வறுமையும், பெற்றோர்களின் அன்பும் அக்கறையும் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடு

 













சாலையில் செல்லும் வாகனங்களில் சிலர் உர்ரென உருமிக்கொண்டு வேகமாக சென்று அடுத்த சிக்னல்களில் நிற்பார்கள். பச்சை விளக்கு, சிவப்பு விளக்கு ஆகியவற்றை சீரியல் பல்புகளாக நினைத்து ஆக்சிலேட்டரை முறுக்கிப் பாய்வார்கள். யாரையாவது விபத்துக்குள்ளாக்கி கையில் கட்டு போட்டாலும் பெற்றோர் பைக் எடுக்க விடமாட்டேன் என்கிறார்கள் என நண்பர்களிடம் புலம்புவார்கள். 


சென்னையில் காமராஜர் சாலையில் தங்களது பைக் ஓட்டும் திறமையைக் காட்டுபவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள். வேகம் மட்டும்தான் இவர்களின் கண்களுக்குத் தெரியும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாத சம்பளக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கும் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். அடிக்கடி காவல்துறையில் சிக்கி அபராதம் கட்டுவார்கள். எப்போதும் போல கவாஸாகி நின்ஜா போல மைலேஜ் ஹீரோ பைக்கை வடிவமைத்து சிக்னலில் முந்திச்செல்வார்கள். 


இப்படிப்பட்ட எல்லை மீறும் மனிதர்களை ஊடகங்கள், டெய்லி புஷ்பம், பூந்தி போன்ற பத்திரிகைகள் சமூக விரோதி என அழைத்தாலும் சைக்கோ பாத் என அழைத்தாலும் மருத்துவத்துறைப்படி இவர்களை ஆன்டி சோஷியல் டிஸார்டர் பாதிப்பு கொண்டவர்கள் எனலாம். இப்படி சமூக அடிப்படை விதிகளை மீறுபவர்கள் எதிர்காலத்தில் சமூக விரோதிகளாக, பெரும் குற்றவாளிகளாக உருவாக வாய்ப்புள்ளது. விதிகளை மீறியவர்கள் உடனே குற்றவாளிகள் என்று கூறமுடியாது. நடவடிக்கை மாறாதபோது மெல்ல மாறி பரிணாமவளர்ச்சி பெற்று குற்றவாளிகளாக உருவாவார்கள். 



விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி பெரும் விபத்துகளை ஏற்படுத்துவார்கள். அதற்காக  காவல்துறை வரும்போது என்னை கைது பண்ணுங்க் இன்ஸ்பெக்டர் என்றெல்லாம் மனசாட்சியோடு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். விபத்துக்கு காரணம், அடிபட்டு உயிரிழந்த மனிதன் அல்லது விலங்கு ஆகியோரின் மீது பழிபோடுவார்கள். படுகாயமடைந்தவனை வாய்ப்பு கிடைத்தால் அடிக்கவும் பாய்வார்கள். பாலுறவிலும் சாலையில் காட்டும் புல்லட் வேகம்தான். பெரும்பாலும் இணையரை கடுமையாக துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். 


தனக்கு மட்டுமே நேர்மையாக இருப்பார்கள். பிறரிடம் கொள்ளும் உறவில் நேர்மையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. பிறரை எந்தளவு தனக்காக, பிரயோஜனமாக பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அந்தளவு பயன்படுத்திக் கொள்வார்கள். 


படிக்கும்போது ஆளுமை பிறழ்வு குறைபாடு உள்ளவர்கள் வகுப்புக்கு வரமாட்டார்கள். வேலை செய்கிறார்களா, வேலையிலும் திடீரென அப்ஸ்காண்ட் ஆவார்கள். சூதாடுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். சலிப்பு ஏற்பட்டால் வேலை மாறுவார்கள், உறவுகளை மாற்றுவார்கள், பணம் வேண்டும் அதற்காக பல்வேறு பொய்களை அள்ளிக் கொட்டுவார்கள். பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் நான் எதற்கு கவலைப்படவேண்டும் என நினைக்கும் ஆட்கள் இவர்கள். 


திருமணமாகி பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்குத் தேவையான உணவு கொடுக்க இவர்களிடம் பணம் இருக்காது. குடி, போதை என திரிவார்கள். எனவே, குழந்தைகள் பிறரிடம் உதவி கேட்டுத்தான் வயிற்றை நிரப்பும் நிலையில் இருக்கும். அதை அறிந்தாலும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். குடிநோயாளியாக, வீடற்ற மனிதர்களாக, விதி மீறல்களுக்காக சிறையிலோ இருப்பார்கள். மன அழுத்தம், பொறுமையின்மை, எல்லையற்ற கோபம், பொருட்களை உடைத்து நொறுக்குவது, அழிப்பது ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்கள். 


சமூகப் புறக்கணிப்பு குணம் கொண்டவர்கள் என்ன செய்வார்கள் என மேற்குலக உதாரணத்தைப் பார்ப்போம். அமெரிக்காவில் 1959ஆம் ஆண்டு கான்சாஸில் உள்ள பண்ணை வீட்டில் வாழ்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்டனர். இதை செய்தது அன்று சைக்கோபாத் என பெயர் சூட்டப்பெற்ற பெரி ஸ்மித், ரிச்சர்ட்ட் ஹிக்காக் ஆகிய இருவர்தான். இவர்கள் இருவருமே சமூக புறக்கணிப்பு குணம் கொண்டவர்கள்தான். 


பெரி ஸ்மித்தை மட்டும் பார்ப்போம். இவரது குடும்பம் பெரிய வருமானம் கொண்டதல்ல. இரு சகோதரிகள், இரு பிள்ளைகள் என மொத்தம் நான்குபேர் கொண்ட குடும்பம். அப்பா, சட்டவிரோதமாக மதுபானங்களை விற்று வந்தார். பெரிய வருமானம் இல்லை என்பதால், அடிக்கடி சண்டை நடக்கும் குடும்பம் அது. அம்மா, மெல்ல குடிக்கு அடிமையாகி குடி நோயாளியானார். பிறகு பணத்திற்காக நிறைய ஆண்களுடன் பாலுறவு கொள்ளத் தொடங்கினார். இதைப் பார்த்த பெரியின் அப்பா, வீட்டுக்கு வந்த பிற ஆண்களை அடித்து வெளியே அனுப்பினார். மனைவியையும் அடித்து நொறுக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த குழந்தைகள் பீதியடைந்தனர். குறிப்பாக பெரி. 


அவர் வீட்டில் சரியாக உணவு கிடைக்காததால் வெளியே நண்பர்களுடன் சுற்றத் தொடங்கினார். சிறு திருட்டு, கொள்ளை என வாழ்ந்தார். ஆனாலும் ஆழ்மனதில் இருந்த பயம் காரணமாக அவர் காப்பகத்தில் இருந்தபோது படுக்கையை இரவில் நனைத்திருக்கிறார். அதற்காக பிறர் முன்னிலையில் காப்பாளராக இருந்த பெண்மணி கேலி செய்திருக்கிறார். அவனை படுக்கை உறையை கழுவச்செய்து அவமானம் செய்திருக்கிறார். அவையெல்லாம் பெரியின் வாக்குமூலமாகவே கோல்ட் பிளட் நூலில் பதிவாகியுள்ளது. இதைத்தான் பின்னாளில் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தனர். 


வின்சென்ட் காபோ




கருத்துகள்