வீக் எண்ட் அதகளம்!



Image result for cow cartoon



கைதிகளுக்கு பசு தெரபி!

பசுக்களிடமிருந்து பெறப்படும் பால், நெய் ஆகியவை மருந்தாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகின்றன. தற்போது ஹரியானாவில் உள்ள ஆறு சிறைகளில் பசு தெரபி என்ற திட்டத்தை தொடங்கவிருக்கின்றனர். எதற்கு?


ஹரியானா அரசு, 600 பசுக்களை வாங்கவும், அவற்றை பராமரிக்க தானியக்களஞ்சியங்களை அமைக்கவும் 1.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து சிறைகளில் பசுக்களுக்கான கோசாலைகள் அமைக்கப்படவிருக்கின்றன. "பசுக்களிடமிருந்து பெறப்படும் பால் கைதிகளை தூய்மை செய்வதோடு, அதன் சிறுநீர் பல்வேறு நோய்களை தீர்க்கும் தன்மை கொண்டது" என சீரியஸாக பேசுகிறார் அரசுடன் இணைந்து செயல்படும் கவ் சேவா ஆயோக்கின் செயலாளரான மங்ளா. ஆல் இந்தியாவுக்கும் தெரபி தேவை!

பேக்கேஜ் வரிக்கு எதிர்ப்பு!

வரியை தவிர்க்க நாம் என்ன செய்வோம்? அதிகவரி பொருளை தவிர்க்கலாம்: ஆடிட்டர் வைத்து பொருளுக்கான வரியை குறைத்து கட்டலாம் என குறைந்த ஆப்ஷன்களே நமக்கு உண்டு. ஆனால் ரியான்கார்னி வில்லியம்ஸ் யோசித்தது அதுக்கும் மேலே.

ஐஸ்லாந்திலிருந்து இங்கிலாந்து செல்ல விரும்பிய ரியான், பேக்கேஜ் வரியை தவிர்க்க விரும்பி ஐடியா செய்தார். சிறிது துணியை இங்கிலாந்துக்கு பேக்கில் எடுத்து போனால்தானே வரி! உடுத்திக்கொண்டு போவோம் என ட்ரெசுக்கு மேல் ட்ரெஸ் உடுத்தினார். மொத்தம் 10 ஷர்ட்,8 பேன்ட். முட்டை போண்டாவாய் தெரிந்த ரியானின் கோல்மாலை கண்டுபிடித்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், ரியானுக்கு போர்ட்டிங் பாஸ் தரவில்லை. கண்கள் சிவந்த ரியான், இதுபற்றி சமூக தளங்களில் கருத்துக்களை பதிந்தாலும் கம்பெனி கவலையே படவில்லை. ஆனால் ரியானின் லக்கேஜ் அன்றே இங்கிலாந்து போய்விட்டாலும், தகராறு செய்ததால் இங்கிலாந்து பயணிக்க அடுத்த நாள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  


Image result for idli cartoon


ஆவி பிரித்த இட்லி!

பசி,பட்டினியால் சாகும் மக்கள் இந்தியாவில் அநேகம். ஆனால் இட்லி தின்று ஒருவர் இறந்த செய்தி நம்மூருக்கு ரொம்பவே புதுசு. அதுவும் நடந்த மேட்டர் தமிழகத்தில் என்பதுதான் வினோத ஆச்சர்யம்.

தமிழ்நாட்டிலுள்ள பண்டிகுடி கிராமத்தில் காணும் பொங்கல் ஸ்பெஷலாக ஆரவாரமாக இட்லி தின்னும் போட்டி தொடங்கியது. பாரதியார் இளைஞர் சங்கத்தின் இப்போட்டியில்  உள்ளூர் காரரான சின்னத்தம்பி வீராப்பாக கலந்துகொண்டார். 3 நிமிடத்தில் தண்ணீர் குடிக்காமல் இட்லியை விழுங்கவேண்டும் என்பது போட்டி ரூல். பனிரெண்டாவது இட்லியை சின்னத்தம்பி விழுங்கும்போதுதான் விபரீதம், தொண்டை விக்கி ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆவி பிரிந்துவிட்டது. முன்பு பாகற்காய்,பச்சை மிளகாய் தின்னும் போட்டி மெகா ஃபெயிலியரானதால் இட்லி போட்டியை ட்ரை செய்தார்களாம். சங்கம் இனி அபராதத்தில்தான் ஓடும்!

குடிமகனின் நேர்மை!

மூக்கு முட்ட குடித்து கால்கள் தள்ளாடினாலும் நான் குடிகாரனா? என இன்ஸ்டன்ட் மகாத்மாவாக மாறி, ஃபைனிலிருந்து தப்பிக்க ட்ராமா போடுவதுதானே குளோபல் மரபு. ஆனால் அமெரிக்க அரிச்சந்திரன் என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேரந்த மைக்கேல் லெஸ்டர், காரில் சென்றுகொ்ண்டே இரண்டு பீர்களை ஒரு துளி விட்டுவைக்காமல் குடித்தார். கூடுதலாக போதைப்பொருட்களையும் ஆன்மாவில் இணைத்தார். பின் செய்ததுதான் சூப்பர் ட்விஸ்ட். 911 நம்பருக்கு போன்செய்து, "நான் சரக்கடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறேன். இது சாலையிலுள்ள மற்றவர்களுக்கு ஆபத்து பாஸ்!  சீக்கிரம் வந்து சட்டுபுட்டுனு என்னைக் கைது பண்ணுங்க" என்று அநியாய நேர்மை காட்டியிருக்கிறார் மைக்கேல். உடனே போல்க் கவுன்டி போலீஸ் ஸ்பாட்டுக்கு போய் மைக்கேலை அரஸ்ட் செய்து கடமையை நிறைவேற்றினார்கள். அதோடு டெலிபோன் உரையாடலை இணையத்தில் பதிவேற்றியவுடன் மைக்கேலின் நேர்மைக்கு இன்டர்நேஷனல் இணையர்கள் கங்கிராட்ஸ் குவிந்துள்ளது

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்