தேசத்தின் நலனில் அரசியல் சமரசமில்லை மோடி






"தேசத்தின் நலன் என்று வரும்போது அதில் நாங்கள் அரசியல் செய்வதில்லை" - மோடி






புதிய இந்தியா புதுமைத்திறன்களையும் கல்வியையும் கொண்ட சிறந்த சமூகமாக இருக்கும் என்பது சரி. ஆனால் நாம் உயர்கல்வியில் உயரிய தரத்தை இன்றுவரை அடையவில்லையே? அப்போது புதிய இந்தியாவில் தரமான உயல்கல்வி என்பது கனவுதானா?

புதிய இந்தியாவில் இளைஞர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உயர்கல்வியை பெறுவதே எனது கனவு. நாட்டினை கட்டமைக்கும் திறன்களை அவர்கள் கொண்டிருப்பார்கள். ஐஐடி ஐஐஎஸ் தவிர பிற தனியார் நிறுவனங்களில் கல்வியின் தரம் ஏற்புடையதாக இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் மாறும் என நம்புகிறேன்.

பொது,தனியார், தொழில்துறை என அனைவரும் இணைந்தால்தான் கல்லூரிகளிலிருந்து கனவுகளுடன் வெளிவரும் மாணவர்களை வளர்ச்சி பெறச்செய்யமுடியும். தொழில் தொடங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது வரையிலான அரசு வழங்கும் வசதிகளை எளிதில் பெறும் சூழல்களையும் எங்கள் அரசு ஏற்படுத்தி வருகிறது. சிவப்பு நாடாமுறை, ஊழல், அநீதியான முறைகளை தற்போது சீரமைத்து வருகிறோம். ஸ்வயம் திட்டத்தின் கீழ் 15 லட்சம் ஆசிரியர்களுக்கு உயர்கல்விப்பயிற்சி அளித்துள்ளோம்.  சந்தையில் தேவையான வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் மாணவர்களுக்கு கல்வியையும் திறன் வளர்ப்பு வழிகாட்டுதலையும் வழங்குவதே முதல் பணி.


அசாமில் மக்கள் தொகை பதிவேடு மூலம் பிரிவினை அரசியல் செய்வதாக பாஜக மீது விமர்சனங்கள் கிளம்புகிறதே?

1972 ஆம் ஆண்டு இந்திரா முஜீப் ஒப்பந்தம், 1985 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றை காங்கிரஸ் எதற்கு செய்தது? வாக்கு வங்கி அரசியலுக்குத்தானே?  ஆனால் அகதி மக்களை வெளியேற்றும்விதமான எங்கள் கட்சி செயல்பாட்டை காங்கிரஸ் பிரிவினை என விமர்சிக்கிறதில் என்ன நேர்மை உள்ளது?  மக்கள் பதிவேடு என்பது  அரசியலுக்கானது அல்ல; மக்களுக்கானது. உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

நாட்டின் குடியுரிமை மற்றும் இறையாண்மை  காக்கப்படவேண்டும் என்பதை இந்தியர்கள் ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன். எதிர்கட்சிகள் முதலில் நீதிமன்ற கொலேஜியத்தை மறுத்தவர்கள் இன்று உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். தேசம் என்று வரும்போது அதில் அரசியலுக்கு சற்றும் இடமில்லை.

வங்கி மோசடியில் நீரவ் மோடி, லலித்மோடி, விஜய் மல்லையா ஆகியோர் தப்பித்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களை திரும்ப இந்தியாவுக்கு கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா?

முந்தைய அரசு எளிதில் கடன்வாங்கிவிட்டு தப்பிச்செல்லும்படி விதிகளை இயற்றியிருந்ததுதான் பிரச்னை. மக்களின் பணத்தை திருடிய யாரும் தப்பிக்க முடியாது என்பதே எங்கள் அரசின் லட்சியம். பொருளாதார மோசடி குறித்த விதிகளை தற்போது வெகுவாக சீர்திருத்தியுள்ளோம்.

2019 ஆம் ஆண்டு பாஜக வெல்லமுடியும் என நம்புகிறீர்களா?

நாங்கள் நான்கு ஆண்டுகளாக செய்த பணிகளை மக்களுக்கு முன்பு கூறிவெல்வோம். பிற கட்சிகளைப் போல வெற்று சுலோகன்களை சொல்லி அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. முந்தைய முறையை விட அதிக சீட்டுகள் பெறுவதோடு மக்களின் அன்பையும் பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது.

-தமிழில்: ச.அன்பரசு
நிருபர்குழு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.