ஸிஸோடைபல் டிஸார்டருக்கான மருந்துகள் - மருத்துவத்துறையில் ஏற்பட்ட புரட்சி

 











இக்குறைபாடு கொண்ட மனிதர்கள் ஒருவர் பேசும்போது அவர்களைப் பார்க்க மாட்டார்கள். வேறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதிகம் பேர்கூடும் மது விருந்து, அலுவலக சந்திப்பு என்பதெல்லாம் இவர்களுக்கு ஒவ்வாமைதான். பெரும் பதற்றமாக, தவிப்புடன் அமர்ந்திருப்பார்கள். உடைகளையும் சரியானதாக போட மாட்டார்கள். கறைபடிந்தவற்றை அணிந்துகொண்டிருப்பார்கள். புதியவர்களுடன் பேசுவது, சந்திப்பது என்பதை அறவே தவிர்ப்பார்கள். இவர்களது பெயரை யாரேனும் சொன்னால் கூட பதற்றமாவார்கள். பிறர் தனது பெயரைச் சொல்லி சிரிக்கிறார்கள் என கற்பனை செய்துகொள்வார்கள். உலகளவில் இந்த குறைபாடு மூன்று சதவீத பேர்களைப் பாதிக்கிறது. 




ஆன்டிசைகோட்டிக் மருந்துகளை ஸிஸோய்ட், ஸிஸோடைபல் குறைபாடுகளை சரிசெய்ய பயன்படுத்துகிறார்கள். ஹாலோபெரிடால், குளோஸாபைன், ரைஸ்பெரிடன் ஆகியவை முக்கியமான மருந்துகள். இம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதற்கான வரலாற்றைப் பார்த்துவிடுவோம். 


1950ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு. இங்கு அறுவை சிகிச்சையாளர் ஹென்றி லாபோரைட் ஒரு பிரச்னையில் இருந்தார். அவர், நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவர்களை சற்று அமைதியாக வைத்திருக்க சரியான மருந்து கிடைக்கவில்லை. இதனால், அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளிகள் பதற்றமடைந்தனர். அதைப்பார்த்து மருத்துவர் இன்னும் அதிகமாகப் பதறினார். இதுபற்றி ஆய்வு செய்து வந்தார். அப்போது பால் கார்பென்டியர் என்பவர், குளோர்புரோமாசைன் என்ற மருந்தைக் கண்டறிந்ததைக் கேள்விப்பட்டார். இந்த மருந்து நோயாளிகளை அமைதியாக்கியது. எனவே, ஹென்றி குளோர்புரோமாசைன் மருந்தை தனது நோயாளிகளுக்கு வழங்கினார். மனநல குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்த மருந்து பயன் தரும் என பரிந்துரைத்தார். 




1952ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சியாளர்கள் இருவர், இந்த மருந்து உளவியல் குறைபாடு கொண்டவர்களுக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரைத்தனர். பிறகுதான், பிரான்ஸ் நாட்டிலுள்ள மனநல மருத்துவர்கள் சற்று பெருமூச்சு விட்டனர். அதற்கு முன்னர் நோயாளிகளை எப்படி கட்டுப்படுத்துவது என மருத்துவர்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும் தெரியவில்லை. குளோர்புரோமாசைன் மருந்து, தோராசைன் என்ற பிராண்ட் பெயரில் எளிதாக மருந்துக் கடைகளில் கிடைத்தது. இதனால் மனநல மருத்துவ வார்டுகளை பூட்டிவைக்கும் கட்டாயம் குறைந்தது. நோயாளிகளை எளிதாக கட்டுப்படுத்த முடிந்தது.  


அமெரிக்க அரசின் மருந்து நிர்வாக முகமை, 1952ஆம் ஆண்டுதான் தோராசைன் மருந்தை அங்கீகரித்தது. இதில் சில பக்கவிளைவுகள் இருந்தாலும், பயன்கள் அதிகம் என்பதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு இந்த மருந்தை அடிப்படையாக இன்னொரு   மருந்தாக பெனோதியாசைன்ஸ் மருந்தை உருவாக்கினர். 



ஆன்டிசைகோடிக்ஸ் மருந்து, மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மீட்டர்களை கட்டுப்படுத்துகிறது. இதுதான் நரம்புகளுக்கு தகவல் பரிமாற்றத்தை செய்கிறது. இந்த செயல்பாட்டில் டோபமைன், செரடோனின் மற்றும் கூடுதலான வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இவை உளவியல் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதலாக அளவில் சுரப்பது அவர்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து, வேதிப்பொருளின் அளவை சீர் செய்கிறது. ஆன்டிசைக்கோடிக்ஸ் மருந்துகளோடு, ஆன்டி டிப்ரஸ்ஸன்ட்ஸ், ஆன்டி ஆன்க்ஸைட்டி ஆகிய சிகிச்சை மருந்துகளும் தற்போது வழங்கப்படுகின்றன. 


மனிதர்கள் ஒரே விதமான உளவியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அறிகுறி அடிப்படையில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளின் அளவு மாறுபடும். ஒரே மாதிரியான மருந்து வழங்கப்படாது என்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம். 


ஸிஸோய்ட், ஸிஸோடைபல் குறைபாடு கொண்டவர்கள் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றால் தினசரி வாழ்க்கையை எளிதாக வாழலாம். முன்னர், இதுபோன்றன பிரச்னை இருப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர். தற்போது அப்படி தங்கினாலும் அவர்களுக்கான சிகிச்சை நாட்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதற்கு, மருந்துகள் ஆராய்ச்சியில் நாம் அடைந்துள்ள முன்னேற்றமே காரணமாகும். 





கருத்துகள்