பிற நாட்டினரை காப்பதே நமது முதல் குறிக்கோள்!

 







பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்!

எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே, 

பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை எதிர்க்க  அரசு நடத்திய யாகங்கள், பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகள் நடந்து அதன்மூலம் நோய் பரவும் என  சமூகவிரோதிகள் கூறிவருவதை நான் கண்டிக்கிறேன். விரைவில் அவர்களை கண்டுபிடித்து மறு உலகிற்கு அனுப்ப உறுதிகொண்டுள்ளேன். மக்கள் தங்களுக்கு நோய் வந்தால் அதை அவர்களேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் காட்டிய வழியில்தான் கண்ணை மூடிக்கொண்டு நடந்து செல்கிறேன். 

எனக்கு நோய் தொற்றக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக இருக்கும்போது டிவிதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் மருத்துவர்கள் பெருந்தொற்று ஏற்பட்டவர்களை கவனித்துக்கொள்வதை பார்த்தால் இவர்களுக்கு எப்படி இந்தளவு துணிச்சல் வந்தது என ஆச்சரியமாக உள்ளது.  இயற்கைப் பேரிடர்களான சுமான், ஜிசாப் ஆகிய புயல்களைக் கூட மக்களேதான்  எதிர்கொண்டனர். இடிந்துபோன வீடுகளை பின்னர் அவர்களேதான் கட்டிக்கொண்டனர். இதற்கு அரசு என்ன செய்யமுடியும்? இதற்கு முன்னர் எப்படி பேரிடர்கள் நேர்ந்து அழிவை சந்தித்தோமோ அதேபோல்தான் இம்முறையும் நடந்திருக்கிறது.  கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கூட இரு புயல்களை சமாளித்து குறைந்த உயிர்ப்பலியோடு நமது நாடு மீண்டுள்ளது. அரசு கட்டமைப்பு செலவே செய்யாதபோதும் மக்களே தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிட்டால் பலி எண்ணிக்கை குறைந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. 

அரசின் அனுமதியின்றியே மக்கள் பிழைத்திருப்பார்களா என்ற பயமும் எழுகிறது. இருந்தாலும் அரசுக்கு சல்லிப்பைசா செலவு இல்லாமல் மக்கள் உயிரோடு இருக்கிறார்கள்  என்பது ஆறுதலைத் தருகிறது. இதனால் அவர்கள் செலவிடும் பொருட்களுக்கு விலை உயர்வை அறிவிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் மக்களுக்கு உயிரோடு இருப்பது எந்தளவு கடினம் என்று புரிய வைக்கமுடியும் என எண்ணுகிறேன். ஒருவகையில் மக்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களால் அரசுக்கு பயன் கிடைக்கும் என்பதால் புயலில் பிழைத்தவர்களை  மனதாரப் பாராட்டுகிறேன். மக்களை காக்கும் பணியை தானாகவே கையில் எடுத்துக்கொண்டு பணியாற்றியவர்களை வேண்டாவெறுப்பாகத்தான் என்றாலும் பாராட்டத்தான் வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் கூட சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெள்ளநீரில் நடந்து வந்தால் எனது இறக்குமதி ஷூக்கள் நனைந்துவிடும் என்பதால் இப்பணிக்கு தன்னார்வமாக வந்தவர்களை வரவேற்கிறேன். அரசின் பணியை இவர்களே செய்துவிட்டார்கள். பெருந்தொற்று ஏற்படும் முன்னரே தேவையான ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஆர்டர் பிடித்து விற்றுவிட்டோம். ஆனால் இதனை சரியானபடி வெளிநாட்டினருக்கு கொண்டு சேர்க்க படாதபாடு பட்டோம். ஆயுதங்களை சகாய விலையில் தரும் தேசத்தினருக்கு தடுப்பூசிகளையும், ஆக்சிஜனையும் வழங்குவதுதானே மனிதநேயம்? இதை சிலர் தடுக்க நினைக்கின்றனர். விமர்சிக்கின்றனர். அதிதி தேவோ பவ என்பதை மறந்துவிடுகிறோம். எனவே, வெளிநாட்டினர் நோயிலிலிருந்து விடுபடுவதே நமது மெகந்தியாவின் இலக்கு. அதற்குப் பிறகு ஆக்சிஜனும், மருந்தும் மிச்சமிருந்தால் அதனை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றுவிட அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன்மூலம் தனியார் துறை எதிர்பார்க்காத வளர்ச்சி பெறும். அதுதானே அரசுக்குத் தேவை.


...............................

..............................


பன் பட்டர் ஜாம்


  












கருத்துகள்