உணர்வுகளால் ஆனது சமையல் - கடிதங்கள் - கதிரவன்

 








பெண்ணுடலை அறிய கோட்டை பயணம்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

நான் கடந்து வந்த செவ்வாய் திருவண்ணாமலை சென்றுவிட்டேன். இன்று காலை பதினொரு மணிக்கு மயிலாப்பூர் அறைக்கு வந்தேன். குடும்பஸ்தர்களின் வீட்டுக்குப் போவது எனக்கு சங்கடம் அளிக்கிற விஷயமாக உள்ளது. வினோத் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை. இது அவருக்கும் சற்று நிம்மதி கொடுத்திருக்கும்.

திருவண்ணாமலையில் ஆலிவர் என்பவரின் அறையில் தங்கினேன். தஞ்சையைச் சேர்ந்தவர். வினோத் அண்ணாவைப் போல புகைப்படக்காரர்தான் அவரும். முதலில் என்னைப் பார்த்து லெஜண்டுடா என பதற்றமானவர் , பிறகு சமாதானமாகிவிட்டார். ஓவியம், புகைப்படம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். அதுதான் பிழைப்பும் கூட. இந்த முறை பயணத்தில் செஞ்சி கோட்டைக்குச் சென்றோம். அங்கு வரலாற்றை அறிய விரும்புபவர்களை விட பெண்ணின் உடலை அறிய விரும்புபவர்கள்தான் அதிகம் இருந்தார்கள்.

சுவர்கள் எங்கும் காதலர்களின் பெயர்கள்தான். அதைக்கடந்துதான் வரலாறு, வெங்காயம் எல்லாம். டிக்கெட் வாங்குவது எல்லாமே டிஜிட்டலாக க்யூஆர் கோட் மூலம்தான். தரையில் கற்பாளங்கள், சுவர்களில் கருங்கற்கள் இருப்பதுதான் இத்தனை ஆண்டுகளாகியும் கோட்டை தாக்குப்பிடிப்பதன் ரகசியம். பெரிய கலைப்பொக்கிஷம் என்றெல்லாம் கூறிவிட முடியாது.

மலையில் ஏறி இறங்க உடலில் தெம்பு வேண்டும். இல்லாவிட்டால் கல் மண்டபத்தில் சாய்ந்து உட்காரவேண்டியதுதான். ஆலிவர் இடையில் சோர்ந்தாலும் நான் அவரை ஊக்கமூட்டி மேலே கூட்டிச் சென்றேன். ராணி கோட்டை ராஜா கோட்டை என இரண்டுமே சிதிலமடைந்தவைதான். நிறைய குப்பைகள் சேர்ந்து மோசமான நிலையில்தான் இருக்கின்றன. நிதானமாக பார்க்க ஒரு நாள் போதாது என்பதே உண்மை. நன்றி!

அன்பரசு

13.1.2022

மயிலாப்பூர்

------------------------------------------------------------------------


உணர்வுகளால் ஆனது சமையல்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

இங்கு ஞாயிறு. சிறப்பு திரைப்படம் போல சிறப்பு லாக்டௌன். அறையில் அடைந்து கிடப்பது பெரும் அவஸ்தை. ஊருக்குப் பொங்கலுக்குப் போனவர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்யும் ஆப்ஷனைப் பெற்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். நான் அமேசானில் ஆர்டர் செய்த புத்தகங்கள் வந்துவிட்டன. இரு புத்தகங்கள் கையில் கிடைத்துவிட்டன. இன்னும் ஒரு புத்தகம் மாத இறுதியில் கிடைக்கும். மூன்றாவது நபரிடமிருந்து அமேஸான் வாங்கிக் கொடுப்பதால், காலதாமதம் என விளக்கம் கொடுக்கிறார்கள்.

ரீடர்ஸ் டைஜெஸ்ட் மாத இதழில், நடிகர் நஸ்ரூதின்ஷா பேட்டி படித்தேன். சமகாலத்தைப் புரிந்துகொண்டு ஓடிடி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். நேர்காணலில் நிறைய விஷயங்களை காலப்போக்கில் புரிந்துகொண்ட சுய அனுபவத்தில் பேசியிருந்தார். சினிமாவில் முஸ்லீம்கள் பங்களிப்பு, முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலை, பிரிவினை, புதிய இயக்குநர்கள் என அனைத்துக்கும் விளக்கமாக பதில் சொல்லியிருந்தார். நின்னிலா நின்னிலா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். தமிழ் டப்பிங்கில் தீனி. சசி என்பவர் இயக்கிய படம். அதிக உடல்பருமன் கொண்ட செஃப் ஒருவர் பற்றியது.

சமையல் கணக்குகளால் ஆனதல்ல. உணர்வுகளால் ஆனது. அதனை மகிழ்ச்சியான மனதோடு சமைக்க வேண்டும் என படம் சொல்லுகிறது. அசோக் செல்வன், ரிதுவர்மா, நித்யா என்ற 3 பேரின் பாத்திரங்களும் சிறப்பாக உள்ளது. நித்யாமேனன் தனது நடிப்பால், மனதை கொள்ளையடித்திருக்கிறார். சமையல் பற்றிய படம். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். நன்றி!

அன்பரசு

16.1.2022

மயிலாப்பூர்



கருத்துகள்