இரண்டு இந்தியாக்களைப் பற்றி பேசும் தனிக்குரல் கலைஞன்!

 











உண்மை ஏற்படுத்தும் உறுத்தல்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன். ஃபிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை. நிதானமாகத்தான் படித்து வருகிறேன்.

இரண்டு இந்தியா பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள். வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள். சமகால உண்மையைத்தான் பேசியிருந்தார். வீர்தாஸ் பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார். உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே? சங்கிகள் உடனே வரிந்துகட்டி கிளம்பிவிட்டனர். இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது. வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள்.

கடந்த 16ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியிருந்தது. அதைப் படித்தேன். இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரவனின் பிரமாதமான கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் திறமையான கலைஞன் கதிரவன். நன்றி!

அன்பரசு

21.11.2021

மயிலாப்பூர்

-----------------------------------------------------------------------------------------



















மனதில் உருவாகும் மாயக்காட்சி!

அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.

கடந்த ஆண்டில் எட்டாவது மாதம் புத்தக கடையில் வாங்கிய நூலை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியிருக்கிறேன். மெல்லப் படித்து151 பக்கங்களைத் தொட்டிருக்கிறேன். ஷோபா டே எழுதிய கட்டுரை நூல். இந்திய மக்களுக்கு வன்முறை ஏன் பிடித்திருக்கிறது என விளக்கி எழுதியிருந்தார்.

வெயில் எப்படியோ மழை பெய்வது ஒருவிதமான மந்தநிலையை மனதில் ஏற்படுத்துகிறது. எண்ணங்கள் அனைத்தும் மழைத்துளிகளாகி கீழே விழுந்து உடைய மூளையில் பனிமூட்டம் உருவாகிறது. இதெல்லாம் இதுவரை அறியாத மாயக்காட்சி போன்ற தன்மையில் உருவாகிறது. எங்கள் நாளிதழுக்காக துறை சார்ந்த நூல்களையும் படிக்கத் தொடங்கவேண்டும். அப்போதுதான் செய்திகளை அறிந்து எழுத முடியும்.

நாளிதழ் பொறுப்பாசிரியரிடம், ப்ரீலான்சராக எழுதும் எழுத்தாளர்களின் எண்களைக் கேட்டும் இதுவரை தரவில்லை. அவருக்கு என்ன பிரச்னையோ? இன்று என் ஆசான் கேஎன்எஸ்ஸைச் சந்தித்தேன். டீ குடித்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு வந்துவிட்டேன். பெரிதாக ஏதும் பேசவில்லை. நிறையப் பேர் தன்னிடம் வேலைவாய்ப்பு கேட்பதாகச் சொன்னார். நானும் அப்படி ஏதாவது கேட்டுவிடுவேனோ என சங்கடப்பட்டிருக்கலாம். நான் அவரிடம் எந்த உதவியும் கேட்கும் எண்ணத்தில் இல்லை. நன்றி சந்திப்போம்!

அன்பரசு

22.11.2021

மயிலாப்பூர்





கருத்துகள்