இரண்டு மணிநேர வானிலையை கூகுள் கணிக்கிறது! - சாத்தியமா?

 










தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் என்றால் வானிலை ஆய்வு மையத்தில் மைக்குகள் சகிதம் நிருபர்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை சமூக வலைத்தளம் மூலம் நிறைய மாறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் படங்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் சிலர் சொல்லும் கணிப்புகள் மக்களுக்கு நிறைய உதவுகிறது. வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அவர்கள் அடுத்து முப்பது ஆண்டுகளுக்குள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி மக்களோடு பல்வேறு வானிலை தகவல்களை பகிர்வார்கள் என நம்பலாம். 

இப்படி அரசு அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்களை அறிவிக்கவேண்டும் என அடம்பிடிப்பதால், நாம் தொழில்நுட்பத்தையே நம்ப வேண்டியதுள்ளது. கூகுள் இந்த வகையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி வானிலையைக் கணிக்கலாம் என்று கூறியுள்ளது. 

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை நிறைய தகவல்களைக் கொடுத்தால் போதுமானது. அதை வைத்து காலநிலையை ஓரளவுக்கு துல்லியமாக கடைபிடிக்கலாம்.  லண்டனில் உள்ள கூகுளின் டீப் மைண்ட் குழுவினர், இதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், அடுத்த இரண்டு மணிநேரத்தில் மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா, சாரல் காற்றுதான் அடிக்குமா என்பது வரையில் சொல்ல முடியுமாம். 

இதனை நவ்காஸ்டிங் என்று சொல்லுகிறார்கள். நியூமரிகல் வெதர் பிரடிக்ஷன் என்பது எப்போதும் வானிலையைக் கண்காணிக்க பயன்படும் முறை. இதில் இரண்டு மணிநேர வானிலையை என்ன முக்கு முக்கினாலும் கண்டுபிடிக்க முடியாது. சிக்கலான கணித வழிமுறையை கொண்டிருப்பதே இதற்கு காரணம். 

எனவேதான் நவ்காஸ்டிங் முறை பயன்படுகிறது. 

செயற்கைக்கோள், ரேடார் மூலம் கிடைக்கும் தகவல்களை ஒன்றாக இணைத்து டீப் மைண்ட் வேலை செய்து வானிலையைக் கணிக்கிறது. அடுத்த தொண்ணூறு நிமிடங்களுக்கு நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க டீப் ஜெனரேட்டிவ் மாடல் எனும் முறை பயன்படுகிறது. 

இந்த முறையைப் பயன்படுத்தி 2016 முதல் 2018 வரையிலான தகவல்களை பயிற்சி செய்து வருகிறது டீப் மைண்ட். இதை வைத்து சில நொடிகளில் வானிலையைக் கணித்து விடலாம். இதுபற்றிய ஆராய்ச்சி நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. 



கருத்துகள்