டேக் இட் ஈஸி!





ரயில்நிலையத்தில் சானிடரி!

இந்தியாவில் முதன்முறையாக போபால் ரயில்வே ஸ்டேஷனில் சானிடரி நாப்கின்களுக்கான எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.


 ஹேப்பி நாரி என்று பெயரிடப்பட்ட மெஷின் ஜனவரி முதல்தேதியிலிருந்து செயல்படத்தொடங்கியுள்ளது. ஐந்து ரூபாய்க்கு இரண்டு நாப்கின்களை பெறும் இதனை தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆருஷி பராமரிக்கிறது. இம்மெஷினில் 75 நாப்கின்களை சேமிக்க முடியும். இந்த மெஷினை பராமரித்து நாப்கின்களை ரீபில் செய்ய பெண் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடங்கிய மூன்று நாட்களில் 2 ஆயிரம் நாப்கின்கள் விற்கப்பட்டுள்ளது இதன் தேவையை சொல்லும் செய்தி. விரைவில் ரயில்வே பயன்படுத்திய நாப்கின்களை அழிக்கும் எந்திரத்தையும் நிறுவ யோசித்து வருகிறது. இது இந்தியா முழுக்க அமுலாகும்போது மாதவிடாய் தூய்மை பற்றிய பெண்களின் பயம் தீரும்


அரசியல்வாதிக்கு செருப்புமாலை!

அரசியல்வாதிகளுக்கு வாக்குறுதிகள் அளிப்பது மஸ்கோத் அல்வா விழுங்குவது போல நிறுத்தவே முடியாது. இவர்கள் கொடுக்கும்  வாக்குறுதிகளை கால்குலேஷன் போட்டால் சீனப்பெருஞ்சுவரையும் தாண்டிவிடும். ஆனால் இப்போது மக்களும் அதற்கு ரிவெஞ்ச் எடுக்க தொடங்கிவிட்டார்கள். எப்படி?

மத்தியபிரதேசத்தில் தாம்நாடு பகுதியில் உள்ளூர் தேர்தல் நடைபெற்றது. பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர், தினேஷ் சர்மா வாக்கு கேட்கச்சென்றபோது நிகழ்ந்தது மறக்க முடியாத அவமானம். வாக்கு சேகரிக்க ஆசையாக சென்றவருக்கு, சிம்பிளாக கழுத்தில் செருப்பு மாலை போட்டு கௌரவம் செய்தனர். "அவர்கள் எனது ஊர் மக்கள். விரக்தி மனப்பான்மையில் அப்படி செய்தனர். நான் அவர்களின் பிள்ளை போல. பிரச்னைகளை பேசி தீர்வு காண்போம்" என சமாளிப்பு பேட்டி தட்டியுள்ளார் தினேஷ் சர்மா. ஊரில் நிலவிய குடிநீர் பற்றாக்குறை சிக்கல்தான் மக்களை அப்படி செய்ய வைத்துள்ளது என பின்னர் தெரிய வந்துள்ளது. பிராமிஸை மறந்தால் இனி கஷ்டம்தான்!


கட்அவுட் அதிபர்!

பிரஸ் ஆட்களை சந்தித்து பதில் சொல்லுவது நமது பிரதமர் மட்டுமல்ல அகில உலக தலைவர்களுக்கும் அலர்ஜி போல. அதைத்தீர்க்க தாய்லாந்து பிரதமர் செய்த அலப்பறையில் இணையமே குலுங்கி சிரித்து வயிறு புண்ணாகி கிடக்கிறது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஆச்சா, பத்திரிகைக்காரர்கள் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளால் நொந்துபோனார். உடனே மூளையை உசுப்பி கண்டுபிடித்து ஐடியாதான் கட்அவுட். பிரயுத், தன்னுடைய கோட்சூட் உருவத்தை ஆளுயுயர கட்அவுட்டாக வடித்தெடுத்து, "அரசியல் பற்றி எந்த கேள்விகளையும் இவரிடம் கேளுங்கள், விரும்பினால் கூட நின்று போட்டோ கூட எடுத்துக்கொள்ளுங்கள்" என சீரியஸாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பலருக்கும் பிரதமர் பிரயுத் காமெடியனா, சீரியஸ் கேரக்டராக என புரியாமல் மிரண்டு கிடக்கிறார்கள். இணையத்தில் இந்தவாரச்சிரிப்பு என பலரும் பார்த்து மகிழ்வது தாய்லாந்து பிரதமரின் இந்த காமெடி அத்தியாயங்களைத்தான்.


முடிகொட்டியதால் சூசைட்!

இன்று தற்கொலை செய்வதற்கு சிறியளவிலான மன அழுத்தமே போதுமானதாக இருக்கிறது. கடன்,பரீட்சை தோல்வி என நிகழ்ந்த தற்கொலை இப்போது எப்படி மாறியிருக்கிறது தெரியுமா?

மதுரையிலுள்ள ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மிதுன்ராஜ், பொறியாளர். குயிக்காக டப்பு தேறும் ஐ.டிவேலை. ஆனால் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். என்ன காரணம்? சிம்பிள் தலையில் முடி கொட்டியதுதான் காரணம். அலோபதி டூ அமேஸான் ஆயில் வரை தலையில் தேய்த்தும் முடி கொட்டுவது நிற்கவேயில்லை. அதேநேரம் அவரது அம்மா வசந்தி, மிதுனுக்கு வரன் பார்க்கத்தொடங்கினார். அதுவும் தலைமுடி விவகாரத்தால் தட்டிப்போன, டிப்ரெஷனுக்கு உள்ளான மிதுன் ஆபீஸ் போகாமல் வீட்டிலேயே பழியாக கிடந்து, அம்மா வெளியே போன சமயம் சீலிங் பேனில் தூக்கு மாட்டி இறந்தேவிட்டார்.  

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்