குப்பை உணவுகளை அடையாளப்படுத்தும் இந்திய அரசு!

 

Man, Stress, Male, Face, Adult, Young, Person


குப்பை உணவுகளுக்கு ரெட் சிக்னல்


 உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் கொண்ட பொருட்களை சிவப்பு நிற லேபிளில் அடையாளப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்(FSSAI), கடைகளில் விற்கும் உணவுப்பொருட்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. உணவு குறித்த கருத்தரங்கில் புதிய உணவுப்பொருட்களுக்கான விதிகளை எஃப்எஸ்எஸ்ஏஐ ஆலோசகர் அனில் அறிவித்தார். 

விதிகள் புதிது

இதன்படி, உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்கள் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படும். இவ்விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவிருக்கின்றன. 

தற்போது சந்தையில், விற்கப்படும் உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இனி கூடுதலாக அவற்றில் இடம்பெற்றுள்ள பகுதிப்பொருட்களைப் பொறுத்து அவற்றின் நிறமும் மாறுபடும். 

உடல்பருமன், வேதிப்பொருட்கள் ஆகியவை கொண்ட உணவுப்பொருட்களால் மக்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கலோரிஅட்டவணை கூட உணவுப்பொருள், மக்கள் உடல்நலனுக்கு ஏற்றதா என்று அடையாளம் காண உதவவில்லை. புதிய முறை, மோசமான உணவுப்பொருட்களை துல்லியமாக அடையாளம் காண உதவும் வாய்ப்புள்ளது.  

”தூய்மையான, இயற்கை பகுதிப்பொருட்கள் கொண்ட சர்க்கரையற்ற பொருட்களை அடையாளம் காணும் முயற்சி இது. இம்முறையில் மக்கள் உடல்நலனுக்கு தீங்கான பொருட்களை எளிதாக அடையாளம் காணலாம். உணவுத்தயாரிப்பு நிறுவனங்கள் இனிமேல் பொய்கூறி மக்களை ஏமாற்ற முடியாது” என்றார் அனில். குறிப்பிட்ட தரநிர்ணயத்திற்குள் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வராவிட்டாலும் அவையும் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படவிருக்கின்றன. 

இந்தியாவின் திட்டம்

புதிய விதிகளின்படி சர்க்கரையின் மூலம்  10 சதவீத ஆற்றல் கிடைத்தால், அந்த உணவுப்பொருள் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படும். உணவுப்பொருட்கள் மற்றும் குடிபானங்களில் தலா 100 கிராம் /மி.லி எடுத்து சோதிப்பர். 

இதில் இருவகை கொழுப்பு, சோடியம், சர்க்கரை ஆகியவை சோதிக்கப்பட்டு சிவப்பு நிற லேபிள் வழங்கப்படும். இதில் செயற்கை கொழுப்பான டிரான்ஸ்ஃபேட்(Transfat) மூலம் கிடைக்கும் 1 சதவீத ஆற்றலும் கூட சிவப்பு நிற லேபிளில் அடையாளப்படுத்தப்படும்.  

இனி, வேதிப்பொருட்கள், கொழுப்பு கொண்ட உணவுப்பொருட்களின் பிராண்டுகள் நேர்மறையான, பசுமை நிற லோகோக்களை பயன்படுத்த முடியாது. வேதிப்பொருட்கள் இருந்தாலும் சில உணவுப்பொருட்களில் வைட்டமின்கள், சத்துக்களை விளம்பரப்படுத்துவது இனி மாற்றப்படுவது கட்டாயம். 

உணவுப்பழக்க வழக்கங்கள் 

கலோரியற்ற சர்க்கரை, விலங்குகளிடமிருந்து பெறும் ஆதாரப் பொருட்கள், உடனடியாக சூடு செய்து, பரிமாறி உண்ணும் உணவுப்பொருட்கள் என உலகளவில் உணவுகளை உண்ணும் முறை மாறிவருகிறது. 

பருப்புகள், பழங்கள், காய்கறிகளை மக்கள் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். வீடுகளில்  உணவுகளை தயாரித்து பரிமாறும் நேரம் வெகுவாக குறைந்துள்ளது. 

உலகநாடுகளில் புகையிலை சார்ந்த பொருட்களில் சட்டப்படி எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.  

சிலி நாட்டில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகமுள்ள உணவுகளில் பாக்கெட்டில் முன்பகுதியில் பெரிதாக எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்டிருக்கும். 

கனடா, சிலி, இஸ்ரேல், பெரு, உருகுவே ஆகிய நாடுகளில் எச்சரிக்கை வாசகங்களை பிரசுரிப்பது பற்றிய உறுதியான சட்டங்களைப் பின்பற்றி வருகிறார்கள். 

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் எச்சரிக்கை வாசகங்களை நேர்மறையான லோகோக்களோடு(Statutory positive) வெளியிடுகின்றனர். 

"புதிய விதிமுறைகளின் மூலம் குழந்தைகளை குறிவைக்கும் உணவுப்பொருட்களை எளிதில் கண்காணித்து முறைப்படுத்த முடியும்" என்கிறார் அறிவியல் மற்றும் சூழல் மையத்துறையைச் சேர்ந்த சுனிதா நரைன்.

தகவல்:TOI

  



 


கருத்துகள்