தீக்குச்சியை எரித்தே வெளிச்சம் - கடிதங்கள் - கதிரவன்

 





பிக்பாக்கெட் டூ ரட்சகர்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும். எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார். அதாவது, தினசரி எங்களுக்கு வேலை உண்டு.

இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ், டி.எம்.கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன். ஊக்கமூட்டும்படி இருந்தது. சமஸ் செயலூக்கம் பற்றியும், ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார். வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு, நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார். கலை எப்படி மனிதனை மாற்றுகிறது, அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை. இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான்.

காலையில் கவிதா அக்கா பேசினார். தற்போது ஓமனில் வாழ்கிறார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர். அவருக்குப் பிடித்த நூல்கள், வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம். விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார். இவர் எனக்கு நண்பரல்ல. அண்ணனின் தோழி. உறவினர்.

தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித்தேன். 750க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை கொடும்பிணி கொண்டோரை பராமரித்து வருகிறார். இத்தனைக்கும் இளமையில் பிக்பாக்கெட்டாக இருந்தவர். கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்க்கை வேறு திசையில் போகிறது. எந்த இடத்தில் மனம் மாறுகிறது என யாரும் சொல்லமுடியாது. நன்றி!

அன்பரசு

22.1.2022

மயிலாப்பூர்

-----------------------------------------------------------------------------




தீக்குச்சியை எரித்தே வெளிச்சம்!

அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

நோய்த்தொற்று ஓரளவுக்கு இங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஞாயிறு லாக்டௌன் விலக்கப்பட்டு விடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி நடந்தால் நல்லதுதான். நாங்கள் தினசரி செய்திகளை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறோம். ஃபாரின் ரிடர்ன் முதலாளிக்கு பிடித்தால் வேலை இப்படியே தொடரும். இல்லையா மீண்டும் கோட்டை அழித்துவிட்டு திரும்ப வரையவேண்டியதுதான்.

கதிரவன், முன்னர் நீங்கள் அனுப்பி வைத்த கடிதங்களை தொகுத்து தனி நூலாக்கிவிட்டேன். வெகுநாட்களாக தேங்கி கிடந்த வேலை அது. நூலை முடித்து மின் நூலாக அமேஸானில் பதிவேற்றம் செய்துவிட்டேன். இதுவரை அமேஸானில் பத்து மின்னூல்களை எழுதி பதிவிட்டுள்ளேன்.

குறிப்பிட்ட நேரத்தில் விஷயங்களை சேகரித்து எழுத முடியுமா என்று சோதித்த சோதனையின் விளைவுகள் இவை. வணிக ரீதியாக இந்த மின்நூல்களால் பெரிய பயன் ஏதுமில்லை. இந்த நூல்களை எழுதி முடிக்கும்போது தன்னிறைவு கிடைக்கிறது. அதுதான் இப்போதைக்கு ஊக்கம். பணம் பிறகுதான். அதுவும் எதிர்காலத்தில் தம்பிடி என கிடைத்தால்தான். ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் மனிதநேய உதவிகளை வழங்கிய மனிதர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். அற்புதமான பதிவு. மருத்துவம், சமூகம், சட்டம் என பல்வேறு பிரிவிகளைச் சார்ந்து இயங்குபவர்கள். தன்னைக் கரைத்து, தீக்குச்சியாக எரித்துக்கொள்பவர்கள்தான் காலம் சென்றும் பேசப்படுகிறார்கள்.

அன்பரசு

25.1.2022

மயிலாப்பூர்







கருத்துகள்