அறிவியல் பேசுவோம்!



மருந்தின்றி தீரும் ஹல்லுசினேஷன்!

தற்போது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஹல்லுசினேஷன் கருவி, மனரீதியான பிரச்னை உள்ளவர்களுக்கு மருந்துகளின்றி தீர்வுகளை தரவிருக்கிறது. இக்கருவி விஆர் முறையில் கூகுளின் டீப் டிரீம் அல்காரிதத்தின்படி இயங்குகிறது.

கற்பனையாக உருவங்களை மிக இயல்பாக இருக்கும்படி இந்தக்கருவியை விஞ்ஞானிகள் அமைத்துள்ளனர்.

"சுவரில் தெரியும் மூன்று புள்ளிகளை வைத்தே மூளை உருவத்தை வரையும் அற்புதம் படைத்தது. இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்" என்கிறார் சசெக்ஸ் பல்கலையின் சேக்லர் மையத்தில் ஆராய்ச்சியாளரான கெய்சுகே சுசுகி. இதற்கான சோதனையில் ்சிலோசைபின் எனும் வேதிப்பொருள் ஏற்படுத்தும் ஹல்லுசினேஷன் எனும் கற்பனைக்காட்சிகளைப் போலவே விஆர் வீடியோக்கள் இருந்ததாக பலரும் கூறினர். இதில் காலத்திரிபு ஏற்படாதது நம்பிக்கை தரும் விஷயம். கற்பனையாக உருவாக்கப்பட்ட இக்காட்சி மூளையின் சமநிலையை சரிசெய்வதோடு, இதற்கான கடும் பக்கவிளைவுகள் கொண்ட மருந்துகளையும் சாப்பிட அவசியமில்லை.
2
மெக்னீசியம் அயான் பேட்டரிகள்!

லித்தியம் அயான் பேட்டரிகளை விட மெக்னீசியம் பேட்டரிகள் மின்சக்தியை தேக்குவதில் திறன் பெற்றவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவை ஆற்றலை தேக்கும்போது வெடிக்காமல் இருப்பது முக்கியமான பிளஸ் பாய்ண்ட்.

தற்போதுள்ள பேட்டரிகளில் கேத்தோடு,அனோடு ஆகிய இரண்டும் மின்சக்தியை தேக்கும்போது வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. "லித்தியத்திற்கு மாற்றாக மெக்னீசியம் அதிகளவு ஆற்றல் தேக்கும் பேட்டரிதான். ஆனால் இதில் நீர்மத்தில் செயல்படும் எலக்ட்ரோலைட் இல்லை" என்கிறார் மூத்த ஆராய்ச்சியாளர் கெர்பிராண்ட் செடார். தற்போது மெக்னீசியம் ஸ்கேண்டியம் செலினைடை எலக்ட்ரோலைட்டாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். அப்டேட்டான பல்வேறு சோதனைகளில் மெக்னீசியம், அதிக விலை மதிப்பான லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாகுமா என்று தெரியவரும்.

3

வலிமையான சிமெண்ட்!

ஜெர்மனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வலிமையான சிமெண்ட்டை உருவாக்கியுள்ளனர். இதன் வடிவமைப்புக்கு மூலாதாரம், கடல் முள்ளெலியின் எலும்பு என்றால் நம்புவீர்களா?

முள்ளெலியின் உடலில் எலும்புகளில் அபரிமிதமாக உள்ள கால்சியம் கார்பனேட், அதன் உடலில் ஏற்படும் கீறல்கள் உள்ளிட்ட பாதிப்புகளை விரைவில் சரி செய்துகொள்கிறது. உடையும் தன்மையற்ற எலும்புகளின் தன்மையை அப்படியே சிமெண்டுக்கு மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. "தற்போது நாங்கள் கண்டறிந்துள்ள சிமெண்ட இதுவரை உருவாக்கப்பட்ட சிமெண்டுகளிலேயே அதிக வலிமை கொண்டது. 40-100% அதிக வலு கொண்டது" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெல்முட் கோல்ஃபன்.


4

ரீஎன்ட்ரி ஆகும் ஸ்கேர்லெட் காய்ச்சல்!

பத்தொன்பது மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் குழந்தைகளை கொல்லும் வில்லனாக இருந்தது ஸ்கேர்லெட் காய்ச்சல். தற்போது அது திரும்ப பலருக்கும் பரவி வருகிறது. உடல் முழுவதும் பாக்டீரியா தொற்றால் தோல் சிவக்கும், தீவிரக்காய்ச்சல்,தொண்டை வலி ஆகியவை அறிகுறிகள். இதயம்,கிட்னி கடுமையாக பாதிக்கப்படும். அன்று ஆன்டிபயாடிக் உதவியால் உயிர்ப்பலி அதிகமில்லை. இருமல் மூலம் பிறருக்கு பரவும் தன்மை கொண்ட பாக்டீரியா இது.

2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். அனைவருமே பத்து வயதுக்குட்பட்டவர்கள் என்பது இதன் தீவிரத்துக்கு சாட்சி. குறைந்தபட்சம் 4-15 வயது கொண்டவர்களே இக்காய்ச்சலுக்கான இலக்குவியட்நாம், தென்கொரியா,ஹாங்காங்,சீனா ஆகிய நாடுகளிலும் 2009 ஆம் ஆண்டிலிருந்து ஸ்கேர்லெட் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதிக உயிர்ப்பலி வாங்காத நோய் என்றாலும் நோய் பாதிப்புகள் தீவிரமானவை என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இதன் பரவலை கவனித்து வருகின்றனர்.
:5
விண்வெளியில் பாக்டீரியா!

அண்மையில் ரஷ்ய ஊடகமான TASS விண்வெளியில் பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்தது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய விண்வெளி வீரரான ஆன்டன் காப்லெரோவ் விண்வெளி மையத்தில் பணியாற்றியபோது விண்வெளியில் எடுத்த சாம்பிளில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

"விண்வெளி மையம் அமைக்கப்படும்போது இந்த பாக்டீரியா இங்கே இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள இந்த பாக்டீரியா வேறு கோளிலிருந்தும் வந்திருக்கலாம்.தற்போது பாக்டீரியா ஆராய்ச்சியில் உள்ளது" என்கிறார் ஆன்டன். ஆனால் இதில் புதுமை இல்லை. தூய்மைப்படுத்தப்பட ஆடைகள் அணிந்தாலும் மனிதர்கள் மூலமாக வந்திருக்கும் பாக்டீரியாகவாக இது இருக்கலாம். Bacillus pumilus SAFR-032,  Bacillus subtilis 168 ஆகிய இரு பாக்டீரியாக்களை முன்பு விஞ்ஞானிகள் உயிர்வாழ்கிறதா என டெஸ்டுக்காக அனுப்பினர். எதிர்பார்ப்பு ஏற்படும்படி இரு பாக்டீரியாக்களும் விண்வெளியிலும் உயிர்பிழைத்து வாழ்ந்தன. பூமியில் காணப்படும் பாக்டீரியா வகையா என ஆராய்ந்தால் இது ஏலியன் பாக்டீரியாவா என அறியலாம்.

தொகுப்பு: ச.அன்பரசு, விக்டர் காமெஸி 

நன்றி: முத்தாரம்