மை டியர் இந்திரா! - ஜவகர்லால் நேரு




மை டியர் இந்திரா!

வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று முடிவு செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதை தீர்க்க ஒரு வழிதான் உண்டு. எதையும் ரகசியமாக செய்யவும் எதையும் பிறரிடமிருந்து மறைக்கவும் நினைக்காதே. அது பின்னாளில் உன்னை குழப்பத்தில் ஆழ்த்தும். ஒரு விஷயத்தை பிறரிடமிருந்து மறைக்கிறாய் என்றால் நீ அது குறித்து பயத்தை மனதில் கொண்டிருக்கிறாய் என்றே அர்த்தம். அந்த பயம் மெல்ல உன் ஆளுமையை செயலிழக்க வைத்துவிடும். தைரியத்தை கைவிடாதிருந்தால் மற்றெல்லாம் உன் பின்னால் வரும்.

பாபுஜியின் சுத்ந்திரப்போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். அதையே உதாரணமாக கொண்டால், அதில் எந்த ரகசியதிட்டமும் கிடையாது. நாங்கள் பேசுவதும் அல்லது செயல்படுவதும் குறித்த எந்தவித  அச்சமும் எங்கள் மனதில் இல்லை. நாங்கள் சூரியனின் ஒளியில் அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறோம். ரகசியமாக மேற்கொள்ள எந்த திட்டங்களும் எங்களிடமும் சரி எங்கள் நண்பர்களிடமும் இல்லை. நீ சிறுமியாக இருக்கிறாய். இச்சமயத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.இப்போதிலிருந்தே வெளிச்சத்தில் தைரியமாக வளர்ந்து வரவேண்டும்.  உனக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.

உன் அன்புள்ள அப்பா
ஜவகர்லால் நேரு







நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 14.11.2017
தமிழில்: ச.அன்பரசு