ஆண்களே பிடிக்காத காதலியின் தாயாரின் மனதை மாற்றும் காதலனின் மெகா குடும்பம்! - ஆடவாலு மீக்கு ஜோகார்லு - சர்வானந்த், ராஷ்மிகா

 














ஆடவாலு மீக்கு ஜோகார்லு


இயக்கம் கிஷோர் திருமலா 

இசை டிஎஸ்பி 

சர்வானந்த், ராஷ்மிகா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் 


கணவரால் ஏமாற்றப்பட்டு ஆண்களே ஏமாற்றுக்கார ர்கள் என  தள்ளிப்போகும் காதலியின் தாயின் மனதை மாற்றும் காதலனின் கதை..


சிரஞ்சீவியின் குடும்பம் கூட்டு குடும்பமாக வாழ்கிறது. தாய் ஆதி லட்சுமியின் தங்கைகள் அனைவருமே ஒன்றாக கூடி வாழ்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே ஆண் வாரிசு என்றால் அது சிரஞ்சீவிதான். இதில் பத்மாவதி என்ற சித்திக்கு மட்டும் குழந்தைகள் கிடையாது.  அவளுக்கு சிரஞ்சீவி தான் எல்லாமே. ஏனென்றால் அனைவருமே தங்கள் குடும்பத்தின் ஆண் வாரிசான சிரஞ்சீவி மேல் அன்பை பொழிகிறார்கள். இப்படி வளருபவனுக்கு திருமணம் என்று வரும்போது இந்த பெண்களே அதை பல்வேறு குறைகள் சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். முதலில் பரவாயில்லை என நினைக்கும் சிரஞ்சீவி பிறகு வருத்தப்பட ஆரம்பிக்கிறான். பிறகு இவர்கள் பெண்களை வேண்டாம்  என்று சொன்ன நிலை மாறி அவர்கள் சிரஞ்சீவியை மறுக்கும் நிலை உருவாகிறது. கூடுதலாக சிரஞ்சீவி சில பெண்களைச் சென்று பார்த்தால்  அவர்களுக்கு நல்ல வரன்கள் குதிர்கிறது என பேச்சும்  ஊருக்குள் கிளம்புகிறது. 


இந்த நிலையில்தான் ஆத்யா என்ற பெண் அறிமுகமாகிறாள். அவளை ஆட்டோ ஒன்றில், உதவி செய்து காப்பாற்றுகிறான். இதனால் அவளுக்கு சிரு மீது நம்பிக்கை பிறக்கிறது. பிறகு, அவளது தோழி கீர்த்தனாவுக்கு பெற்றோர் இல்லாமல் நடைபெறும் திருமணத்தை சிரு தான் நடத்தி வைக்கிறான். இதனால் ஆத்யாவுக்கும் சிருவுக்கும்  மெல்ல நட்பு உருவாகிறது. ஒருகட்டத்தில் சிரு, தன் காதலை ஆத்யாவுக்கு சொல்லுகிறான். ஆத்யாவுக்கும் அவன் மீது விருப்பம்தான். ஆனால், திருமணம் செய்வதில் பிரச்னை என  சொல்லுகிறாள். அந்த பிரச்னை  என்னவென்று சிரு கண்டுபிடித்து தீர்ப்பதுதான் கதை. 


படம், ஆண்களின் மீது வெறுப்பு கொண்ட பெண் பற்றியது. ஆனால் அதை திடமாக இயக்குநர் பேசவில்லை. இதனால் காட்சிகளின் அழுத்தம் தடுமாறுகிறது. சிரஞ்சீவியின் பாத்திரமும் சுயமாக முடிவெடுக்கும் ஆள்போல காட்சிகள் காட்டவில்லை. அவருக்குப் பதில் அனைத்து முடிவுகளையும் அவரது  அம்மாவும், அவரது தங்கைகளுமான சித்திகளே எடுக்கிறார்கள். படம் குடும்பத்திற்கான படம்தான். ஆனால் ஒரு கட்டத்தில்  இதுபடமாக, குடும்ப சீரியலா என்றே தெரியவில்லை. சித்ர லகரி படம் எடுத்த  இயக்குநர் கிஷோர் திருமலா படத்தின் அடிப்படையான கதையில் தடுமாறிவிட்டார். இதனால் திரைக்கதையும் மிக மெதுவாகவே செல்கிறது. படத்தில் அடுத்து என்ன என்று  எதிர்பார்க்க வைக்கும் காட்சிகளும் ஏதுமில்லை. 


ஸ்லோமோஷன் கல்யாண  வைபோகம்


கோமாளிமேடை டீம் 




கருத்துகள்