குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் காந்தி- வரிசைப்படுத்தப்படும் அரசியல், அந்தரங்க தவறுகள்

 









காந்தியை இன்று பின்தொடர்பவர்கள் இருவகையாக உள்ளனர். காந்தியவாதிகளாக நூல்களில் காந்தியைப் பற்றிய கருத்துகளைப் படித்துவிட்டு அவரைப் பின்பற்றுபவர்கள். அடுத்து, காந்தியின் புனித தன்மை மனதை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்க, அவரை தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என இரண்டிலும் உள்ள தவறுகளை எடுத்து அதனை விமர்சித்து வருபவர்கள்.


காந்தியைப் பின்பற்றுபவர்களை விட அவரை விமர்சிப்பவர்களே இன்றும் அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஒருவர் இறந்து 150 ஆம் ஆண்டுகளாகியும் கூட ஒருவரைப் பற்றி பேசி விவாதித்துக்கொண்டிருக்க முடியுமா?

காந்தி தலித்துகளுக்கு தனி தொகுதிகள் கூடாது என்று கூறியது உண்மை. உண்மையில் அவர் அப்படிக்கூறியது, இந்தியா எதிர்காலத்தில் பிளவுபட்டு போகக்கூடாது என்ற நோக்கில்தான். காந்தி, அம்பேத்கரின் பேச்சு, எழுத்துகள் மூலமாகவே தலித்துகளின் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொண்டார். கிறிஸ்துவம், சமணம், இந்து ஆகிய மதங்களின் நூல்களை காந்தி படித்துள்ளதால், அவை பற்றிய அறிவு காந்திக்கு உண்டு.


அம்பேத்கர், அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டுமென விரும்பினார். அரசு அதிகாரம் மூலம் சாதி இழிவைப் போக்கி தீண்டாமை அழிக்க கனவு கண்டார். அதனால்தான் நேருவின் அமைச்சரவையில் பதவி ஏற்றார். ஆனால் தான் நினைத்ததை சாத்தியப்படுத்த முடியாது என்று தெரிய வந்தபோது, விரக்தியோடு தனது பதவியை விட்டு விலகினார். தலித் மக்களுக்கான விடுதலை பற்றிய கருத்துகளை எழுதி வெளியிடத் தொடங்கினார். இந்த நேரத்தில்தான் பிரிட்டிஷ் அரசு அறிவித்த தலித் மக்களுக்கான தனி தேர்தல் தொகுதிகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். இது அம்பேத்கருக்கு காந்தியிடத்தில் கடும் கோபத்தை உருவாக்கியது. அவர் இறுதிவரை தலித் மக்களுக்கான விரோதியாகவே காந்தியை பார்த்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் பூனா ஒப்பந்தம் உருவானது. அம்பேத்கர், தனது இன மக்களுக்கான சமூக விடுதலையைப் பேசினார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவர் பேசிய கருத்து ஏறத்தாழ பாகிஸ்தானை கேட்ட ஜின்னாவின் கருத்து, பேச்சு ஆகியவற்றை ஒத்திருந்தது. காந்தி இவர்களது கருத்துகளை எதிர்த்தார் என்றால், ஒட்டுமொத்த நாட்டிற்குமான நன்மை என்னவென்று அவர் தேடினார். இதற்கு எடுத்துக்காட்டு,பாகிஸ்தான்.


ஜின்னா மதம் அடிப்படையில் முஸ்லீம்களை திரட்டு நாட்டை உருவாக்கினார். ஆனால் அந்த நாடு வளர்ச்சி பெற்றதா என்றால் இல்லை. உள்ளுக்குள் பல சாதி,மதம் சார்ந்த பூசல்கள் நாட்டை கரையான் போல அரித்து வருகின்றன. இப்படி நேரிட வாய்ப்பிருப்பதை காந்தி முன்னரே அறிந்துதான், பிரிவினை கலவரம் ஏற்பட்டபோது கூட பாகிஸ்தான் உருவாகுவதை அவர் ஏற்கவில்லை. அதனை முடிந்தளவு தடுக்க நினைத்தார். அதில் அவர் வெற்றி பெறவில்லை என்பது உண்மை. அதன் விளைவை நாம் இன்றும் அனுபவிக்கிறோம். தீராத மத தீவிரவாதம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உருவாகிவிட்டது. இதனால் எல்லைப்புறங்களில் எப்போதும் நிம்மதி என்பதே இல்லாமல் போய்விட்டது. தொண்ணூறுகளில் இட ஒதுக்கீடு பற்றிய மண்டல் கமிஷன் உருவானபோது, காந்தியின் சாதி பற்றிய கருத்துகள் கவனம் பெற்றன.


அம்பேத்கர் அனைத்து முறைகளையும் அடியோடு அழிக்க வேண்டுமென பேசியபோது, காந்தி அவற்றை சீர்திருத்தங்கள் செய்து பயன்படுத்தலாம் என்று நினைத்தார். இந்திய சுயராஜ்ஜியத்தை சாதி அமைப்புகள், கிராமங்களில் உள்ள தொன்மை பழக்க வழக்கங்கள் மூலம் அடையாளம் காணலாம் என நினைத்தார். வன்முறை அல்லாது குறிப்பிட்ட கருத்துகளை வைத்திருப்பவர் தானாகவே தனது கருத்துக்களை மாற்றிக்கொள்வது சாத்தியம் என காந்தி நம்பினார். அதையே வாழ்நாள் முழுக்க விரும்பினார். இதில் சில வெற்றிகளையும், நிறைய தோல்விகளையும் பெற்றார்.


அனைத்து மேதைகளுக்கும் உள்ள கிறுக்குத்தனங்களை பலரும் பேச மாட்டார்கள். காரணம், அது அவர்களது அறிவுத்திறன் சார்ந்த சந்தேகத்தை உருவாக்குகிறது. காந்தி, இதுபற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படவில்லை. தனது பல்வேறு சோதனைகளை நூலில் வெளிப்படையாகவே எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான், நிர்வாணமாக இளம்பெண்களின் நடுவில் படுத்து உறங்குவது. தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, காந்தி தனது மனைவியுடன் உறவு கொண்டிருந்தது பற்றிய குற்றவுணர்ச்சியை பதிவு செய்துள்ளார். காந்தியை இதுபற்றி விமர்சிப்பவர்கள், காந்தி தனது ஆழ்மன உணர்ச்சி பற்றிய சோதனையை செய்த பெண்ணான மனுபென்னின் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.


கடவுள் மறுப்பாளர்கள், அம்பேத்கரியவாதிகள், இடதுசாரிகள்,முதலாளித்துவ வாதிகள் என பலரும் திட்டும் வன்மத்தை கொட்டும் ஒரு நபராகவே காந்தி இருக்கிறார். பல்வேறு விவகாரங்களில் தனது மனதிற்குத் தோன்றிய கருத்துகளை பாசாங்கின்றி வெளிப்படையாக கூறியதே அதற்கு காரணம். ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள் இருக்கும் வரை காந்தி பல்வேறு விமர்சனங்களுக்கு புன்னகைத்தபடி பதில் சொல்லியபடி நம்மோடு இருப்பார். அதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.


ஃபைசல் தேவ்ஜி

இந்தியா டுடே











கருத்துகள்