தினகரன் தீபாவளி மலரில் என்ன புதுசு?

தினகரன் தீபாவளி மலர்

ஆசிரியர்: கே.என்.எஸ்

வடிவமைப்பு: வேதா& கோ

ரூ.150






Image result for dinakaran daily


தினகரன் நாளிதழின் மண்சார்ந்த அக்கறையும் அன்பும்  கொண்ட செய்தியாளர்களின் துணையுடன்  குங்குமம் லே-அவுட் டீமுடனும் அடித்து ஆட களமிறங்கியிருக்கிறார் ஆசிரியர் கே.என்.எஸ்.

சைவ சுடலைமாடன், சீரணி இனிப்பு மிட்டாய்,  கல்லணை முதல் முக்கொம்புவரை, தாலா சாப்பாடு,  ரொட்டேலா பண்டுகா உள்ளிட்ட கட்டுரைகள் பரபர வாசிப்பிலும் கவனத்தை ஈர்க்கும்படி செம்மையாக எழுதப்பட்டுள்ளன. வடிவமைப்பிலும் பட்டுப்புடவைக்கு பொன்சரிகை போல அட்டகாசம். 

நூலெங்கும் முந்திரியாக ராஜாகுமார் அப்புவின் ஹைக்கூ கவிதைகள் நெடும் கட்டுரைகளுக்கு இளைப்பாறுதல்களாக தீபாவளிக்கு இனிமை சேர்க்கின்றன.

பழங்குடிகளின் பறிபோன வாழ்வை இதமாக சொல்லி மனதில் கனம் சேர்க்கும் பறிபாடல்(இளங்கோ கிருஷ்ணன்) கவிதை கிளாஸ் டச். தினகரன் தீபாவளி மலரில் ஆன்மிகத்திற்கான பக்கங்கள் குறைவு. ஆனால் மலரை வாசிக்கும்போது உங்களுக்கு அது நினைவிலேயே இருக்காது என்பது கட்டுரைத்தேர்வின் திறமை. 

இதழில் இரு சிறுகதைகள் நேர்த்தியாக மனதை கவருகின்றன என்றால் அது மனோஜ் எழுதிய ஞாபகச்சிறகு, கலாப்ப்ரியாவின் வசீகர மயக்கும் எழுத்தில் உருவான கருக்கலில் மலரும் மல்லிகை. 

ஞாபகச்சிறகு, ட்ரெண்டியான காதல் கதைதான். எதார்த்தம், காதல், டெக்னாலஜி, தத்துவம் என பத்திக்கு பத்தி ஜானர் மாறிக்கொண்டே இருப்பது கதையின் ஸ்பெஷல்.  சாதாரண காதல் கதையாக இருப்பதில்  புனைவை 35 சதவிகிதம் கலந்து அதனை வேறுலெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார் மனோஜ். 

ச.பிரேம்குமாரின் 96 ஹிட்டடித்த கிறக்கத்தில் தமிழகம் இன்னும் மீளவில்லை. கலாப்பிரியாவின் சிறுகதை, அதன் தொடர்ச்சியோ என வியக்கவைக்கும் விதமாக  நெகிழவைக்கிறது. கல்யாணம் விபத்துதானோ என கதையின் இறுதியில் சௌந்தரம் அழும்போது சௌந்தரத்தின் கதை நம் மனதில் ஓடத்தொடங்குவதற்கு கலாப்ரியாவின் மயக்கும் எழுத்து திறன்தான் என்று நான் தனியாக வேறு கூறவேண்டுமா? கல்யாணம் - சௌந்தரம் உரையாடல்கள் சற்று அதிகமோ என எண்ணத் தோன்றுகின்றன. உரையாடல்களால் சூழல்களை உள்வாங்குவதற்கு அதிகநேரம் பிடிக்கிறது. 

கிளாசிக் ரசிகர்களுக்கு நா.கதிர்வேலன் எழுதிய ம.செ 50 இஷ்டமாக இருக்க கூடும். அதுதான் பெஸ்ட் என்று கூட கூறுவார்கள். இதில் இன்னொரு சிறப்பான ஐடியாவாக தங்களுக்கு பிடித்த கனவுக்கன்னிகளை ஓவியர்கள் ஏன் பிடித்திருக்கிறது என காரணம் சொல்லி வரைந்திருக்கிறார்கள். ஓவியர்கள் நாயகிகளின் எந்த புகைப்படங்களை மாதிரியாக வைத்து வரைந்தார்கள் என்பதை அருகிலேயே பதிப்பித்திருந்தால் அதன் நேர்த்தியை ஒப்பிட்டிருக்கலாம். ஒருவேளை ஓவியர்கள் தங்கள் மனதிலிருந்ததை அப்படியே வரைந்தார்களா என தெரியவில்லை. ஜோதிகா கிளாசிக் அழகில் ஈர்க்கிறார். நயன்தாராவை பரிசோதனை முயற்சியாக ஸ்யாம் வரைந்திருக்கிறார். 

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க நேரம் குறைந்துவிட்டதே என நினைக்காதீர்கள். தினகரன் தீபாவளி மலரின் கட்டுரைகளை வாசிக்கும் நொடிதோறும் உங்கள் மனதில் சந்தோஷப்பட்டாசு வெடிக்கும். கவலையே வேண்டாம்! 


- கோமாளிமேடை டீம்