முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி!- முதலையால் ஒற்றைக்கையை இழந்தும் குறையாத அன்பு!

 

 

 

 

 

EYE OF CROCODILE. | CROCODILE PARK KOTMI SONAR ( BILASPUR ...

 

 

 

 

முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி!


சத்தீஸ்கர் மாநிலத்தில் கோட்மி சோனார் எனும் குளத்தில் உள்ள மக்கர் வகை முதலைகளை பாதுகாக்கும் பணியை 2006ஆம் ஆண்டிலிருந்து செய்துவருகிறார். சீத்தாராம் தாஸ் என்பதுதான் அவரின் பெயர். ஆனால் கிராமத்தினர் ஒற்றைக்கை இல்லாத அவரின் பணிகளைப் பார்த்து பாபாஜி என்று அழைக்கின்றனர். துன்பம் செய்தவருக்கும் நன்மை நினைத்து நல்லது செய்யவேண்டும் என்று சொல்வார்கள். திருக்குறளிலும் கூட இப்படி சொல்லப்படுவதுண்டு. உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்தால் அவரை நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? பாபாஜியும் அப்படித்தான். 2006ஆம் ஆண்டு குளத்திலுள்ள முதலை முட்டைகளை காப்பாற்ற முயன்றார். இதில் கோபமுற்ற பெண் முதலை அவரது இடதுகையை கடித்துவிட்டது. முற்றாக சேதமடைந்த கையை அகற்ற வேண்டியதாகிவிட்டது. அப்படி ஒரு கொடுமை நடந்தபோதும் பாபாஜிக்கு முதலைகள் மீது கருணை குறையவில்லை.

இப்போதும் அவர் காப்பாற்ற நினைத்த மூன்று முதலைகளை வந்து பார்த்துவிட்டு செல்கிறார். தினசரி மூன்று முறை அதனை அழைக்கிறார். அவையும் யார் அழைப்பது என எட்டிப்பார்த்துவிட்டு அவரை அடையாளம் கண்டுவிட்டு மறைகின்றன.

உங்களை பெண் முதலை தாக்கி கையை கூட இழந்துவிட்ட நிலையில் எப்படி அதன் மீது பிரியம் காட்டுகிறீர்கள் என்றபோது, நான் செய்த முயற்சியை பெண் முதலை புரிந்துகொள்ளவில்லை. அதனால் என்ன, நமது பணியை எப்போதும் போல செய்துகொண்டிருக்கவேண்டியதுதான் என்கிறார் பாபாஜி. இந்த ஊருக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் எழுபது வயதான நிலையில் முதலைகளை காக்க தன்னால் முயன்ற முயற்சிகளை செய்துகொண்டே இருக்கிறார். ஒரு கோவில் பூசாரி எதற்கு இதனைச்செய்யவேண்டும் என நினைத்த மக்கள் பின்னாளில் அவரது செயலை பெரிதாக காரண காரியங்களைக் கேட்டுக்கொள்ளவில்லை. பாபாஜி என அழைப்பதோடு நிறுத்திக்கொண்டனர்.

குஜராத்தில் ஒற்றுமைக்கான சிலை அமைத்தபோது ஏற்பட்ட சூழல் அழிவுகளில் முக்கியமானது, மக்கர் முதலைகளின் அழிவு. அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உலகளவில் அழிந்துவரும் முதலை இனங்களில் இதுவும் ஒன்று. தற்போது இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டும்தான் இந்த முதலைகளை வாழ்கின்றன. இவற்றுக்கு முக்கிய எதிரி திடீரென அதிகரிக்கும் வெப்பம் மற்றும் குளிர்தான். இதனால் வேறு இடங்களுக்கு சென்று வசிக்க முற்பட்டு அழிவைச் சந்திக்கின்றன. மக்கர் இன முதலைகள் ஆறுகள், குளங்களில் வசிக்கின்றன. அவை அழிக்கப்படும்போது இயல்பாகவே அவையும் அழிவின் விளிம்புக்கு வந்துவிடுகின்றன. கடவுளை வழிபடுவது நம்பிக்கையால்தான். ஆனால் முதலையால் தனது உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட பிறகும் கூட அதனை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் மனதின் பின்னால் என்ன இருக்கும்? நிபந்தனையற்ற அன்பைத் தவிர.

இவரது செயல்பாடுகளால் முதலைகள் வாழ்வதற்கான நிலத்தையும் கூட மக்கள் கொடுத்துள்ளனர். இதன்மூலம் முதலைகள் தற்போதைக்கு பிழைத்து வருகின்றன. ஒருவகையில் நாய் போல வாலை ஆட்டவோ, புலி போல கம்பீரமோ, பட்டாம்பூச்சிகளைப் போன்றே முதலைகளை எண்ண முடியாது. அவை நீரில் அமைதியாக பாபாஜியைப் பார்த்தபடி நிற்கின்றன. அவ்வளவுதான். உண்மையான அன்பிற்கு கண்ணீர்த்துளிதான் பரிசு என தத்துவார்த்தமாக கூறுவதுண்டு. தனக்கேற்பட்ட இழப்பையும் தாங்கிக்கொண்டு அதற்கு காரணமான விலங்கையும் நேசித்து நிற்க மனவலிமை தேவை. பாபாஜியின் புன்னகையில் அது தெரிகிறது.

நேகா சின்கா

டைம்ஸ் ஆப் இந்தியா


கருத்துகள்