சத்திய பிறப்பு!



Related image

பிறப்பு

குஜராத்தின் போர்பந்தரில் புட்லிபாய் பிரசவ வேதனையில் முனங்கிக்கொண்டிருந்தார். இரண்டு ஆண்கள், ஒரு பெண் என ஏற்கனவே மூன்று பிள்ளைகள் பிறந்திருக்க , புட்லிபாய்க்கு அது நான்காவது பிரசவம். நட்சத்திரம் எல்லாம் தோன்றவில்லை; தண்ணீர் திராட்சை ரசமாக மாறவில்லை.

1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று மோகன்தாஸ் பிறந்தார். "பாதரசம் போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தவனை கட்டுப்படுத்தவே முடியாது" என்று ரலியத் கூறினார். புத்தகங்களின் மீது பேரார்வம் கொண்டவரை சிரவணா, அரசர் ஹரிச்சந்திரா கதைகள் ஈர்த்தன. இளமையில் அவரது மனதை ஈர்த்த ஹரிச்சந்திரா அவரது ஆளுமை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.

1893 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று  டர்பனில் பிரிடோரியா செல்ல முதல் வகுப்பு டிக்கெட் எடுத்தார். இந்திய நிறுவனம் ஒன்றுக்காக வாதாட 625 கி.மீ பயணிக்கவிருந்தார். அங்கு நிலவிய இனவேறுபாடு பற்றி தெரியாததால் நேரடியாக ரயில் நின்றதும் முதல் வகுப்பு டிக்கெட்டோடு முதல்வகுப்பில் ஏறி இந்தியர்களின் இஷ்டமான ஜன்னல் சீட்டை பிடித்தார். அரைமணிநேரம்தான் டர்பன் அழகை ரசித்திருப்பார். அப்பெட்டியில் ஏறிய வெள்ளையர் இவரை முறைத்து பார்த்தபடியே இருந்தார். பின்னர், இது வெள்ளையர்கள் மட்டுமே அமரும் பெட்டி. என எரிச்சலாக பேச, நிதானமிழக்காத காந்தி நான் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்திருக்கிறேன் என்று கூறி ஜன்னல் பக்கம் திரும்பினார். எதற்கு இக்கேள்வி என நினைத்துக்கொண்டே இருந்தவருக்கு பீட்டர்மரிட்ஸ்பர்க் நிலையத்தில் ரயில் நின்றதும் பதில் கிடைத்தது.

வெள்ளையரின் புகாரைக் கேட்டு அறச்சீற்றத்தோடு காந்தியை கண்ட டிடிஆர், மூன்றாவது பெட்டியில் ஏற அவரை வற்புறுத்தினார். காந்தி மறுக்க அவரை குண்டுக்கட்டாக தூக்கி ரயில் நிலையத்தில் பெட்டியோடு வீசவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. காந்தியின் உயர்ரக கோட்டு அனைத்தும் புழுதியாகி விட கண்ணீர் பெருக ஒருநிமிடம் நொந்துபோனார்.

காரணமிருக்கிறது கலங்க;. அவரது அப்பா, தாத்தா அனைவரும் அரசில் திவான் தகுதிக்கு பொறுப்பில் இருக்க முதல் வகுப்பில் பயணிக்க கூடாது என ஒருவர் தடுத்து அவமானப்படுத்தினால் எப்படியிருக்கும்? அவமானம் மனதை அமிலமாய் அரிக்க பயணியர் அறையில் விரக்தி பெருக அமர்ந்திருந்தார் காந்தி.


நேடல் காங்கிரஸ் அமைப்பை தொடங்கி வெள்ளையர்களின் இனவேறுபாட்டிற்கு எதிராக ஆப்பிரிக்கர்களையும் இந்தியர்களையும் அணிதிரட்டியவர் மனதில் வன்மம் அணுவளவும் இல்லாதது ஆச்சரியம்.  தன்னை அவமானப்படுத்திய அதே ஆங்கிலேயர்களுக்கு போயர் போரில் மருத்துவ உதவிகளுக்கென குழு அமைத்துக்கொடுத்து உதவினார். பிரிட்டிஷ் போரில் வெல்ல இனவெறுப்பும் அப்படியே விட்ட இடத்திலிருந்து தொடரந்தது.

1904 ஆம் ஆண்டு பீனிக்ஸ் பண்ணையை டர்பனில் தொடங்கி அகிம்மை போராட்டத்தை பிரசாரம் செய்கிறார். அப்போது தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்கள் தம்மை அரசிடம் பதிவு செய்வது அவசியம் ஆதார் டைப்பில் ஒருமுறையை வெள்ளையர்கள் அமுல்படுத்தினர். "சிறுபான்மையினரோடு சேர்ந்து நிற்பதே எனது தர்மம்" என உறுதியாக நின்றவர் தன்னை அங்கு வாழும் இந்தியர் என்ற முறையில் பதிவு செய்யவும் துணிந்தார். 1913 ஆம் ஆண்டு 2 ஆயிரம் மக்களோடு சட்டத்தை எதிர்த்து பேரணி சென்றார் காந்தி. டிசம்பர் 11 அன்று காந்தி கைது செய்யப்பட்டார் . எதிர்ப்பு அதிகரிக்க அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது. காந்தி விடுதலையானார். பின் இரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமுலானது. 

1910 ஆம் ஆண்டு டால்ஸ்டாய் பண்ணையை தொடங்கினார் காந்தி. சத்யாகிரக போராட்டத்தை தொடங்கி அரசுக்கு எதிராக நடத்தி உரிமைகளை வென்றெடுத்தார் காந்தி. 1914 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம்  தேதி இந்தியாவுக்கு திரும்பினார். சுதந்திர வரலாற்றின் தொடக்கம் அதுவே.


ஆக்கம்: ச.அன்பரசு

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(செவ்லின் செபாஸ்டியன்)