அதானியால் கையகப்படுத்தப்படும் என்டிடிவி - முடிவுக்கு வரும் டிரெண்ட் செட்டிங் சேனலின் யுகம்!

 

 

 

 

 

என்டிடிவி பிரணாய் ராய் வீடு உட்பட 4 இடங்களில் சிபிஐ ரெய்டு | India News ...

 

இந்திய ஊடகங்களின் முன்னோடி என்டிடிவி!


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன்பெற்று, அதைக்கட்டக்கூட நினைக்காத தொழிலதிபர். அவருக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, ஹேர்கட் என்ற பெயரில் கடன் தள்ளுபடியை ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அப்படிப்பட்ட தகைமை சான்ற தொழிலதிபர் தான் கௌதம் அதானி. அவரின் எண்ணெய், பருப்பு, அரிசி வகைகளால் புழங்காத இந்தியாவின் நகரங்கள் கிடையாது. அவர் தற்போது என்டிடிவிக்கு கடன் கொடுத்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் என்டிடிவியை மறைமுகமாக கைப்பற்றியுள்ளார்.

குறிப்பாக ஏன் என்டிடி டிவி. இந்த டிவி தான் தற்போது மத்திய அரசுக்கு எதிரான என்பதை விட உண்மையை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து வருகிறது. யாருக்கு என்று கேட்கிறீர்களா? சிறு, குறு நகரிலுள்ள ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான். என்டிடி டிவி எதனால் முக்கியத்துவம் பெறுகிறது? 1984ஆம் ஆண்டு ராதிகா ராய், பிரனாய் ராய் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் இது. தொடக்கத்தில் டிவி சேனல்களுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தது. குறிப்பாக தூர்தர்ஷனில் தி வேர்ல்ட் திஸ் வீக் என்ற உலக நிகழ்வுகளை அலசும் நிகழ்ச்சி முக்கியமானது. இதை தொடங்கிய ராதிகா ராய், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே ஆகிய பத்திரிகையில் பணியாற்றியவர். பிரனாய் ராய் டெல்லி பொருளாதார பள்ளியில் கல்வி கற்றவர். தொழில் முறையில் கணக்கு தணிக்கையாளர்.

பல்வேறு டிவி சேனல்களுக்கு தேர்தல் கால சர்வே, உடனடி செய்திகள் ஆகியவற்றை அந்தந்த இடங்களுக்கே நிருபர்களை ஏற்பாடு செய்து நிகழ்ச்சிகளை தயாரித்து கொடுத்தது என்டிடிவி. பிறகு 1988ஆம் ஆண்டு ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. 2003ஆம் ஆண்டு முதல் தனி டிவி சேனலாக செய்தியை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி 24 மணிநேரமும் செயல்படத் தொடங்கியது. அதுவரை ஊடகங்கள் பெரியளவு புதுமைத்தன்மை கொண்டவையாக இல்லை. டெஸ்கில் உட்கார்ந்து செய்தியை அசுவாரசியமாக படித்துக்கொண்டிருந்தனர். இதனை என்டிடிவி மாற்றியது. லைவ் என்பதை இந்தியாவில் வெற்றிகரமாக உருவாக்கி அதில் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது என்டிடிவிதான்.

டிவி சேனலை மட்டுமே பிராண்டிங் செய்யாமல் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கென தனியாக விளம்பரம் செய்த்து. இதனால், நிகழ்ச்சி என்றால் குறிப்பிட்ட தொகுப்பாளரின் ஆளுமைத்திறன் வெளியே தெரியத் தொடங்கியது. இப்படித்தான் ராஜ்தீப் சர்தேசாய், அர்னாய் கோஸ்வாமி ஆகியோர் உருவானார்கள். என்டிடிவி ஆங்கில செய்தி சேனலோடு, இந்திக்கென என்டிடிவி இந்தியா, வணிகத்திற்கென என்டிடிவி பிராஃபிட், வாழ்க்கைத்தரம் சார்ந்து என்டிடிவி குட்டைம்ஸ், பொழுதுபோக்கிற்கென என்டிடிவி இமேஜின் ஆகிய சேனல்கள் உருவாக்கப்பட்டன. இதில் மகத்தான வெற்றி பெற்ற சேனல், என்டிடிவி ஆங்கில செய்தி சேனல்தான். பார்வையாளர்களை நாங்கள் சம்பாதித்தோம். காசு கொடுத்து வாங்கவில்லை என்று சொல்லும்படி என்டிடிவி முன்னேற்றம் அடைந்துள்ளது. அதானி அதை வாங்கிவிட்டதால் செய்தியின் தரம் என்பது அரசுக்கு ஜால்ரா தட்டும் கோஷ்டியில் இன்னொரு உறுப்பினர் சேர்கிற கதைதான்.

அமெரிக்காவில் உள்ள ஃபாக்ஸ் டிவி சேனல், வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அதில்தான் கத்துவது, முறைப்பது, மிரட்டுவது ஆகிய இயல்பு கொண்ட ஆட்கள் உண்டு. அதைப்போலவே இந்திய ஊடகங்களும் மாறத்தொடங்கின. இப்போது செய்தி சேனல்கள் எவையும் அரசை எதிர்த்து, அரசின் கொள்கை பற்றிய ஆழமான விவாதங்களை நடத்துவதில்லை. நடத்தினால் என்டிடிவி சந்தித்தது போல பல்வேறு ரெய்டுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அரிய உண்மையை ஊடகங்கள் அறிந்து கொண்டுள்ளன.  மத்திய அரசு பற்றிய உண்மையை என்டிடிவி சொன்னாலும், நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நினைத்தபடி விளம்பர வருவாய் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் கூட கடந்த ஆண்டு கிடைத்த மொத்த வருமானம் 357 கோடி ரூபாய். இதில் லாபம் என்று பார்த்தால்  75 கோடி ஆகும்.

ஊடகங்கள் ஏற்கெனவே மத்திய அரசு போடும் பிஸ்கெட்டுக்காக மண்டியிட்டுவிட்டன. இதில் லட்சியத்தை மனதில் கொண்டு ஒற்றை நிறுவனமாக என்டிடிவியும் எத்தனை நாட்கள் செயல்பட முடியும்? அதன் நேர்மையான செயல்பாடும் முடிவுக்கு வருகிறது.

தி இந்து ஆங்கிலம் aug 28,2022

srinivasan ramani


 
 

 

கருத்துகள்