வீக்எண்ட் பிட்ஸ்! கண்டம் தாண்டி திருடு










காணாமல் போன ரயில்பெட்டிகள்!

 

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் புக் செய்யப்பட்ட சரக்கு ரயில்பெட்டிகள் திடீரென மிஸ்ஸாகி 3.5 ஆண்டுகளுக்கு பிறகு சாவகாசமாக மீட்கப்பட்டுள்ளன.

 

2014 ஆம் ஆண்டு நவம்பரில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து உ.பியின் பஸ்தி மாவட்டத்திற்கு சரக்குகளை அனுப்ப ரயில் பெட்டி எண்.107462 பதிவு செய்யப்பட்டது. ஆனால் சரக்கு உ.பி சென்று சேர்ந்தது இவ்வாண்டுதான். இதனால் சரக்குகளை அனுப்பிய இந்தியன் பொட்டாஷ் லிட்., நிறுவனத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து நிறுவனம் ரயில்வேக்கு டஜன் கணக்கில் கடிதம் எழுதி புகார் கொடுத்தும்  பருப்பு வேகவில்லை. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சாவகாசமாக கிடைத்துள்ள சேதமடைந்த சரக்குகளை ஓனர் ராமசந்திர குப்தா எப்படி ஏற்பார்? "சரக்குகளை அனுப்பியுள்ளவர் பெட்டிகள் தன்னுடையது என ஏன் முதலிலேயே ரயில்வேயில் புகாரளித்து கோரவில்லை. அப்படி கூறியிருந்தால் முதலிலேயே பெட்டியிலுள்ள சரக்குகளை பெற்றிருக்கலாமே" என பதிலளித்துள்ளார் கிழக்கு ரயில்வேயைச் சேர்ந்த அதிகாரி சஞ்சய் யாதவ். ரயில்வே நிர்வாகம் மீது விரைவில் வழக்கு பதிவு செய்ய உர நிறுவனம் ஆலோசித்து வருகிறது 

2



தலையில் நூறு புழு!
 
புது டெல்லியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு கடுமையான தலைவலிதான் பிரச்னை. அதோடு நினைவிழப்பு, மூச்சுத்திணறல் வாட்ட தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். டெஸ்ட் செய்து பார்த்தால் மூளையில் நூறு  நாடாப்புழு முட்டைகள் இருப்பதைக் கண்டு டாக்டர்களுக்கே மயக்கம் வராத குறை.
 
த்ருஷிகா என்ற டெல்லி சிறுமி கிருமிகளால் தாக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். "நாடாப்புழுக்கள் தாக்கிய உணவை சிறுமி உண்டதால் ஏற்பட்ட தலைவலி இது. ஸ்கேனில் மூளையில் தெரிந்த வெள்ளைப்புள்ளிகள் நாடாப்புழுக்கள் இட்ட முட்டைகள். அதன் விளைவாகவே சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு தீவிரமாகியுள்ளது" என்கிறார் மருத்துவர் பிரவீன் குப்தா. நரம்பு மண்டலத்தை நாடாப்புழு தாக்கியதால் சிறுமி தலைவலி அதிகரித்து ஒருகட்டத்தில் சுயநினைவையே இழந்துள்ளார். புழுக்களும் முட்டைகளும் சிகிச்சை மூலம் பெருமளவு வெளியேற்றப்பட்ட நிலையில் சிறுமி தற்போது உடல்நலம் பெற்று வருகிறார்.   
 
3

கண்டம் தாண்டி திருடு!
 
பெங்களூரு நகரங்களில் பிளான் போட்டு திருடிய கொலம்பியா நாட்டு திருடர்களின் கேங்கை போலீஸ் அரஸ்ட் செய்து மக்களின் பாராட்டுகளை அள்ளியுள்ளது.
 
பெங்களூருவின் ஜெயநகர், ஜேபி நகர், சதாசிவ நகர், ஹெஎஸ்ஆர் லே-அவுட் ஆகிய இடங்களில் கைவரிசை காட்டிய இந்த பாரின் திருட்டுக்கும்பலின் பிளான் லிஸ்ட்டில் முன்னாள் முதன்மை செயலர் கௌசிக் முகர்ஜியின் பெயரும் இருந்துள்ளார். ஆன்லைனில் வீட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்கான பொருட்களை வாங்கியவர்கள் அதனை விற்பதற்கும் ஆன்லைனை நாடியதுதான் பிரச்னை. சிசிடிவியில் பலமுறை பாரின் கும்பலை பார்த்தும் சந்தேகம் வராத போலீசுக்கு ஆன்லைன் விளம்பரத்தை பார்த்ததும் டவுட். உடனே பொருட்களை வாங்குவது போல பேசி, 950 கிராம் தங்க நகைகள், வெளிநாட்டு கரன்சி, காஸ்ட்லி கடிகாரங்கள், பேனாக்கள், இரண்டு கார்கள் என மீட்டுள்ளனர்.