மலேரியாவுக்கு புதிய முறையில் தடுப்பூசி தயாரிப்பு!

 









மலேரியாவுக்கு புது மருந்து

வெயிலுள்ள ப்ரூட் ஸ்மூத்தி குடிப்பது நல்லது என எலைட் இதழ்களில் எழுதுவார்கள். படித்திருப்பீர்கள். ஆனால் உடல் நலனுக்கு கொசு ஸ்மூத்தி வந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆராய்ச்சிகள் அப்படித்தான் அறிகுறிகளைக் காட்டுகின்றன. 

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களின் உடலிலிருந்து ஒட்டுண்ணிகளை எடுத்து அதனை சுத்திகரித்து தடுப்பூசியாக பயன்படுத்த முடியுமா என்பதை சோதித்து வருகின்றனர். இந்த முறையில் வேகமாக ஒட்டுண்ணிகளை சேகரித்து அதனை சுத்திகரித்து தரமான மலேரியா தடுப்பூசியாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர். 

பிளாஸ்மோடியம் என்பதுதான் மலேரிய ஒட்டுண்ணி. இதுதான் பெண் அனோபிலஸ் கொசுக்களின் உடலைத் தாக்கி அக்கொசு கடிக்கும் போது மனிதர்களின் உடலில் நோயை ஏற்படுத்துகிறது.  பிளாஸ்மோடியம் தற்போது மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளை எதிர்கொள்ளும் சக்தியை பெற்றுவருகிறது. எதற்காக மலேரியாவுக்கென திடீர் ஆராய்ச்சி? மலேரியாவால் உலகமெங்கும் 4 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இதில் 61 சதவீதம் பேர் குழந்தைகள்தான். அதுவும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால் கவலைப்படாமல் இருக்க முடியுமா?

புதுமுறையை கண்டுபிடிக்கிறார்கள் சரி, பழைய முறைக்கு என்னாச்சு? அந்த முறையில் தடுப்பூசிகளை தயாரிக்க அதிக திறன் கொண்ட ஆட்கள் தேவைப்படுகின்றனர். அதற்கான தடுப்பூசி டோஸ்களும் கூடுதலாக உள்ளது. கொசுக்களின் உமிழ்நீரிலுள்ள ஒட்டுண்ணியான ஸ்போரோஸோய்ட்ஸ் என்பதை பிரித்தெடுத்து தடுப்பூசிகளை முன்னர் தயாரித்தனர். இந்த முறையில் ஆயிரக்கணக்கான ஒட்டுண்ணிகள் தேவைப்படுகின்றனர். 

புதிய முறையில் வேகமாக தடுப்பூசிகளை தயாரிப்பதோடு அதிக ஒட்டுண்ணிகளும் தேவையில்லை. 

புதிய முறையில் விலை மலிவாக தடுப்பூசிகளை  தயாரிக்க முடியும். இதற்கு மிகவும் திறன் கொண்ட ஆட்களும் தேவையில்லை. இவைதான் முன்னர் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு பெரும் தடையாக இருந்து வந்தன என்கிறார் பேராசிரியர் ஜேக் பாவும். 

புதிய முறையில் ஸ்போரோஸோய்ட்டுகளை தனியாக வைத்து எளிதாக தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். இந்த வகையில் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். விரைவில் இந்த ஆராய்ச்சியில் மனிதர்களையும் இணைத்துக்கொள்ளவிருக்கிறார்கள். 


சயின்ஸ் போகஸ் 

கருத்துகள்