கோவிட் இறப்புகளை கணக்கிடுவது முக்கியமா?

 








கோவிட்டில் இறந்த மக்களின் உண்மையான எண்ணிக்கை பல்வேறு மாநிலங்கள் ஊடகங்களுக்கு அறிவிப்பதில்லை. காரணம், அப்படி கூறினால் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற பயம்தான். 

ஆனால் உண்மையில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரிந்தால்தான் நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்தும்படியான வசதிகளையும், கொள்கைகளையும் உருவாக்க முடியும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் இந்த எண்ணிக்கையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதெல்லாம் பெரும்பாலும் நகரங்களில் எளிதாக கடைபிடிக்க முடியும். ஒருவர் இறந்துவிட்டால் அதற்கான சான்றிதழை பெற்று அவரை தகனம் செய்கிறார்கள். இதனால் அவருடைய இறப்பு மருத்துவமனையில், அரசு அமைப்பிலும் என இரண்டு இடங்களில் முறையாக பதிவாகிறது. ஆனால் அரசு அமைப்புகளுக்கு எட்டாத தொலைதூர கிராமங்களில் இம்முறை செயல்படாது. இங்கு ஒருவர் கொரானாவில் இறந்தாலும் கூட அதைப்பற்றி அரசுக்கு தெரிவிக்காமல் உடலை தகனம் செய்துவிடுகிறார்கள். 

இதனைத் தவிர்க்க மத்திய அரசு வெர்பல் ஆட்டோஸ்பை எனும் முறையைக் கொண்டுவந்தது. மருத்துவர் இல்லாத சூழலில், குடும்பத்தினர், நண்பர்கள் கூறும் தகவல்களை வைத்து அவரின் இறப்பு முடிவு செய்யப்படுவதே வெர்பல் ஆட்டோஸ்பை. 

ஏப்ரல் மே மாதங்களில் இம்முறையை ஜார்க்கண்ட் மாநிலம் கையாண்டு வீட்டுக்கு வீடு சென்று குடும்ப உறுப்பினர்களை கணக்கிட்டது. இதனால் 25 ஆயிரம் பேர் நோய்க்கு பலியானதை அடையாளம் கண்டது. அரசின் நோய்பலி கணக்கில் இத்தனை பேர் விடுபட்டு போனதை வெர்பல் ஆட்டோஸ்பை மூலம் மாநில அரசு கண்டுபிடித்தது முக்கியமான சாதனை. பத்தே நாட்களில் தங்களிடம்  உள்ள ஊழியர்களை வைத்து 66 சதவீத மக்கள்தொகையை ஜார்க்கண்ட் மாநிலம் கணக்கிட்டு விட்டது.  

பல்வேறு மாநிலங்களும் தாங்கள் வெளியிடும் கோவிட் பலி கணக்குகளை இப்போது மாற்றி வெளியிட்டு வருகின்றன. அரசுக்கு கெட்டப்பெயர் வரும் என்று நினைக்காமல் நேர்மையான எண்ணிக்கையை வெளியிட்டால் மக்கள் நலன் காக்கப்பட வாய்ப்புள்ளது. 

பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம்


1969ஆம் ஆண்டு இந்திய பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி ஒருவர் தனது குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டால் 21 நாட்களில் அதற்கு விண்ணப்பித்து இறப்பு சான்றிதழை பெறலாம். தொடர்புடைய நபரின் முகவரி, அதற்கான சான்று, இறப்பின் காரணத்தைக் கூறும் மருத்துவச்சான்று ஆகியவை  இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இறப்புச்சான்றிதழ் உள்ளூர் அலுவலகத்திலிருந்து ஒருவருக்கு வழங்கப்படும். 

இந்தியாவின் தலைமைப் பதிவாளர் சிஆர்எஸ் எனும் முறையை கையாண்டு பிறப்பு, இறப்பு தகவல்களை பதிவு செய்கிறார். இதனை அடிப்படையாக வைத்துத்தான் பல்வேறு மருத்துவக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. 




இந்தியா டுடே

ஜெரோம் ஜேக்கப், ரோமித் தத்தா


கருத்துகள்