ரிப்பேர் கஃபே!- ச.அன்பரசு






ரிப்பேர் கஃபே!- .அன்பரசு

     உங்கள் கைகளிலுள்ள வாட்ச், சுவரிலுள்ள கடிகாரம், மாவு அரைக்கும் கிரைண்டர், பிரேக்கிங் நியூஸ் சொல்லும் ஸ்மார்ட்போன் இதையெல்லாம் பிரச்னை வரும்போது பழுதுபார்க்க கடைக்கு கொண்டு செல்வீர்களா? அல்லது புத்தாண்டில் அனைத்து புதுசுதான் என தூக்கியெறிந்து விட்டு புதுசாக ஆன்லைனில் இறக்குமதி செய்வீர்களா? இரண்டாவது ஆப்ஷனை செலக்ட் செய்பவர்களே அதிகம். ரிப்பேர் செலவுகள் புதிய பொருளின் விலையருகே வந்தால் வேறு என்ன செய்வது? என பதில்கள் வரலாம். ஆனால் இது தீர்வே கிடைக்காத சூழல் பிரச்னையாக மாறிவிட்டது.  

     யூஸ் அண்ட் த்ரோ கலாசாரத்தால் பாதிக்கப்படுவது முதலில் இயற்கை சூழல் என்ற கவனத்தில் பொருட்களை பழுதுபார்க்க கற்றுக்கொடுக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ரிப்பேர் கஃபே தன்னார்வ நிறுவனம். "முந்தைய தலைமுறை மனிதர்கள் தான் வாங்கிய பொருட்களை ரிப்பேர் செய்து கவனமாக பராமரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்என பணியை விவரிக்கிறார் அன்தாரா முகர்ஜி. 2015 ஆம் ஆண்டு பூர்ணா சர்காருடன் இணைந்து இருவருமாக  ரிப்பேர் கஃபே அமைப்பை பெங்களூரில் தொடங்கினர். தமது 19 பயிற்சி வகுப்பறைகளின் மூலம் ஆயிரத்து 300 கி.கி திடக்கழிவுகள் உருவாகாமல் சூழல் காத்துள்ளது ரிப்பேர் கஃபே அமைப்பு.

தூய்மையின் தொடக்கம்!

2009 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் சமூக தொழில்முனைவோரான மார்டைன் போஸ்ட்மாவினால் உருவானதே ரிப்பேர் கஃபே. 2011 ஆம் ஆண்டு ரிப்பேர் கஃபே பவுண்டேஷன், லாபநோக்கற்ற அமைப்பாக அமெரிக்கா, ஜப்பான் என 33 நாடுகளிலுள்ள ஆயிரத்து 400 கிளைகளின் மூலம் கழிவுகளை ஒழிக்க ஐடியா தீட்டி செயல்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டுப்படி 2 லட்சத்து 50 ஆயிரம் கி.கி. திடக்கழிவுகளை சேமித்துள்ளது ரிப்பேர் கஃபே.
  
"ரீயூஸபிள் என்பது உற்பத்தி துறையைப் போலவே ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொண்டது. மறுபயன்பாடு என்பது மக்களின் நுகர்வு வேகத்தை பொறுத்த சந்தை அவ்வளவுதான்" என்கிறார் ஹஜார்ட்ஸ் சூழல் அமைப்பின் நிறுவனரான துனு ராய். பழுதுபார்க்கும் அவசியமில்லாமல் சல்லீசு ரேட்டில் பொருட்களை வாங்க முடிவதால் யூஸ் அண்ட் த்ரோ வேகம் உலகெங்கும் டாப் கியரில் செல்கிறது.

சூழலைக் காக்கும் தொழில்!

 இதே சூழலை பாசிட்டிவ்வாக பயன்படுத்திய தொழில்முனைவோர்களை பற்றி பார்ப்போம். "என் பக்கத்துவீட்டுச் சிறுவன், புதிய பொம்மையோடு ஒருவாரம் மட்டுமே விளையாடிவிட்டு, அதனை தூக்கியெறிந்துவிடுவான். புது பொம்மை வாங்கித் தராவிட்டால் அழுவான். அப்போதுதான் ரென்ட்டில் பொம்மைகளுக்கான லைப்ரரி அமைக்கும் ஐடியா கிடைத்தது" என்கிறார் கிலோன்வாலா நிறுவனர் அபிஷேக் ஜெயின். குருகிராம்,புனேவில் மறுபயன்பாட்டுக்கான பழைய துணிகளை விற்கும் கடையை ஆயிஷா மற்றும் மனிஷா சகோதரிகள் நடத்தி வருகின்றனர்.

