பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் காரேஜ் பள்ளி!

 






காரேஜ் பள்ளி!

பாகிஸ்தானின் கராச்சியில் செயல்பட்டு வரும் காரேஜ் பள்ளிக்கு வழிகேட்டால் புன்னகையுடன் வழிகாட்டுகிறார்கள். மறைந்த விமானப்படை வீரரான கணவரின் கனவை ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி தொடங்கி நிறைவேற்றி வருகிறார் சபினா முஸ்தபா. 

கணவர் சஃபி மறைந்தபோது கைக்குழந்தையோடு தவித்த  சபினாவுக்கு வயது 21. அப்போது அவரது வீட்டில் பணிபுரிபவரின் பிள்ளைக்கு பள்ளியின் சேர்க்கை அனுமதி கிடைக்கவில்லை. இச்சம்பவத்தை சபினாவிடம் கூறியவர், தனது பிள்ளைக்கு நீங்களே கற்பிக்க முடியுமா? என கேட்டார்.  சொந்த துக்கத்தை மறந்து கல்விப்பணியை கையில் எடுத்தார் சபினா. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சஃபி காருண்ய அறக்கட்டளையை உருவாக்கி,  சிறுவர்களுக்கான பள்ளியை தன் வீட்டு காரேஜில் தொடங்கினார். 




இங்கு படிக்கச் சேர்ந்த முதல் மாணவி சோமியா. பின்னாளில் இப்பள்ளியில் படிக்க சேர்ந்த பதினைந்து சிறுமிகளும் வீட்டுவேலை செய்பவர்களின் பிள்ளைகள்தான். இன்று ஐநூறு குழந்தைகளுக்கு மேலாக கல்வியமுது ஊட்டியுள்ளார் சபினா. "கல்வி என்பது ஒருவரை தற்சார்பாக சிந்திக்க வைப்பதோடு அவர்களை மனிதநேயமிக்க மனிதர்களாக உருவாக்குவது அவசியம்." என்கிறார் சபினா. மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆடைகளை வழங்குவதோடு அவர்களுக்கான தினசரி உணவையும் வழங்கி வருகிறார் சபினா. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளியை சற்று பெரிய இடத்திற்கு மாற்றியுள்ளவருக்கு கல்விப்பணி தடைபடாமல் இருக்க பல்வேறு தொழில்நிறுவனங்கள் சபினாவுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. 

 

கருத்துகள்