ரயில்வே பொருட்களை திருடும் இந்தியர்கள்


ரயில் திருட்டு! –

Image result for railway things stolen


மேற்கு ரயில்வேயில் ரூ2.76 கோடி(2017-18) மதிப்பிலான களவுபோன பொருட்களை ரயில்வே போலீஸ் மீட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

கழிவறை கோப்பை, மின் விசிறி, படுக்கை விரிப்பு, தலையணை, தலையணை கவர் என பல பொருட்களையும் பயணிகள் அபகரிக்க முயன்றதை போலீஸ் படை தடுத்து மீட்டுள்ளது.
1.95 லட்சம் டவல்கள், 81,736 பெட்ஷீட்கள், 55,573 தலையணை உறைகள், 5,038 தலையணைகள் நெடுந்தூர ரயில்களில் திருடப்பட்டுள்ளன என கணக்கு கூறியுள்ளது மேற்கு ரயில்வே. கழிவறைகளில் திருடப்படும் குழாய்கள், பைப்புகள், குவளைகள் இரும்புக்கடைகளில் நல்ல விலைக்கு விற்கப்படுவது திருட்டு பரவலாக அதிகரிக்க முக்கிய காரணம்.
 ரயில்களின் ஏசி கோச்சுகள் உட்பட இப்படி பொருட்கள் கொள்ளை போவதால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரயில்வேக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.4 ஆயிரம் கோடி. இவ்வாண்டில் ஏப்ரல்- செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இந்திய ரயில்வே பறிகொடுத்துள்ளது. மும்பை டிவிஷனில் 2016-17 ஆண்டில் 56 ரயில்களிலிருந்து ரூ.71.52 லட்சம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கிறுகிறுக்கவைக்கும் திருட்டு!
2


ரத்ததான வள்ளல்!

ஐஏஎஸ் அதிகாரியான ராஜன் சுக்லா, ரத்த தானம் அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி அரசு அதிகாரியாக திகழ்கிறார். 1980 ஆம் ஆண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் அளிக்கும் இவர் கடந்த 38 ஆண்டுகளாக இப்பணியை கர்ம வீரராக செய்து வருகிறார்.

அண்மையில் தன்னுடன் ரத்த தானம் வழங்கும் ஆர்வம் கொண்ட 130 பேர்களை அழைத்துக்கொண்டு லக்னோவிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தார். “எங்கள் குடும்பமே ரத்த தானம் அளித்துவரும் வரலாறு கொண்டது. மக்களின் உயிர்காக்க உதவுவதில் என் பெற்றோர், சகோதரர்களுக்கும் மகத்தான மனநிறைவு உள்ளது” என்கிறார் ராஜன் சுக்லா. 112 ஆவது முறையாக ரத்த தானம் செய்த ராஜன் சுக்லா, இப்பணியை தனது பதினெட்டு வயதில் தொடங்கி செய்துவருகிறார். “ரத்தத்திலுள்ள பிளாஸ்மா, ரத்த தட்டுகள், சிவப்பணு, வெள்ளையணுக்களை பிரித்தெடுத்தால் நான்கு நோயாளிகளுக்கு உதவ முடியும். ரத்த தானமளிப்பவர்களின் உடல்நிலையையும் கண்காணிக்க முடியும்” என்கிறார் மருத்துவமனை தலைவரான டாக்டர் வி.கே.சர்மா.