 "நாங்கள் பொருளை வாங்கும்போது அது அவசியமாக எனக் கேள்வி கேட்டுத்தான் பொருட்களை வாங்குகிறோம்" என்கின்றனர் இந்த தேசாய் சகோதரிகள். டெல்லியின் நேரு பிளேஸ், நிஜாமுதீன் பஸ்தி,ஹைதராபாத்தின் சத்தா பஜார் ஆகிய இடங்கள் பயன்படுத்திய கடிகாரங்கள், ரேடியோக்கள்,டெக்கேசட்டுகள் ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்கான ஸ்பெஷல் இடங்கள்.
தற்போது நகரங்கள் தோராயமாக வெளியேற்றும் 62 மில்லியன் டன் திடக்கழிவில், 31 மில்லியன் டன்கள் நிலத்தில் கொட்டப்படுகின்றன என்கிறது டவுன் டூ எர்த் இதழின் ஆய்வு முடிவு. 2025 இல் கழிவுகளின் அளவு 2.2 பில்லியன் டன்களாக உயரும் என்பது உலகவங்கியின் எச்சரிக்கை

" ஆடைக்குப்பைகளுக்கு உதாரணம் ஆஸ்திரேலியாதான். ஃபேஷன் துறையின் வருமானம் 12,800 கோடி. இதில் 24% நபர்கள் ஒருமுறை அணிந்தவுடன் ஆடையை தூக்கியெறிந்துவிடுகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை. மேலும் சேர்,வீட்டுப்பொருட்கள்,வாகன பாகங்கள் இன்று மறுசுழற்சி செய்யமுடியாத ஃபைபர் மற்றும் கண்ணாடிகளால் செய்யப்படுகின்றன. சூழலை சிதைக்கும் நாகரிகம் வளர்ந்துவருவது நாம் கவலைப்படவேண்டியது ஒன்று" என்கிறார் பேராசிரியர் துனு ராய்.

தீராத லாபவெறி!

ஐபோன் உள்ளிட்ட இனி எந்த போன்களிலும் அவர்களின் அங்கீகாரம் பெற்ற டீலர்கள் தவிர்த்து பிறரிடம் ரிப்பேர் செய்தால் அதனை அப்டேட் செய்யமுடியாது. ஏன்? அவர்களின் செட்டிங் அப்படி டைட். "வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்திடமிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசை. எனவே முடிந்தளவு பழைய பொருட்களை பயன்படுத்த அனுமதி மறுக்கிறார்கள்" என்கிறார் ராய். ஆனால் அங்கீகாரமற்ற மையத்தில் போனிலுள்ள சாப்ட்வேர்களை உடைத்து தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளது என்கிறது நிறுவனங்களின் தரப்பு. ஜான் டீர் ட்ராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் மீது விவசாயிகள் கூட்டமைப்பு, உள்ளூரில் ரிப்பேர் செய்ய அனுமதி தராததற்கு வழக்கு தொடர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறி அவற்றுக்கான லாபம் தவிர வேறெதையும் கவனத்தில் கொள்வதில்லை என்பதற்கு இதுவே சான்று.

ரிப்பேர் கஃபே

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று, மார்டைன் போஸ்ட்மாவினால் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரிப்பேர் கஃபேவில் துணிகள், நாற்காலிகள்,எலக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள், பொம்மைகள் என ஆல் இன் ஆல் பழுதுபார்க்கலாம். பழுதான பொருட்களை மக்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்தால், அதனை சரிபார்க்கும் மெக்கானிக்குடன் இணைந்து பழுதுபார்ப்பதை தானே கற்றுக்கொள்ள சான்ஸ் தருகிறார்கள். உலகம் முழுக்க 1,300 ரிப்பேர் கஃபேக்கள் தற்போது ஆக்டிவ்வாக உள்ளன.


அபாயம் அநேகம்!

இந்தியாவில் உருவான கழிவுகள் - 62 மில்லியன் டன்கள்
கழிவுகளின் வகை - அபாயம்(7.9 மி.டன்), பிளாஸ்டிக்(5.6 மி.டன்), இகழிவு(1.5 மி.டன்), பிற கழிவுகள்(84.83 மி.டன்)
முனிசிபாலிட்டிகள் சேகரிப்பு - 75-80%  மறுசுழற்சி(22-25%)
2047 இல் கழிவு வளர்ச்சி- 247 மில்லியன் டன்கள்
(மத்திய சுற்றுச்சூழல்துறை தகவல்படி(204-2015)

தொகுப்பு: எலிசா, மான்கிரெட்டியான்
நன்றி: குங்குமம்