எழுதினார். இந்த நூல் புக்கர் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றது. புக்கர் பரிசு பெற்றது உள்நாடு வெளிநாடு என அனைத்து இடங்களிலும் அருந்ததி ராய் புகழைப் பரப்பியது. 

இவர் மெல்ல சமூக செயல்பாட்டாளராக மாறினார். அரசின் அணு திட்டங்கள், உலகமயமாக்கம், நவ தாராளவாத கொள்கைகள், அமெரிக்க வெளியுறவு கொள்கை, நர்மதா அணை திட்டம் என பல்வேறு விஷயங்களை கையில் எடுத்து பேசத் தொடங்கினார். மனித உரிமைகள் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். 

புக்கர் பரிசுக்கு கிடைத்த பணத்தை நர்மதா பச்சா அந்தோலன் திட்ட போராட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மத ரீதியான சகிப்புத் தன்மை குறைந்து வருவதை காரணம் காட்டி திரைக்கதைக்கு பெற்ற தேசிய விருதையும் ஒன்றிய அரசுக்கு திரும்பக் கொடுத்துவிட்டார். 2006ஆம் ஆண்டு அருந்ததி ராய் சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஒன்றிய அரசு, தொழில்துறை ஊழியர்களை மோசமாக நடத்தியதால் அந்த விருது எனக்கு வேண்டாம் என்று கூறிய துணிச்சல் எழுத்தாளர். 

எழுத்து, பேச்சு என இரண்டிலுமே ஒன்றுபோல இருக்கும் எழுத்தாளர் அருந்ததி ராய், 2014ஆம் ஆண்டு டைம் பத்திரிக்கையால் செல்வாக்கு பெற்ற மனிதர் என அடையாளப்படுத்தப்பட்டவர் ஆவார். 

டெல்மீவொய்


கருத்துகள்